புதன், 18 டிசம்பர், 2019

இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார்?

வகுப்புப் பிரிவினை வந்தது எப்படி?- மனுதர்மத்தின் சரிதையும் அதன் கொடுமையும் - ஓர் தமிழறிஞரின் ஆராய்ச்சி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

ஆரியர் வருகையால் தமிழர் சீர் குலைந்து ஆரிய ஆதிக்கத்திற்கு அடிமையாயினரென்றும் அதனை நீக்கவே தமிழ்நாடு தமிழருக்கேயென்னும் கிளர்ச்சி தோற்றுவிக்கப் பட்டிருக்கிறதென்றும் நாம் இன்று கூறுவதை கூட சுயநல மென்றும் வகுப்பு வாதமென்றும் கூறும் தேசீயவாதிகளென் போர்களின் மயக்கம் தெளிவதற்காக சுமார் 10 ஆண்டுகட்கு முன் ஆதிதிராவிடர் முற்கால தற்கால நிலைமை என்ற தலைப்புடன் திருநெல்வேலி ஜில்லா மேலப்பாளையம் தோழர் மா. பெ.க.அழகர்சாமி அவர்களால் பண்டைத் தமிழர் நிலையினையும், ஆரியர் சூழ்ச்சிகளையும் விளக்கி கோலார் தங்கவயல் தமிழன் பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையில் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்.

இந்தியாவின் பூர்வீகக் குடிகள்

இற்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் தற்கால இந்தியாவென்று அழைக்கப்படும் இத்தேசம் பெருங்காடு களடர்ந்த ஓர் பூபாகமாயிருந்தது. இப்பெருங்கானகத்துக்கு ஆதாரமாகிய மலைகளிலும், குகைகளிலும் "கோலர்" என்னும் ஓர் சிறு வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மனிதர்கள் கண்ணுக்குத் தென்படாமலே வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிறிதும் நாகரீகமில்லாதவர்கள். இவர்கள் மனிதர்க ளோடு நெருங்கிப் பழகுங்கால், இலை, தழை முதலியவை களைக் கொடிகளில் கோர்வையாகக் கட்டி இடையில் (இடுப்பில்) ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள். மற்ற காலங்களில் சுயேச்சையாகத் திரிவார்கள். இவர்கள் கரிய நிறத்தவர்கள்... காய், கனி, கந்தமூலாதிகளைப் உண்பார்கள். தேனருந்துவார்கள். மலையில் கிடைக்கும் மிருகங்களின் தந்தம், எலும்பு, பலவர்ணக்கற்கள் முதலியவற்றை அழகு பெற வரிசையாகக் கோர்த்து ஆபரணமாக காதுகளிலும், கைகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசுவது "கா', "கூ"ஜெ'னுஞ் சப்தத்தோடு கூடிய ஓர் பாஷை யாகும். இவ்வகுப்பைச் சேர்ந்த குடிகளை இக்காலத்திலும் குடகு நாட்டையடுத்துள்ள பெரிய மலைகளிலுள்ள குகை களில் காணலாம். சிற்சில இடங்களில் கோலர்களை திராவிடர் அடக்கியாண்டு வந்திருக்கின்றனர்.

மற்றொரு வகுப்பார்

இந்நாட்டின் பெருங்காடுகளின் சிற்சில இடங்களிலும், கிழக்கு சமுத்திரக்கரையையடுத்துள்ள சமபூமிகளிலும், கங்கை நதியின் மருங்கிலுள்ள தாழ்ந்த சமவெளிகளிலும் மற்றோர் வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மிகுந்த உழைப்பாளிகள், நாகரீகமுடையவர்கள். பஞ்சால் நெய்யப் பட்ட வஸ்திரங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார் கள். மாநிறம் போன்றவர்கள். நிலங்களை உழுது சமைத்து பயிரிட்டுதானியங்களை உண்பார்கள். பசுவின் பாலருந்து வார்கள். முத்து, பவழம், முதலியவற்றை அணியாகக் கோர்த்து ஆபரணமாக கழுத்தில் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசும் பாஷை தமிழ், இவ்விரண்டு வகுப்பாரே இந்நாட்டின் பூர்வீகக்குடிகள்.

ஆரியர்வருகை

இன்னவர்களின் வாழ்க்கை இவ்வாறிருக்க, மத்திய ஆசியாவினின்றும் இன்னொரு சாரார் வடமேற்குக் கண வாய்களின் வழியாய் இந்நாட்டில் வந்து குடியேறினார்கள். இவ்வகுப்பார் குளிர்ச்சியான பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்களான படியால் திடகாத்திரமாயிருந்தார்கள். ஆட்டு உரோமங்களால் நெய்யப்பட்ட கம்பளங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள், புது நிறத்தவர்கள், ஆடு, மாடுகளை மந்தை மந்தையாக வளர்த்து வந்தனர். குளிர்ச்சியைப் போக்கி உஷ் ணத்தைத் தருவதான மாமிசத்தை சமைத்து உண்பார்கள் "சோமபானம்" என்று சொல்லப்படும் ஓர் வகைச் செடியிலிருந்து இறக்கப்படும் மது (லாகிரியைத் தரும் வஸ்து)வை அருந்துவார்கள். வட நாடுகளில் கிடைக்கும் உருத்ராட்சத்தைக் கோர்த்து சிகை யிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள். மீசையுடை யவர்கள். ஆயுதந்தாங்கியவர்கள். தெய்வப்பற்றுள்ளவர்கள். தங்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டும் வந்தனர். இவர்கள் நிலையான குடிகளல்ல! அடிக்கடி தங்கள் வாசஸ்தானத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்கள் வாசஸ் தானத்தை மாற்றிக் கொள்ள சாதகமான குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாஷை சமஸ்கிருதம். இவர்கள் வட திசையிலிருந்து வந்து குடியேறினவராதலால் தங்களை வட நாட்டார்" அல்லது "ஆரியர் என்றும், தங்கள் பாஷையை வடமொழி" அல்லது "ஆரியம் ! என்றும், இந்நாட்டு பூர்வீக குடிகளை தென்றேயத்தவர் அல்லது திராவிடார்' என்றும் அவர்கள் பாஷையைத் தென்மொழி அல்லது "திராவிடம்", என்றும் வழங்கிவந்தனர்.

தேவகாலம் -- ஆரிய மதம்

ஆரியர்கள் இந்நாட்டில் வந்து பூர்வீக குடிகளைக் கண் ணுற்றதும் தாங்களும் அவர்களைப் போலவே நிலையான வாசஸ்தானத்தை ஏற்படுத்த ஆவல் கொண்டு கங்கை நதியின் கரையையடுத்துள்ளவர்களோடு சண்டையிட்ட னர். இவர்கள் ஆயுதப் பயிற்சியுள்ளவரானதாலும், பூர்வீக குடிகளிடம் சண்டைக்கு வேண்டிய ஆயுதங்களில்லாமை யாலும் இலகுவில் வெற்றி பெற்றனர். ஆரியர்கள் எழுதும் வன்மையுடையவர்களாதலின் இந்த சண்டையை "தேவா சுர யுத்தம்" என்று வர்ணித்து ஸ்கந்த புராணத்தை வரைந்து உள்ளார்கள். இவர்கள் கங்கை நதியையடுத்துள்ள தாழ்ந்த சமவெளிகளில் பாஞ்சாலம், அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம், அயோத்தி, கண்டகி, கோசலம், மிதுலை, கோசி முதலிய பெயரோடு பல பட்டணங்களை நிருமாணித்தனர். ஆண்டு கள் ஓராயிரம் கடந்தன. இவர்கள் ஜனத்தொகை அதிகமாகி யது. தலைமை வகிப்பதற்குப் பிராமணர்கள் என்றழைக் கப்படுவோர் இக்காலத்தில் பெருமுயற்சி செய்து வருகிறது போலவே அக்காலத்திலும் தலைமை வகிப்பதற்காக ஆரியர்களிடையில் பிளவுகளேற்பட்டு சச்சரவுகள் நடந்தது. முடிவில் பெருஞ்சண்டையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியையே "வியாசர்" என்னும் காரணப் பெயர் பூண்ட ஓர் ஆரியர் கட்டுரையாக வரைந்து "பாரதம்" என வழங்கினார். இன்னும் இந்த வியாசர் என்பாரால் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் எழுதப்பட்ட காலமுமிதுவேயாகும்.

ஆரிய-திராவிட கலப்பும்

நான்கு ஜாதிப் பிரிவினையும்

ஆரியர்கள் ஜனத்தொகை அதிகமாய்விட்டபடியால் அவர்கள் உணவுக்கு வேண்டிய மாமிசம் கிடைக்கவில்லை. அவர்கள் பின்னும் தெற்கே சென்று பூர்வீக குடிகளிடையில் பலவித பாட்டுகள் பாடியும், அதற்கேற்ப நடித்தும், சம்பிர தாயமாகப் பேசியும் அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள். இதுவே 'நாடகம்' எனப்படுவது. 'ஆரியர்கள் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பதே போல் பூர்வீக குடிகள் உவந்த ளிக்கும் உணவுப்பொருள்களையேற்றும் உண்டும் காலங் கடத்தி வந்தனர். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்பதே போல் ஆரியர்கள் தங்கள் மாமிச உணவை அனாவசியம் - அனாச்சாரமெனத் தள்ளி, தானிய உணவை பிரியமாய் உண்ணவாரம்பித்தனர். பூர்வீக குடிகள் உணவுப் பொருள்கள் கொடுக்க மறுத்த விடத்து அவர் களிடும் பயிர்களை அறுத்தும், தானியங்களை கொள்ளையிட்டும் வந்தனர் ஆரியர்கள். ஆரியர்கள் உபத்திரவங்களைப் பொறுக்க முடியாத பூர்வீக குடிகள் தங்களைத் தாங்களே காப்பாற்றவேண்டி, ஆயுதங்களைத் தயாரித்தனர்.

வகுப்புப் பிரிவினை

இவ்வாறு பூர்வீக குடிகள் (பூர்வீக திராவிடர்கள்) தங்களுடைய பலத்தை அபிவிருத்தி செய்து கொண்டதும், பார்த்தார்கள் ஆரியர்கள், தங்களுடைய திருட்டுத்தனம் நடவாதெனக் கண்டனர். ஆகவே ஒரு சில பூர்வீக குடி களோடு சமாதானம் செய்து கொண்டனர். அத்துடனிருக்காது திராவிடர்கள், ஆரியர் தெய்வங்களை வணங்கும்படியாக வும் செய்து வந்தனர். கலப்பு மணமும் செய்து கொண்டனர். ஆரிய-திராவிடர்கள் (கலப்பு ஜாதியார்) பெருங்குழுவினராய் விட்டமையாலும், சுயநலங்கருதிய ஆரியர்கள் அவர்க ளைக் கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள் ளும் பொருட்டும் அவர்களைப் பிரம்ம, க்ஷத்திரிய , வைசிய, சூத்திர எனும் நான்கு பிரிவினராகப் பிரித்து தாங்கள் முதல ணியினின்று வாழ்க்கை நலம் பெற்றனர்.

பூர்வீக திராவிடர்களும் பவுத்த மதமும்

ஆரியர்கள் - வஞ்சக சூழ்ச்சிக்கு இடங்கொடாத பூர்வீக திராவிட மக்கள், கலப்புற்ற ஆரிய-திராவிடர்களை நீக்கி தனியாக வாழ்ந்தனர். தென் பாகத்திலுள்ள பூர்வீக திராவிடர் களையும், மத்திய பாகத்திலுள்ள ஆரிய - திராவிடர்களையும் பூர்வீக திராவிட அரசர்களே ஆண்டு வந்தனர். வருடங்கள் ஓராயிரம் சென்றன. (கி.மு. 1000-0) மலையாளம், கொச்சி முதலிய நாடுகளை ஆட்சி செய்து வரும் மன்னர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரங்களையே (நட்சத்திரங்களின் பெயர்களையே) தங்கள் பெயராக ஏற்றுக்கொள்ளுவது போல பூர்வீக திராவிட (தமிழ்) அரசர்களிடையில் அவர்கள் பிறந்த வருஷத்தின் பெயரையும் அவர்கள் பெயராக வழங்கி வந்தனர் ஒரு சிலர். இஃதிவ்வாறாக மத்திய பாகத் திலுள்ள ஆரிய-திராவிடர்களை - அரசாண்டு வந்த சாக்கி யர் மரபிலுதித்த மன்னன் சுத்தோதனர் என்பாருக்கு (கி.மு. 550) சித்தார்த்தி வருடம் ஓர் ஆண்மகவு பிறந்தது. இக் குழந்தைக்கு சித்தார்த்தர் என நாமகரணஞ் சூட்டினர். இவர் வாலிப வயசையடைந்ததும் ஆரிய திராவிடர்களால் செய்யப்படும் பலி, மிருகவதை முதலியவற்றைக் கண்டு அவற்றை தடுப்பதற்கான வழிகளைச் சிந்தித்தார். முடிவில் பூர்வீக திராவிடர்களின் கொள்கையை ஆதாரமாகக் கொண்டே சில அரிய உபதேசங்களை ஜனங்களிடையில் போதித்தார். இவரை எல்லாரும் பின்பற்றினார்கள். இவர் வெகு காலம் ஜீவந்தராய் வாழ்ந்தபடியால் இவரை பெரிய கிழவனென்று பொருள்படும் பவுத்தர் (புத்தர்) என்று அழைத்தனர். இவர் உபதேசத்தை ஏற்றுக் கொண்டவர்களை பௌத்த சமயிகள் (புத்த மதத்தினர்) என்றும் வழங்கி வந்தனர். புத்த மதம் தலை சிறந்து நின்றது. இன்னாளில் தென்னாட்டில் இராவணன், மகாபலி, நந்தன் முதலிய பூர்வீக திராவிட மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களை வஞ்சகமாக ஆரியர்கள் கொன்று அன்னவர்கள் நாடுகளை யும் ஆரியர்கள் கைப்பற்றின கதைகளை விரிக்கிற்பெருகு மென விஞ்சி விடுத்தனம். இவ்வாறு ஆன நிகழ்ச்சிகள் புராணங்களாகவும் பிற்காலத்தில் சங்கராச்சாரி என்பவரால் மகாவிஷ்ணுவின் பத்து அவதார திருவிளையாடல்களாகவும் கற்பனா சக்தியுடன் எழுதப்பட்டன.

- தொடரும்

- விடுதலை: 18.1.1940

- விடுதலை நாளேடு 18 12 19

18.12.2019 அன்றைய தொடர்ச்சி

வினாயக புராணம் கூறுவது

மேலே சொல்லப்பட்ட ஸ்கந்த புராணம், வேதம், பாரதம், இராமாயணம், பாரதம் முதலியகட்டுரைகளால் பூர்வீக திராவிடர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பார்க்கிலும் அதிகமான தீமையைத் தரும் நூல் வேறொன்றுளது. . அதனைப் பற்றி சிறிது கூறுவோம். ஆரியர்களே எல்லாரிலும் மேம்பட்டவர்கள்; அவர்களே கடவுளை வணங்கத் தகுதியுள்ளவர்கள்; ஏனையோர் ஆரியர்களையே வணங்க வேண்டும் என வியாசர் என்பவரால் எழுதப்பட்ட நூற்கள் அனந்தமாயினும் அவற்றுள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பற்றுடையவையாவிருப்பதையுணர்ந்த ஆக்கியோர் இறுதியாக எழுதப்பட்ட வினாயக புராணத்தில் கூறியிருப்ப தை நம் வாசகர்கள் நன்கறியுமாறு இங்கு குறிப்பிடுகிறோம். அவையாவன, "நம்மால் எழுதப்பட்ட நூற்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்ட கொள்கையுடையவையாயிருப்பது எனது குற்றமன்று. அவைகள் அவ்வக்காலங்களில் கால வேறுபாட்டுக்கும் ஜனங்களுடைய மனமகிழ்ச்சிக்கும் தக்கவாறு எழுதப்பட்டவைகளாகும். ஆதலால் நூற்களை வாசிக்கும் வாசகர்களே உண்மையை ஆராய்ச்சி செய்து நடந்து கொள்ளல் வேண்டும்.

மனுதர்ம வரலாறு

ஆதலால் பிற்காலங்களில் நூலாராய்ச்சி வல்லுநர் ஒருக்கால் இக்குற்றங்களைக் கண்டு ஆரியர்களால் எழுதப்பட்ட நூற்களனைத்தும் வெறுங்கட்டுரைகளெனத் தள்ளிவிடுவாராயின் அக்கால ஆரியர்களின் சந்ததிகளுக்கு அத்துணை மேம்பாட் டுக்கு வழியில்லையென்றும் ஆரி யர்கள் சூழ்ச்சியை பெருங்கூட்டத்தினரான கலப்புற்ற ஆரிய திராவிடர்களும் கலப்பற்ற பூர்வீகக் குடிகளும் அறிந்து கொண்டால் ஆரியர் சந்ததிகளுக்கு துன்பமுண் டாகுமென்றுங்கருதிய ஆரியர்கள் தங்கள் சந்ததிகளை சுகமாக வைக்கவேண்டி எக்காலத்திலும், யாவராலும் தள்ளற்பாலதல்லாத ஓர் நூலை இயற்றவேண்டுமென வெண்ணினர். அவ்வெண்ணத்துக்கு, "கூத்துக்கு ஏற்ற கோமாளி" என்பதே போல், அக்காலத்தில் ஆரியர்களுக்கு தலைவராயிருந்து பாலனம் பண்ணி வந்த ஏழாவது மனு வைசுதன் என்பவருமிசைந்தார். இவர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு பல ஆரிய சிற்றரசர்களையும் ஆண்டு வந்தார். அரசர்களில் முதன்மை பெற்றவர்களுக்கு 'மனு' வென்ற பட்டம் அக்காலத்து வழங்கி வந்தமையால் இவரும் வைசுத மனுவென்னும் பெயரோடு ஆட்சி புரிந்து வந்தார். பிராமணர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் பூஜை இவரையே குறிக்குமாதலால் இவருக்கு சிரார்த்தமனு வென்னும் காரணப்பெயர் வழங்கலானது. இவர், சுயநலங்கருதிய ஆரியர்கள் பலரை அங்கத்தினராகக் கொண்ட ஓர் ஆலோசனை சபையை ஸ்தாபித்து ஓர் நூலை எழுதினார்.

அதில் கூறப்பட்டவை

இந்நூலில், பிராமணர் எனப்படுவோரை எல்லாரும் வணங்க வேண்டும்; அவர்களுக்கு திருப்தியான உணவளிக்க வேண்டும்; பின்னர் அவர்கள் கருதியவற்றால் சந்தோஷிப்பிக்க வேண்டும்; அவர்களுக்கு எள்ளத்தனை துன்பமியற்றியவர்களும் அவர்களிஷ்டப்படி நடவாதவர் களும் கடுந்தண்டனையடைய வேண்டும்; பிராமணர்க ளுக்கு மற்றவர்களால் துன்பமேற்பட்டவிடத்து அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசர்களுடைய தயவு இன்றியமை யாததுவாதலால் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ஆயுதப்பயிற்சி பெற்றவர்களை சத்திரியர்கள் எனக்கூறி பின்னுள்ள இரு வகுப்பினரும் சத்திரியர்களை வணங்க வேண்டும்; அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று எழுதி வைத்தனர்.

பிரித்தாளும் தந்திரம்

இந்நூலில் பூர்வீக திராவிடர்களை இம்சிப்பதற்காகவும் அவர்களினின்றும் ஆரியர்-திராவிடர்களை விரோதப்படுத் தவும் பிரித்தாளுந் தந்திரம் கையாளப்பட்டது. ஆரிய-திராவிடர்களை (தாங்களுமுட்பட) நான்கு வர்ணமாக வகுத்து வர்ணாசிரமப்படி சட்டம் அல்லது நீதி ஏற்படுத்திய இந்நூலில் பூர்வீக திராவிடர்களை "நீசர்" என்றும், "தீண்டப் படாதவர்கள்" என்றும் ஏளனமாக எழுதியதுமின்றி மனித வர்க்கத்தினின்றும் விலக்கி விட்டார்கள்.

சகோதரர்களே! வாசகர்களே!! பார்த்தீர்களா ஆரியன் தந்திரத்தை இக்காலத்தும் பாண்டித்யமடைந்த விற்பனர் களால் வேதம், இதிகாசம், புராணம் யாவும் பொய்மையுடைத் தெனக் கண்டறியப்பட்ட இக்காலத்தும், காருண்ய ஆங்கில அரசாங்கத்தாரால், "இந்துக்களால் எழுதப்பட்டவைகள்" வீண் கட்டுரைகள் எனத் தள்ளிவிடப்பட்ட இக்காலத்தும் ஆரிய சூழ்ச்சியால் எழுதப்பட்ட மனு நீதியை அறவே தள்ளிவிட முடியாமல் அந்த சட்டத்தின் பெரும்பாலும் இன் னும் அமுலிலிருந்து வருகிறது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்றவாறு மனு நீதி இயற்றப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவும் பழங்கதைகளில் ஒன்றாய்விட்டது. இதன் ஆயுளுங்கிட்டிவிட்டது. இரவும் அந்த நீதி நூல் ஒரு தலைச் சார்பாக எழுதப்பட்டதென்பது வெள்ளிடை மலையெனத் தெள்ளிதில் விளங்குகிறது. ஆத லின் இக்காலத்தில், நவீன நாகரீகத்திலீடுபட்டு வருமிக்காலத் தில் பழங்கதையான மனு நீதியைக் கையாளுவது நியாய மானதன்று என உணர்ந்து தக்கன செய்யத் தமிழர்முன் வருவாராக.

- விடுதலை: 18.1.1940

 -  விடுதலை நாளேடு, 20.12.19