செவ்வாய், 31 டிசம்பர், 2024

திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

 


 திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

2024 நவம்பர் 1-15 முகப்பு கட்டுரை

திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்று மோசடிப் பிரச்சாரம் செய்யும் போக்கு ம.பொ.சி. காலத்திலேயே தொடங்கிவிட்டது. திராவிடத்தை எதிர்ப்பவர் இருவகை. ஒன்று, ஆரியத்திற்கு சேவகம் செய்யும் தமிழர்கள். அவர்கள் உண்மை நன்கு தெரிந்தும் ஆரியத்தை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் விசுவாசியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றவர்கள். இரண்டு, திராவிடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்று அறியாது, ஆரிய அடிவருடிகள் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிச் செயல்படுகிறவர்கள்.

முதலில் தமிழர், திராவிடர் என்ற இரண்டின் வரலாற்று உண்மையை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, ஆரியர்கள் இந்தியாவிற்குள் பிழைப்பிற்காக நுழைந்து பரவி வாழத் தலைப்படுவதற்கு முன்னமேயே, கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்த தொல்குடி மக்கள் தமிழர்கள். உலகில் மற்ற மக்கள் நாகரிகம் பெறுவதற்கு முன்பே நகர நாகரிக வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
ஆரியர்கள் வருவதற்குமுன் இம்மண்ணில் முழுக்க முழுக்க தமிழர்களே வாழ்ந்தனர். ஆரியர்கள் இம்மண்ணில் நுழைந்தபோது அவர்களுக்கென்று எழுத்து வடிவிலான மொழி இல்லை.

எச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞரும், ‘ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்து முறை இருந்ததில்லை’ என்று ‘A Short history of the World’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கி.மு.முதல் நூற்றாண்டு வரை கல்வெட்டு களிலும் நாணயங்களிலும், பிற தொல்லியல் ஆதாரங்களிலும் காணப்படாமலிருந்த சமற்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத எழுத்துகளால் எழுதப்பட்டும், கி.பி. 350க்குப் பின் பிராகிருத இலக்கியத்தை மொழிபெயர்த்தும் வளர்ந்தது. இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான் இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமற்கிருத மொழியில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3 பாரதீய வித்யாபவன் வெளியீடு _ சார்ஜ் எல்.ஆர்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழி மரபுகளின் ஒப்பாய்வு நூல்.)

சமற்கிருத மொழியின் தோற்றம், அமைப்புப் பற்றி ஆராய்ந்த கால்வின் கெபார்ட் (Calvin Kephart) ‘‘இந்தியாவின் பழைய மொழி எதற்கும் சமஸ்கிருதம் தாய் அல்லவென்றும், அது பழைய இந்திய மொழிக் கூறுகளின் கலப்பால் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த மொழி என்றும் விளக்கிக் காட்டியிருக்கிறார்.

மத்திய தேசத்தினர் பேசி வந்த மொழி சூரசேனி. இச்சூரசேனியே பின்னர் மத்திய தேசத் திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமற்கிருதம் என்று பெயர் பெற்றது.
இந்திரமால் பகவான்ஜி என்னும் சமண அறிஞர் பழைய பிராகிருத மொழிகள் பழங்காலத்தில் சிறந்து விளங்கின என்றும் அவற்றின் போலி உருவங்களே சமற்கிருத மொழி என்றும் கூறுகிறார்.

ஆதலின், பிராகிருத மொழியிலிருந்துதான் சமற்கிருதம் தோன்றியது. சமற்கிருதத் திலிருந்து பிராகிருத மொழிகள் தோன்றவில்லை.

பிராகிருதம், பாலிமொழி என்பவை தொன்மைத் தமிழே !

கி.பி.10இலிருந்து கி.பி.15க்குள் வழங்கிய பேச்சு மொழிகளாயிருந்த சில பிராகிருத மொழிகளிலிருந்து அபப்பிராம்ச மொழிகள் தோன்றின. சூரசேனியிலிருந்து மேற்கு இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தியும்; மகாராட்டிரி யிலிருந்து மராத்தியும்; மாகத்தியிலிருந்து வங்காளி, பீகாரி, அசாமி, ஒரியாவும்; அர்த்தமாகதியிலிருந்து கிழக்கு இந்தியும்; பைசாசியிலிருந்து இந்தியும் தோன்றின.

ஆனால், கி.மு. பத்தாவது நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தமிழ் எழுத்தும், நெடுங்கணக்கும் பெற்றிருந்ததாக எஸ்.கே.சாட்டர்சி போன்ற அறிஞர்கள் கூறுவர்.
பிராகிருதியில் தமிழ் போல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ உயிரெழுத்துகள் உள்ளன.
தமிழ் எ, ஒ போன்ற குறில்கள் பிராகிருதியில் உண்டு. சொல் உச்சரிப்பு முறையில் பிராகிருதம் முழுவதும் தமிழோடு ஒத்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்:

தமிழ் பிராகிருதம்
அச்சன் அஜ்ஜ
அத்தன் அத்த
அத்தை அத்தா
அப்பன் அப்ப
இதோ இதோ
செட்டி சேட்டி

எனவே, இவை இரண்டு மொழிகளும் தொன்மைத் தமிழே.

பாவாணர், வடமொழி அய்ந்து நிலைகளில் உருவானது என்கிறார். அதன் முதன்நிலை தெலுங்கு அல்லது தென் திராவிடம். இரண்டாம் நிலை பிராகிருதம் அல்லது வட திராவிடம். மூன்றாம் நிலை கீழையாரியம். வேத ஆரியரின் முன்னோர் வடகோகித்தானத் திலிருந்த போது (தற்கால ஈரான்) பேசிய மொழியே கீழையாரியம். இம்மொழி கிரேக்கத்திற்கு மிக நெருக்கமாய் இருந்தது. நான்காம் நிலை வேதமொழி. வேத ஆரியர் வடநாட்டில் சிறுபான்மையினராய் இருந்ததால் வடநாட்டுத் திராவிடருடன் கலந்து தங்கள் முன்னோர் மொழியை மறந்துவிட்டனர். வேதங்கள் ஆரியர் இந்தியாவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பிறகே இயற்றப்பட்டதால் வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிராவிடச் சொற்கள் கலந்தது. வேதமொழியின் சொற்றொடரமைப்பு தமிழ் முறையைத் தழுவியது.

தேவ நேயப் பாவாணர்

தமிழின் தொன்மை வடிவமான சூரசேனி என்னும் பிராகிருத மொழி, கலப்பு குறைந்து காணப்பட்டதால் ஆரியர் அதைச் செம்மைப்படுத்திச் சமற்கிருதம் (செம்மை செய்யப்பட்டது) என்கிற பெயரைக் கொடுத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கருத்துகளை எல்லாம் நூல்கள் வடிவில் அம்மொழியில் எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்களும், அம்மொழியிலேயே எழுத ஆரம்பித்ததால் சமற்கிருத நூல்கள் நாளடைவில் பெருகி அவற்றிற்குச் சிறப்புகள் பல உண்டாயின.

அய்ந்தாம் நிலை சமற்கிருதம். வேதமொழியும் ஆயிரக்கணக்கான தென்சொற்களும் கலந்ததே சமற்கிருதம்.

ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட பின்பே தமிழ் எழுத்தைப்பின்பற்றிக் கிரந்த எழுத்தையும், தேவநாகரி
யையும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அமைத்துக் கொண்டனர்.

வரலாற்று ஆசிரியர்களான எச்.வி. சீனிவாசமூர்த்தி, ஆர்.இராமகிருஷ்ணன் போன்றோர் சாதவாகனருடைய கல்வெட்டுகள் பிராகிருதியிலும், பிராமி எழுத்துகளிலும் இருந்தனவென்றும், சமற்கிருத மொழி கல்வெட்டுகளில் புகுந்தது கி.பி.நான்காவது அல்லது அய்ந்தாவது நூற்றாண்டுகளில்தான் என்றும் கூறுவர்.

டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார். (Dravidian India – Prof. Sesha Aiyangar).

ஸ்டென்கொனோவ், பர்ரோ போன்றவர்களும் சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் அதிக அளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டுவர்.

எமினோ, சட்டர்ஜி, முயல் ப்லோக் போன்றவர்கள் சமற்கிருதம் திராவிட முறையைத் தழுவி வினையெச்சங்கள், வினையாலணையும் பெயர்களைப் பயன்படுத்தி யிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் வார்த்தைகளை சமஸ்கிருத வார்த்தைகளாக்கல்

ஆரிய பார்ப்பனர்கள் தமிழ் எழுத்துகளுக்குப் பதிலாக சமஸ்கிருத எழுத்துகளை மாற்றிப்போட்டு சமஸ்கிருத வார்த்தைகளை உருவாக்கினர்.

சுரம் என்ற தூயத் தமிழ்ச்சொல்லை ஜுரமாக்கினர்.

சுரம் என்பது ‘சுர்’ என்ற தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து வந்தது. சுர் என்றால் சுடுதல்.

சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்று சமஸ்கிருதமயமாக்கினர்.

‘சலம்’ என்பது நீர் சலசல வென்று ஓடுவதால் வந்த காரணப் பெயர்.

சலம் என்பதை ஜலம் என்று சமஸ்கிருத மயமாக்கினர்.

பன்கயம் என்ற தூய தமிழ்ச் சொல்லை பங்கஜம் ஆக்கினர்.

பன்கயம் என்பது பல இதழ்களை உடையது என்பது பொருள். தாமரை பல இதழ்களை உடையதால் அது பன்கயம் எனப்பட்டது. அதில் எழுதுவதை மாற்றி பங்கஜம் என்ற சமஸ்கிருத சொல்லாக்கினர்.

குருதி ஆயம் என்ற தமிழ் வார்த்தையை ஹிருதயம் என்று சமஸ்கிருதமாக்கினர். குருதி ஆயம் என்றால் குருதி சேரும் இடம். இதயத்தில் குருதி சேர்வதால் அதற்கு குருதி ஆயம் என்று தமிழில் அழைக்கப்பட்டது. அதை ஹிருதயம் என்று மாற்றி சமஸ்கிருதம் ஆக்கினர்.

இப்படி தமிழிலிருந்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். சமஸ்கிருதத்தில் இவற்றிற்கு வேர்ச் சொல் கிடையாது என்பதை ஆய்வில் கொள்ள வேண்டும்.

இடவல மாற்றம் (Mirror Method)

கண்ணாடியில் இடதுவலமாகத் தெரியும். அதேபோல் தமிழ் எழுத்துகளை இடவலமாகத திருப்பிப் போட்டு சமஸ்கிருதமாக்கினர்.
அரசு என்று தூய தமிழ் சொல்லை இடவலமாற்ற முறையில் ராஜ் என்று சமஸ்கிருதமாக்கினர்.

அரசு என்பதில் முதல் இரு எழுத்துகளை இடவலமாக மாற்றினால் ரஅசு என்று ஆகும். முதல் எழுத்தை நெடில் ஆக்கி ராசு என்று ஆக்கி பின் சு _ ஜீ என்று மாற்றி ராஜீ _ ராஜ் என்று ஆக்கினர்.

அரசன் என்ற தூய தமிழ்ச் சொல்லை இதே முறையில் ராஜன் என்று ஆக்கினர்.
அரசன் _ என்பதை இடவலமாக மாற்றி ராஅசன் என்றாக்கி ‘ச’ எழுதுவதை ஜ வாக்கி ராஜன் என்றாக்கினர். இவ்வாறே அறமன் என்பதை ராமன் என்றும் அறவாணன் என்பதை ராவணன் என்றும் ஆக்கினர்.

சிலர், வேதங்கள் 2500 ஆண்டு பழமையானவை. அவை சமஸ்கிருதத்தில் இருப்பதால் சமஸ்கிருதம் 2500 ஆண்டுகள் பழைய மொழி என்கின்றனர். ஆனால் இது அறியாமை.

வேதமொழி சமஸ்கிருதம் அல்ல!

ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களிடம் எழுத்தும் இல்லை; எழுத்து வடிவான இலக்கியமும் இல்லை.

தமிழே வேத மொழிக்கு முந்தையது என்பதை மலையாளத்தில் சட்டம்பி அடிகள் 1901ஆம் ஆண்டில் ‘ஆதிபால’ என்னும் நூலில் நிலைநிறுத்தி இருக்கிறார். பாணினி நூற்பாக்களைத் தொல்காப்பிய நூற்பாக்களோடு மேற்கோள்காட்டி தமிழே முந்தையது என்றார்.

ஈரானியம் மற்றும் பிற மொழிகளிலிருந்து 20 சதவிகித சொற்களும், தமிழில் இருந்து 60 சதவிகித சொற்களும் வேத மொழியில் கலந்தன. எனவே, வேதமொழி சமஸ்கிருதம் அல்ல.

வேத மொழி சந்தஸ் என்கிறார் சங்கராச்சாரி. சந்தம் என்பதன் திரிபே சந்தஸ். ஆக, அதுவும் தமிழிலிருந்து வந்ததே!

உலக மொழிகளிலேயே 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துச் சான்றுடைய மொழி தமிழ் என நிறுவப்பட்டுள்ளது.

ஆரியர்கள் சமஸ்கிருதத்தை உருவாக்கிய பின், தமிழோடு சமஸ்கிருதம் பெருமளவில் கலந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயிற்று.

அதன்பின் இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் வந்தபின் உருதுமொழி, தமிழ், சமஸ்கிருதம் மூன்றும் கலந்து ஹிந்தி, குஜராத்தி, பீகாரி போன்ற மொழிகள் உருவாயின.

திராவிடம் என்ற சொல்
எப்படி வந்தது?

திராவிடம் என்பது ஒரு நாளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சொல் அல்ல. அது எப்படி உருவானது என்பதை கீழே படித்தறியுங்கள்.

1. மகாவம்சம் என்ற பாலி இலக்கியத்தில் வரும் தமிள (Damila) என்ற சொல் தமிழைக் குறிக்கிறது.

2. ஸ்வேதாம்பர சைனர் என்ற பிராகிருதி இலக்கியத்திலும் தமிள என்ற சொல் காணப்படுகிறது.
தமிட என்ற சொல் சைனர்களின் பிராகிருத மொழி. இலக்கியத்தில் தவிள என்றும், ஆரம்பக் காலச் சமற்கிருத இலக்கியங்களில் தவிட என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் சமற்கிருதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய காலத்தில் தமிள, தமிட ஆகிய சொற்கள் த்ரமிள, த்ரமிட என்று சமற்கிருத உச்சரிப்பைப் பெற்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

3. த்ரமிள என்ற சொல் வட இந்தியாவில் பாதாமி அருகில் உள்ள மகா கூடத்துக் கற்றூண்களில் காணப்படுகிறது. இத்தூண்கள் கி.பி. 597-608இல் செதுக்கப்பட்டவை. இச்சொல் பழைய மலையாள, சமற்கிருத புராணங்களிலும், தாராநாத்தின் புத்தமத வரலாற்றிலும் காணப்படுகிறது.

4. த்ராவிள என்ற சொல் சைனக் கணங்கள் என்ற நூலிலும் காணப்படுகிறது.

5. த்ரமிட என்ற சொல் தமிழ்த் திருவாய்
மொழியின் சமற்கிருத மொழிபெயர்ப்பிலும் காணப்படுகிறது. பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதிய ஒருவரைக் குறிப்பிடும் போது இராமானுஜர் த்ரமிட என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

திராவிட என்ற சொல் தமிழை மட்டும் குறிப்பதற்கான சான்றுகளாவன :

கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்த மகாயான நூலாகிய லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற பல மொழிகளில் அய்ந்தாவதாகத் த்ராவிடி என்று தமிழ் குறிக்கப்பட்டுள்ளது.

கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராகமிகிரர் தம் நூலில் த்ரவிட என்று தமிழைக் குறிப்பிட்டிருக்கிறார்.

கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமாரில பட்டரின் தந்திர வர்த்திகாவில் திராவிடாந்திர பாஷா அல்லது திராவிட பாஷா என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன. இவை முறையே தமிழ், தெலுங்கையும் அல்லது தமிழ் மற்ற திராவிட மொழிகளையும் குறிக்கின்றன. பின்னாளில் இடப்பெயராகவும் ஆனது.

சமண ஆகம நூலாகிய சுருதாவதாரம் என்னும் சமஸ்கிருத நூலின் ஆசிரியராகிய பூதபலி குறித்து தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ரவிட தேஸான்
என்ற குறிப்பு வருகிறது. இங்கு த்ரவிட என்ற சொல் தமிழ் என்ற பொருள் தருகிறது.
ஒரு சிவனடியாரைப் பற்றிக் (திருஞான சம்பந்தரை) குறிப்பிடுகையில் கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதிசங்கரர் திராவிட சிசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் தமிழ் என்ற பொருளில் திராவிட பாஷா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
தமிழ் ஆழ்வார்களின் பாடல்கள் திராவிட வேதம் என்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட நந்திவர்மன் தமிழ் மன்னர்களைத் திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

திராவிடம் என்பது
இடத்தையும் குறித்தது.

கி.பி.14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கங்கா தேவியால் இயற்றப்பட்ட மதுர விசயம் என்ற சமஸ்கிருத நூல் தமிழகத்தைத் திராவிட தேசம் என்றும், தமிழ் மன்னர்களைத் திரமிள அரசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் இரு முறை சில சத்திரிய இனத்தினர் விரிசாலர் (சூத்திரர்) ஆக ஆக்கப்பட்டனர் என்று வருகிறது. சூத்திர இனத்தவராகப் புன்ராகர், ஓட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பரதர், பகால்வர், சீனர், கிராடர், தாதர், கார் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். தென்னிந்திய இனத்தைக் குறிப்பிடத் திராவிட என்ற சொல் வருவதால் இது தமிழரை மட்டும் குறிக்காமல் திராவிட இனம் முழுவதையும் குறிக்கிறது.
மனு ஸ்ம்ரிதியிலும் இந்த இரண்டு இனங்கள் குறிக்கப்படுகின்றன. இங்கும் திராவிட என்ற சொல் பொதுவாகத் தென்னிந்தியரைக் குறிக்கிறது.
பாகவதம் என்ற நூலில் சத்திய விரதன் திராவிடபதி என்று அழைக்கப்படுகிறான். இங்குத் திராவிட என்ற சொல் தென்னிந்திய முழுவதையும் குறிக்கிறது.
கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லீலா திலகம் என்ற மலையாள இலக்கண நூலில் திராவிட என்ற சொல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கைக் குறிக்கிறது.
மேலே கூறப்பட்ட சான்றுகளிலிருந்து திராவிட(ம்) என்ற சொல் பழங்காலத்தில் தமிழை மட்டும் குறித்தது என்றும், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றிய பிறகு தென்னிந்திய முக்கிய நான்கு மொழிகளையும் குறிக்க ஆரம்பித்தது என்றும் தெரிய வருகிறது. தற்காலத்தில் திராவிட என்ற சொல் தமிழிலிருந்து பிரிந்த தொடர்புடைய மொழிகள் அனைத்தையும் குறிக்கிறது.
மேலும், ‘திராவிடம்’ என்பது சமஸ்கிருத சொல் என்பது தப்பான கருத்து. அவ்வாறு கூறுவது அறியாமை. யார் அவ்வாறு கூறினாலும் அது தப்பு!
ஆக, திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபேயாகும். திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒன்றுதான் எனும்போது தமிழர் என்று அழைப்பது தானே சிறப்பு! ஏன் திராவிடர் என்று அழைக்க வேண்டும்? என்ற கேள்வி சரியானது, நேர்மையானது. எனவே, அதன் காரணத்தை நாம் நுட்பமாகப் பார்க்கவேண்டும்.

திராவிடர் என்று கூறுவது ஏன்?

தமிழர் என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தமிழர் என்பது வரலாற்றுப் பிழையாகும். அப்படி அழைப்பது சரியும் அன்று. காரணம், இன்றைக்கு மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, வங்காளி, மராட்டி, ஹிந்தி போன்ற மொழிகள் பேசக்கூடியவர்கள், ஆரியர்கள் வருகைக்கு முன் தமிழ் பேசிய தமிழர்கள். கடைசியில் 400 ஆண்டுகளுக்கு முன் தமிழோடு சமஸ்கிருதம் சேர்ந்து உருவான மொழி மலையாளம். 400 ஆண்டுகளுக்கு முன் கேரளா மக்கள் தமிழ் பேசிய தமிழர்கள், சேர நாட்டினர். இன்றைக்கு தமிழ் திரிந்து மலையாளம் ஆனதால் அவர்கள் தமிழர்கள் இல்லையென்று ஆகிவிடுவார்களா?

தற்போது மலையாளம் பேசினாலும் கேரள மக்கள் தொல் தமிழர்கள்தானே! ஆனால், அவர்களுடைய மொழி மலையாளமாய் திரிந்ததால் அவர்களை இப்போது தமிழர்கள் என்று அழைக்க இயலாது. எனவே, அவர்களும் தமிழ் இனத்தவரே என்பதை உறுதி செய்ய, அவர்களைத் திராவிடர் என்று அழைக்கிறோம்.
திரிந்தவர்களை திரிபு சொல்லால் அழைக்கிறோம்

தமிழ் என்பதன் திரிபே திராவிடம்; தமிழரின் திரிபே மலையாளி, தெலுங்கர், கன்னடர், மராட்டியர், வங்காளிகள் போன்றோர். எனவே, அவர்கள் தமிழரிலிருந்து திரிந்த இனத்தவர் என்பதால் அவர்களைக் குறிக்க தமிழிலிருந்து திரிந்த திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

மொழி மாறினாலும்
இனம் மாறாது

மொழியால் இன்றைக்கு அவர்கள் மாறி நின்றாலும், இனத்தால் அவர்கள் தமிழர்கள். மொழி மாறியதால் அவர்கள் இனம் மாறாது. அவர்கள் தமிழரின் மரபினர். ஆரியர்கள்தான் இனத்தால் மாறுபட்டவர்கள்; வேறுபட்டவர்கள். அவர்கள் தமிழ் பேசினாலும் இனத்தால் அவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் இனத்தால் ஆரியர்கள்.
தமிழர் யார் என்பதற்கு என்ன அளவுகோல்?

சில அரை வேக்காடுகள், “நாங்கள் தமிழர்கள். திராவிடர் என்பதற்கு என்ன வரையறை?” என்கின்றனர். இந்திய மண்ணின் தொல்குடி மரபினர் அனைவரும் திராவிடர் என்று கூறிவிட முடியும்; வரையறுக்க முடியும். ஆனால் தமிழர் என்தற்கு என்ன வரையறை?

ஒருவர் சொல்கிறார் 1956க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்பவர்களின் வாரிசுகள் தமிழர்கள் என்கிறார்?
இன்னொருவர் தமிழ் பேசுகிறவர்கள் தமிழர்கள் என்கிறார்.
இந்தக் கிறுக்கர்கள்தான் கலைஞரை தமிழர் இல்லை என்கின்றனர். பாரதியாரை தமிழர் என்கின்றனர். சிந்தித்துப் பாருங்கள்.

தமிழரா? திராவிடரா?

தெற்காசியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் ஆதிகாலத்தில் தமிழ்தான் பேசினர். ஆனால், சமஸ்கிருதம், உருது போன்ற மொழிகள் கலந்து பலமொழிகளாய் தமிழ் திரிந்து போக, தமிழினத்தவர் மொழி அடிப்படையில் மொழியின் பெயரால் அழைக்கப்பட்டனர். தற்போதைய தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைத் தவிர மற்ற தமிழ் மரபினரின் மொழி தமிழ் இல்லாமல் மாற, தமிழ்நாட்டில் மட்டும் மொழி திரிபு (சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம் நிகழமையால்) ஏற்படாமல், தமிழ் திரியாமல் நின்றது. ஓரளவு சமஸ்கிருத கலப்போடு தப்பியது. அதனால், தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்க்கு மட்டும் தமிழ்மொழியானது.

மொழியடிப்படையில் மட்டுமே இனம் பிரித்தால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர் மட்டுமே தமிழர் என்றாகும். மற்ற மாநிலங்களில் வாழும் தமிழினத்தவர் தமிழினம் இல்லையென்றாகிவிடும். எனவே, அவர்களும் தொல் தமிழ் இனத்தவர்களே என்பதைக் குறிக்கவே தமிழர் மரபினர் அனைவரும் திராவிடர் என்ற இனச் சொல்லால் அழைக்கிறோம்.

போலித் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் வாதப்படி, 400 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேசிய, சேர நாட்டு மக்கள் மொழி திரிந்து மலையாளம் பேசுவதால், தமிழர்கள் இல்லையென்றாகும். அது சரியா? இளங்கோ அடிகள் தமிழர் இல்லையா? அவர் வழி வந்த சேரர்கள் தமிழர் இல்லையா? அவர்கள் மலையாளம் பேசுவதால் தமிழர் என்று அழைக்க முடியாத நிலையில்தான், இனப்பெயரான திராவிடர் என்று அழைக்கிறோம். எனவே திராவிடர் என்பது தமிழ்நாட்டு தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொல் தமிழர்க்கும் உரிய பொதுவான இனக் குறியீட்டுச் சொல் என்பதே உண்மை!

திராவிடம் இனமா? இடமா?

திராவிடர் வாழும் பகுதி என்பதைக் குறிப்பது திராவிடம். திராவிடர் என்பது இனப்பெயர், திராவிடம் என்பது அவர்கள் வாழும் இடம் பகுதி.

திராவிட் என்று ஆரிய பார்ப்பனர் அழைக்கப்படுவது ஏன்?

ஆரியர்களின் ஊடுருவல் பெரும்பாலும் வடமாநிலங்களில் அதிகம் நிகழ, தமிழர்கள் தென்னிந்தியப் பகுதியில் ஒதுங்கினர். எனவே தமிழர் பகுதி திராவிடம் எனப்பட்டது. அப்பகுதியில் வாழும் ஆரிய பார்ப்பனர்களை வடஇந்தியாவில் வாழ்வோர், திராவிட் என்று அழைத்தனர். மாறாக திராவிட் என்பது ஆரியர்க்குரிய இனச் சொல் அல்ல. அது ஆரியர் வாழும் இடச்சொல்.

திராவிடம் என்பது
தமிழர்க்கு எதிரானதா?

திராவிடர் என்பது பெரியாரால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது அல்ல. அது வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாறு கொண்டது. பெரியாருக்கு முன் அயோத்திதாச பண்டிதர் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தி இனஉணர்வு கொள்ளச் செய்ததோடு, ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராய்ப் போராடியுள்ளார். பெரியார் தமிழர் கழகம் என்று பெயர் வைக்க முயன்றாலும், அதில் பார்ப்பனர் நுழைவர் என்பதால், இனக் குறியீடாக திராவிடர் என்ற சொல்லைத் தேர்வு செய்தார்.

ஆனால், நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்ட போராடியபோது தமிழ்நாடு என்று பெயர் சூட்டச் சொன்னார். இங்குதான் இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை, உயரிய நோக்கை உண்மை நோக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தி தாச பண்டிதர்

தமிழர்களைத் திராவிடர்கள் என்று அழைப்பதால்தான் இந்த தமிழினம் ஒடுக்கப்பட்டது, தாழ்ந்து போனது என்று ஒரு தப்பான குற்றச்சாட்டைச் சிலர் வைக்கின்றனர்.
தமிழர் என்பது இனப்பெயரானால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை மட்டுமே குறித்து, கிழக்காசியப் பகுதி முழுவதும் வாழ்ந்த தமிழினம் சுருக்கப்பட்டுவிடும். மொழியால் திரிந்து வாழ்ந்தாலும் இனத்தால் தொல் தமிழினம் என்பதைக் குறிக்க ‘திராவிடர்’ என்று அழைத்தால் இனம் பரந்து விரியும்.
எனவே மொழியால் தமிழர்; இனத்தால் திராவிடர் என்பதே சரியானது; உண்மையானது; பாதுகாப்பானது, உரிமை தருவது, உயர்வு தருவது.

திராவிடமா? ஆரியமா?
என்பதே சரியானது

இந்தியாவைப் பொறுத்தவரை தொல் தமிழர்கள் இன்றைக்கு பல்வேறு மொழி பேசும் மக்களாய் பிரிந்து நிற்பதால், மொழி அடிப்படையில் அவர்களை அணுகாது, பண்பாட்டு, கோட்பாட்டு அடிப்படையில் அணுகவேண்டும். அப்படி அணுகினால், திராவிடமா? ஆரியமா? என்று நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும், சமத்துவம் என்பது திராவிடம். ஏற்றத்தாழ்வு, உரிமை மறுப்பு, பிறவி பேதம், ஆதிக்கம், ஒற்றைக் கலாச்சாரம் என்பது ஆரியம் இதில் எது நிலை பெறவேண்டும், ஆளவேண்டும் என்ற அணுகுமுறையே சரியானது. அதுவே 95% மக்களின் உரிமைக்கும், உயர்விற்கும், அதிகாரத்திற்கும் உதவும். எனவே திராவிடம் என்பது தமிழர்க்கு எதிரானது அல்ல. அது தமிழர்க்கு உயர்வளிப்பது; சிறப்பளிப்பது.

வெள்ளி, 29 நவம்பர், 2024

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை

 ஞாயிறு மலர்

அடையாளம் காணப்பட்ட சிந்து சமவெளி-பாணன்


விடுதலை நாள 
ஞாயிறு மலர்

திராவிட நாகரிகத்தின் 100ஆம் ஆண்டு கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு சிந்துவெளி திராவிட நாகரிகம் கடந்து வந்த பாதை  கிராமங்களில் சிந்துவெளி திராவிட நாகரீகம்

நாம் இதுவரை பண்பட்ட நாகரீக நகரங்களாக இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா, மொகஞ்சதாரா. ராஹிகரி மற்றும் தொலவீர என்பவற்றைத்தான் பார்த்திருக்கிறோம்.

மொசபடோமியாவில் (இன்றைய ஈராக்) அகழாய்வு செய்து ஜெர்மன் கொண்டு சென்ற சில (பண்ட்லிப்பி) களிமண் எழுத்துகளில் இருந்து எடுத்த தகவலின் படி சிந்துச்சமவெளி திராவிட நாகரீகத்தின் நகரங்களில் ஒரு லட்சம் முதல் லட்சத்து எண்பதாயிரம் பேர் வரை வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.

இந்த மக்களுக்கான உணவுத்தேவை வயலில் இருந்து வந்திருக்கவேண்டும், வெறும் உணவுத்தேவை என்பது மட்டுமல்ல, இன்றும் நகரங்களில் கிடைக்காத பல பொருட்கள் தூரக் கிராமங்களில் இருந்துதான், வருகிறது.

மெசபடோமியா குறித்த பதிவுகளில் சிந்து திராவிட நாகரீகப் பகுதிகளில் இருந்து மயிற்தோகை, யானைத்தந்தம், மசாலாப் பொருட்கள், பட்டு நூல்கள், பருத்தி ஆடைகள், அரிசி, பார்லி, கம்பு, கேள்வரகு, பால் பொருட்கள் ஆடு, மாடு, எரிப்பதற்கு மரக்கட்டைகள் என 80 விழுக்காடு பொருட்களுக்கு நகர மக்கள் கிராமங்களை நம்பித்தான் இருந்தனர்.

அப்படி என்றால் நாகரிக நகரங்களை மட்டுமே பேசும் நாம், சிந்துவெளி திராவிடச் சமூக மக்களின் கிராமங்கள் குறித்து கவனம்

செலுத்தவில்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பே!

இன்றுதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா அன்று ஹிந்துகுஷ் மலைக்கு கீழான இந்தியத் தீபகற்பம் மட்டுமே.
சிந்துவெளிக்கு தெற்கே தார் பாலைவனம், அதனைக் கடந்தால் தக்காண பீடபூமி – அதற்கு கீழே தமிழ்பேசும் பகுதி – இதன் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து 5000 ஆண்டுகளாக அரபிக்கடல் மார்க்கமாக வணிகம் நடந்து வந்துள்ளது.

இந்தக் கடலும் கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய பாதையாக அமைந்தது.
கிறிஸ்துவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரகாம் மண்ணை ஆண்ட ராஜா சுலைமான் அரசவையில் கீழைத்தேய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களின் பட்டியல் பண்டைய நூல்களில் இருந்தும் இஸ்லாமிய கிறிஸ்தவ மதநூல்களில் இருந்தும் கிடைக்கிறது.

மொழி பெயர்ப்பு

நிலம் மற்றும் கடல் மார்க்கமாக வர்த்தகம் செய்வதற்கான மூலோபாய இடத்தின் காரணமாக பாலஸ்தீனம் ஒரு முக்கியமான மய்யமாக இருந்தது. இது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் தரைவழியாக இணைக்கிறது. எகிப்துடன் சேர்ந்து, அட்லாண்டிக் – மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடல் – இந்தியப் பெருங்கடல் நீர்வழிகளில் துறைமுகங்களைக் கொண்ட ஒரே பகுதி இதுவாகும்.
தகவல் களஞ்சியமான பிரிட்டானிக்காவில் இருந்து https://www.britannica.com/biography/Solomon.

சுலைமான் பாலஸ்தீனத்தின் வணிக விதியை நிறைவேற்றி அதனை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரது பேரரசின் இயல்பு முக்கியமாக வணிகமாக இருந்தது. மேலும் அது அவருக்கும் நட்பு ஆட்சியாளர்களுக்கும் நிலம் மற்றும் கடல் வழியாக வர்த்தகத்தை அதிகரிக்க உதவியது. சாலமன் ஆட்சியில் குறிப்பாகக் கொண்டாடப்பட்ட ஒரு அத்தியாயம் அவர் வருகை – ஷெபாவின் ராணி, அதன் செல்வந்த தெற்கு அரேபிய இராச்சியம் செங்கடல் பாதையில் இந்தியப் பெருங்கடலுக்குள் இருந்தது. சாலமனுக்கு அவரது வர்த்தக வலையமைப்பைப் பராமரிக்க அவரது தயாரிப்புகள் மற்றும் அவரது வர்த்தக வழிகள் தேவைப்பட்டன, மேலும் அவரது பாலஸ்தீனிய துறைமுகங்கள் வழியாக மத்தியதரைக் கடலில் தனது பொருட்களை சந்தைப்படுத்த சாலமனின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

அதாவது சிந்து வெளி திராவிட நாகரீகத்தின் தொடர்ச்சி தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்த பிறகான ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தீபகற்பத்தில் தெற்கில் இருந்து(இன்றைய தமிழ்நாடு கேரளா, கருநாடகா மேற்குப் பகுதி) பொருட்கள் தொடர்ந்து சென்றது மேலே கூறிய பதிவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,000 ஆண்டுகளுக்கு முன்பு

சிந்துவெளி திராவிட நாகரீகம் திடீரென்று உருவாகி இருக்காது. 4000 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நகரங்கள் உருவாகிறது என்றால் அதற்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளாக கிராமங்கள் உருவாகி இருக்கவேண்டும்.

ஞாயிறு மலர்

இதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே மகாரட்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ஆரவல்லி மலைத்தொடரில் நடந்துள்ளது. ஆனால், கீழடி போல் மிகவும் நுட்பமாக நடக்கவில்லை.

கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தோலா விரா கிராமம்.
காதிர் பேட் தீவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் ‘கோட்டா திம்பா’ என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்துவந்தனர்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள அய்.அய்.டி குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலா விராவில் மிகப் பெரிய நீர் சேமிப்பு கட்டமைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிறு மலர்

நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய் திட்டம், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது.
நில அளவை, கலை மற்றும் பிற திறன்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவதுடன் விளங்கியுள்ளனர். தோலா விரா பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், அது வளம் மிக்க மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.

“சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலா விரா ஒரு பன்னாட்டு வர்த்தக நகராகவும் இருந்துள்ளது.”

“தோலா விரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது.”

ஞாயிறு மலர்

“பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர்.”

“தோலா விரா நகரின் இரு பக்கங்களிலிலும் மான்சர் மற்றும் மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.”

“நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசை திரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர் தேவைகளை சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்.”

கட்ச் பகுதியில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின், இன்றைய குஜராத்தில் அமைந்துள்ள, கிராமங்கள் இருந்த பகுதிகள் ஆகும். இக்கிராமங்கள் சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அரியானாவில் உள்ள “ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழைமையானது என்பதை உணர்த்துகிறது.”

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், டில்லியிலிருந்து வடமேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.

105 எக்டேர் பரப்பளவு கொண்ட இராக்கிகடி பகுதி நீர்வளமும் நிலவளமும் அதிகம் உள்ள பகுதி ஒருபுறம் சட்லஜ் மறுபக்கம் யமுனா, கிளைநதியான காகர் ஹக்ரா போன்றவை ஓடியதால் நிலத்தடி நீர் எப்போதும் குறையாமல் இன்றும் உள்ளது. அதே போல் மூன்று நதிகளின் வண்டல்களும் இப்பகுதியில் படிந்து மண்ணை வளமாக்கி உள்ளது.

சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய இராக்கிகடி தொல்லியல் களம் கி.மு. 6420 – 6230 மற்றும் கி.மு. 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கி.மு. 2600 – 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் அரசால் வெளியிடப்படுகிறது.

மே, 2012இல் இராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகாளவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.

இத்தொல்லியல் களத்திற்கு அருகே காளிபங்கான் குணால், பாலு மற்றும் பிரானா போன்ற சிந்துவெளி நாகரிகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளன.

சிந்துசமவெளி திராவிட நாகரீகத்தின்

மத்திய இந்திய கிராமங்கள் தைமாபாத் (Daimabad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில், சிறீராம்பூர் வருவாய் வட்டத்தில், கோதாவரி ஆற்றின் துணை ஆறானா பிரவரா ஆறு பாயும் தொல்லியல் களமும், கிராமமும் ஆகும்.

இத்தொல்லியல் களத்தை முதலில் 1958-இல் பி.ஆர்.போபார்திகர் கண்டுபிடித்தார். பின்னர் 1958-1959 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தைமாபாத் தொல்லியல் களத்தை மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. இறுதியாக 1975-1976 மற்றும் 1978-1979 ஆண்டுகளிலும் தைமாபாத் தொல்லியல் களத்தை எஸ்.ஏ.சாலி தலைமையில் ஆய்வு செய்தனர்.

தைமாபாத் தொல்லியல் களத்தின் தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் அவைகள் தக்காண பீடபூமி வரை பரந்திருந்த பிந்தைய அரப்பா காலப் பண்பாட்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது. தைமாபாத் தொல்லியல் அகழாய்வில் பிந்தைய அரப்பா பண்பாடு , சவல்தா பண்பாடு தைமாபாத் பண்பாடு, மால்வா பண்பாடு மற்றும் ஜோர்வே பண்பாட்டுக் காலங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தொல்லியல் களத்தில் பிந்தைய அரப்பா பண்பாட்டுக் காலத்திய இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் சிற்பம், 45 செ.மீ. நீளம், 16 செ.மீ. அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

சங்கனக்கல்லு என்பது கற்காலம் (கி.மு. 3000) பழைமையான தொல்பொருள் தளமாகும். இது கிழக்கு கருநாடகாவில் உள்ள பெல்லாரியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிந்துச்சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியில் தென் இந்தியாவில் முதலில் வரும் முக்கிய பகுதியாகும். தென்னிந்தியாவின் ஆரம்பகால குடியிருப்புகளில் ஒன்றாகும்,

இது 1,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. சங்கனகல்லு மற்றும் குப்கலில் பரவிய சிவப்பு – பழுப்பு படிம மண் அடுக்கு உள்ளது. இது கி.மு.5000க்கு முந்தையது. மேற்பரப்பின் அகழ்வாராய்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான மட்பாண்டங்கள், கல் அச்சுகள் மற்றும் பிற கற்கால கருவிகள் வெளிப்பட்டதால் இந்த தளம் புதிய கற்கால தொழிற்சாலை தளமாக கருதப்படுகிறது.

சன்னாரசம்மா மலையில் பெண்டாப்புடி சுப்பாராவ் என்பவரால் 1946ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த இடம் பெருமளவில் தோண்டப்பட்டது. சுப்பாராவ் அவர்களின் கலாச்சாரத்தை 3 கட்டங்களாகப் பிரித்தார்: சங்கனக்கல்லு முதன்முதலில் குடியேறிய கிராமம் – இங்கு செங்கலால் ஆன கீழடியில் கிடைத்த சிவப்பு கருப்பு மட்பாண்டங்கள் கிடைத்தது.

இங்கு கிடைத்த மட்பாண்டங்கள் மிகவும் நன்றாகவும், மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருந்தன. ஒரு சில பானைகளில் துளையிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் சில மண்பாண்டங்களில் உள்ள துளைகள் அப்பாத்திரத்தில் வைக்கும் உணவுப்பொருள் கெட்டுப்போகமல் இருப்பதற்காக பயன்படுத்தி இருக்கலாம் என்று தெரியவந்தது.

சங்கனகல்லுவில் குடியேறிய மக்கள் ஆரம்பகால விவசாயிகளாக இருந்தனர். அவர்கள் சிறு தினை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டனர். அவர்கள் ஆடு, மாடுகளை பராமரித்து, சாணத்தை (சாம்பல் மேடுகள்) கொட்டுவதற்கு தனி இடங்களை வைத்திருந்தனர்.


புதன், 23 அக்டோபர், 2024

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

 


ஜனவரி 16-31

இதுவரையில் திராவிட மாயை, திராவிடப் புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் – அதுவே நாம் வெற்றி பெற்றிருக் கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி.

சென்னை பெரியார் திடல், திராவிட இயக்கத்தின் தலைமைப் பீடம். அங்கிருந்துதான் பெரியாரின் கொள்கைப் போர்வாள் கி.வீரமணி அவர்களின் போர் முழக்கம் இன எதிரிகளின் புரட்டு நூலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது. வரலாறு இல்லாத ஆரியக் கும்பல் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதிவைத்து, அதற்கு கடவுள் வண்ணம் பூசி, புராணங்களாக்கி, மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தது. பெரியார் ஏந்திய அறிவாயுதம் அந்த மடமையை மாய்த்தது. அறியாமையை விலக்கி அறிவை விதைத்தது. அதன் பின்னர் புதிய புராணங்களைப் புளுக முடியாத ஆரியம் வரலாற்றுப் புரட்டைச் செய்யத் தொடங்கியது. அதன் ஒரு திட்டமிட்ட புரட்டாக வெளிவந்துள்ள “உடையும் இந்தியா?ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்று நூலின் பொய்யுரைகளைத் தோலுரித்த நிகழ்வில்தான் அப்படிப் பேசினார் ஆசிரியர் கி.வீரமணி.

உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? என்ற அந்த நிகழ்வில் திராவிட இனத்தின் தொன்மையை அறிஞர்களின் மேற்கோளுடன் எடுத்துக் காட்டி அரிய உரையை நிகழ்த்தினார். உடையும் இந்தியா? என்ற இந்த நூலில் பக்கம் 122-ல் சொல்லப்பட்டிருக்கிற செய்தியைப் படிக்கின்றேன்.

ராபர்ட் கால்டுவெல்லின்- பிராமண வெறுப்பே பின்னா ளைய திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பியலின் அடிப் படையாக இருந்தது.

ராபர்ட் கால்டுவெல்லின் வெறுப்பைத் தான் திராவிட இயக்கமாக உருவாக்கியிருக் கிறார்கள் என்று சொல்லு கின்றார்கள். எனக் கூறிய கி.வீரமணி, அப்படியானால், கபிலர் யார்? ராபர்ட்  கால்டுவெல்லுக்கு முந்தியவரா? பிந்தியவரா?

கபிலருடைய பாடலை சாதாரணமாகப் பாடும்பொழுது சொல்வார்கள்,
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்!
… … …
நால்வகை ஜாதியை
இந்நாட்டில் நாட்டினீர்
என்று வரிசையாக பாடல் வரும்.

பற்பல நாட்டிலும் பார்ப்பனர் இல்லையோ என்றுதான் முடியும் எனக் கூறினார்.

திராவிடம் என்ற வார்த்தையைக் கால்டுவெல் தான் பரப்பினார் எனக் கூறும் புரட்டை மறுத்து, மனுதர்மத்தில் இருந்தே திராவிடம் என்ற வார்த்தைக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,
-சுலோகம் 43-ல்

பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.

சுலோகம் 44ல்
பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்
இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்
மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பார்ப்பான் என்ற சொல்லைத் தவிர பிராமணன் என்ற சொல் வரவில்லை.

இது தமிழ் இலக்கியமல்ல. மனுதர்ம சாஸ்திரம். இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனுதர்மத்தில் என்ன சொல்லு கிறது? பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம் சகம், பாரதம்.

இவைகளை எல்லாம் ஆண்டவர்கள் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.
மனுதர்மம் சுலோகம் 45ல்

உலகத்தில் நான்கு வருணத்தா ருக்கும் சங்கர சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும் சிலர் சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.

ஆகினும் அனைவரும் தஸ்யூக்க ளென்று சொல்லப்படுவார்கள்.

கீழ்ஜாதிக்காரன் தப்பித் தவறி சமஸ்கிருதம் படித்திருந்தால்கூட அவர்கள் யார் என்றால், அவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று மனுதர்மம் சொல்வதை எடுத்துக் காட்டி, திராவிடம் என்ற ஒரு நிலப்பிரிவு இருந்ததையும் ஆரியர்கள் உருவாக்கிய நால்வருண ஜாதி முறையையும் அவர்களே ஒப்புக்கொண்டதை  நிறுவினார்.

ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலின் 1079 பக்கத்தில் தேசம் என்ற தலைப்பில்
இந்த நாட்டில் 56 தேசங்கள் இருந்திருக் கிறது என்ற குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அதில் திராவிடம் என்பதும் ஒன்று! என்பதையும் எடுத்துக்காட்டினார்.

இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து கவலைப் படுவது போல பாவனை செய்வோர் மேற்கு வங்கத்தில் முதன்முதலில் சிராஜ் யுத்தவலாவை அழைத்து வந்து வெள்ளைக் காரனுக்குக் காட்டிக் கொடுத்தது உமீன்சந்த் என்ற பார்ப்பனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் அய்ரோப்பியர் ஆதிக்கத் திற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்கள்தான். இவ்வளவு பெரிய தீமைக்கு வித்திட்டவன் யார்? புஷ்ய மித்திர சுங்கன் எப்படி மவுரிய சாம்ராஜ்ஜியத்தையே அழித்தான்? எத்தனை கொலை? எத்தனை கொள்ளை? இப்படி வரலாற்றில் வரிசையாக சொல்லிக் கொண்டு போகலாம். அதுமட்டுமல்ல, மனுதர்மத்தை மட்டும் விளக்கிச் சொன்னால் ஏராளம் சொல்லலாம் என்று கூறியவர் பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு நூலில் திராவிடம் என்றால் திராவிடர்கள் இருந்த இடம் என்.று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

இவற்றை ஆரிய திராவிடப் புரட்டு என்று எழுதுகிறவர்கள் மறைப்பது ஏன்-?

மேலும் அதே தமிழர் வரலாறு பக்கம் 91 இல் உள்ளதாவது:

ரிக் வேதம் X  61.8

சரத்பாதா ந தட்சிணா பராவ்ர்ண் ந தா ங மே பர்சந்யோ ஜக்ர்ப்ரே என்பதில் வரும் தட்சிணா தென்னாட் டையே குறித்ததாக மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது சரியல்ல).

அய்த்தரேய பிராமணத்தில் VII -18 தனது 50 மகன்களையும், விசுவாமித்திரர் (கி.மு.2500) சபிக்கும்பொழுது அவர்கள் வாரிசுகள் (ஆரிய வர்த்த) எல்லைக்கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர, சபா, புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச் சபிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது .

பிற்கால மனுஸ்மிருதியும் (இது மனுஸ்மிருதிக்கு முன்னாலே) (1122,44) இமயமலைக்கும், விந்திய மலைக்கும் நடுவில் உள்ளதும், கருநிறமான மானின் வாழ்விடமும் ஆன பகுதியே ஆரிய வர்த்தம் என்கிறது. இதை எழுதியது யார் பி.டி. சீனிவாச அய்யங்கார். பெரியார் அல்ல என்று கி.வீரமணி எடுத்துரைத்தார்.

தட்சிண பாதா, தக்க்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண, பண்டைக் காலத்தில் தட்சிண என்பது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியா முழுவதை யும் குறித்தது. பிற்கால முகமதியர்களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும் தான். தக்கணம் என்பதை தக்கண பீட பூமியை மட்டும் (தமிழகம் நீங்கலாக) குறிக்கப் பயன்படுத்தினர் தமிழ்த்தென்றல் திரு.வி.க-. சொல்லுகிறார் திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்தில் திராவிடர் களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம் குறிக்கப்பட் டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு அய்ந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த  சபாபதி நாவலர் என்கிற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகா என்னும் நூலிலும், திராவிடம் என்ற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளதையும், இன்று இந்த நாட்டின் தேசிய பாட்டாக வழங்கி வரும் ஜனகனமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உத்கலவங்கா என்று சொல்லியிருக்கின்றாரா இல்லையா?

தேசிய கீதத்திலேயே திராவிடம் இடம்பெற் றிருக்கிறதா இல்லையா? என்று திரு.வி.க கேட்டதையும் எடுத்துரைத்தார்.

ஆகவே திராவிடம் என்பது கற்பனை இல்லை என்று சொல்லுவதற்கு மனு தர்மத்தையே சுட்டிக் காட்டுகிறோம்.. அப்புறம் என்ன கால்டு வெல்?

கால்டுவெல்லிடமிருந்து கரு எடுத்துக் கொண்டார் என்று சொன்னால், மனு யார்? கால்டு வெல்லுக்கு மச்சானா? நாங்கள் மட்டுமல்ல.. வருகிற தலைமுறையினர் கேட்க மாட்டார்களா? நடுநியைளர்கள் சிந்திக்க வேண்டாமா? மனுவுக்கும் கால்டுவெல்லுக்கும் என்ன தொடர்பு?- என்ன ஒற்றுமை?

திராவிடர் என்று நாம் சொல்லுவது இருக்கிறதே அது பண்பாட்டை நமது பழக்க வழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர இந்த காலத்தில் யாரும் ரத்த ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு பார்க்கத் தயாராக இல்லை.

ரத்தப் பரிசோதனை நடத்தி பிரிப்பதில்லை

யாருடைய ரத்தம் யாருக்கு வேண்டு மானாலும் கொடுக் கலாம். எந்த ரத்த குரூப் உள்ளவனோ அவருக்கு அந்த குரூப் ரத்தம் பொருந்தும். அது யாராக இருந்தாலும் சரி. உலகப் பூராவும் அறிவியல் பூர்வமாக ரத்தத்தைப்  பிரித்திருக்கிறார்கள்.

அதனால் ஆரியம்- திராவிடம் என்று நாங்கள் பிரிக்கும் பொழுது ரத்த பரிசோதனை நடத்திப் பிரிப்பதில்லை. ஆரிய மனப்பான்மையும், பார்ப் பனீயத் தன்மையும் எப்படி இருக்கிறது? என்று கி.வீரமணி ஆதாரங்களை அடுக்கினார்.

நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு 34ஆவது தொகுதி அதாவது 1945 குடிஅரசில் திராவிடர் வார்த்தை விளக்கம் என்று பெரிய தலையங் கத்தை தந்தை பெரியார் எழுதியிருக் கின்றார்.

அதிகாரப் பூர்வமாக அதில் பல செய்திகளை தந்தை பெரியார் சொல்லு கின்றார்.

அதிலே ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய் விட்டது. பிரிக்க முடியாதது. ரத்தப் பரீட்சையாலும் வேறு படுத்த முடியாது என்று ஒரு சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். (பெரியார் சொல்லுகிறார்) ஆரிய, திராவிடர் ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய- திராவிட ஆச்சார, அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? ஏன் இன்னமும் தமிழ் ஆண்டு வேண்டும் என்று கேட்டால் ஏன் பார்ப்பனீயம் சங்கடப்படுகிறது?

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன். பிரம்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன் வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன்  என்று எழுதி வைத்து இன்றும் அது மனுதர்மத்தில் இருக்கிறதா இல்லையா? இதை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர், 1940-லிருந்து இது போன்ற கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய  Bunch of Thoughts என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தத்துவார்த்த விளக்க நூலில் இந்தக் கருத்து இருக்கிறது.

Bunch of Thoughts என்ற புத்தகமும் உடையும் இந்தியா? என்ற புத்தகமும் ஒன்றுதான்.  அது பழைய வடிவம்; இது புதிய வடிவம் அவ்வளவுதான்.

இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவன் வெள்ளைக் காரன். இந்த நாட்டை பிரிவுபடுத்திய ஆரியன், ஜாதியிலே பிரித்து வைத்தான். ஆனால் நாங்கள் பிரிவினை கூடாது மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் இன்னமும் பூணூல் போட்டிருக்கிறீர்களே! நீங்கள் பிரிவினைக் காரர்களா? அல்லது நாங்கள் பிரிவினைக் காரர்களா? இப்பொழுது சொல்லட்டும் உடைப்பது நீங்களா? அல்லது நாங்களா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் படிப்பது குருஜி கோல்வால்கர் நூல். The Bunch of Thoughts என்பதன் மொழிபெயர்ப்பு. நம் தாய்நாட்டுப் புதல்வர்கள் என்ற பகுதியில் உள்ள முக்கியமானதைப் படிக்கின்றேன். புனிதமான நமது தாய்நாட்டில் தொன்றுதொட்டு இந்து என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும் நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்துஎன்பது உங்களுடைய பெயரா? உன் எதிரி உன்னை வெறுப்பதற்காக உன்னை அடையாளப்படுத்துவதற்காக அவன் கொடுத்த பெயர்.

வெறுக்கத்தகுந்தது என்று நான் சொல்ல வில்லை. சட்டபூர்வமாக கோட் செய்து நீங்கள் ஆதாரம் கேட்பீர்களேயானால் வழக்கறிஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். மைக்கேல் X வெங்கடேசுவரன் இருவருக்கும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்  நீதிபதி பி.வி.ராஜமன்னார் கொடுத்த தீர்ப்பு இருக்கிறது. அதில், இந்து என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூற முடியாது. எந்த மொழியிலிருந்து இந்து என்ற சொல் பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது?

இது  இந்திய பிறப்பிலிருந்தும் வந்த வார்த்தை அல்ல.என்று கூறப்பட்டது.

தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இந்து என்கிற பெயர் அந்நியன் நமக்கு வைத்த பெயர். இந்த மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது. சொல்லுவது யார்? சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்.
மனுதர்மத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் 19 ஆவது சுலோகம் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்திலும் யார் யார் வாசித்தார்கள். என்னென்ன பெயர் அந்தப் பகுதிக்கு இருந்தது என்பதை மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி அந்த கருத்துகளை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மனுதர்மத்தில் 17 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதை படிக்கின்றேன்.

சரஸ்வதி யென்னும் திருஷத்து
வதி என்னும் தேவ நதிகளுடைய மத்தியப் பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மா வர்த்ததேசமென்று சொல்லப்படும்.

சுலோகம் 18:

அந்தத் தேசத்தில் பெரியோர் கள் எப்போதும் வசிக்கின்றமை யால் பிராமணாதி வருணத்தா ருக்கும் சங்கர சாதிகளுக்கும் சிஷ்டாசாரமானது அநாதியா யவ் விடத்தினின்று முண்டாகிறது.

(சங்கரஜாதி என்றால் கீழ்ஜாதி கல்பில் வந்தவர்கள்)
சுலோகம் 19:
மச்சதேசம் பாஞ்சால தேசம்-
வடமதுரை இதுகள் பிரம்ம
ரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிர்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சங் குறைந்திருக்கின்றன.

சுலோகம் 20:

இந்தத் தேசங்களில் பிறந்த பிராமண னிடத்தினின்றும் சகலரும் தன்தன் தருமங் களையறிந்து கொள்ளக் கடவர்கள்.

சுலோகம் 21:

இ மோர்ப்பர்வதத்திற்கும்
விஞ்சை பர்வதத்திற்கும்-
நடுவாயும் சரஸ்வதி நதி-

மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இட மானது மத்திய தேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 22:

கிழக்கு சமுத்திரந் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப் பிரதேசமானது சாதுக்கள் வசிக்கிற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 24:

கிருஷ்ண சாரமென்னுமானானது எந்த விடத்தில் சுபாவமாய் சஞ்சரிக்கின்றதோ  அந்தவிடந்தான் யாகஞ் செய்தற் குறியது மற்ற விடம் அசுத்தமான மிலேச்ச தேசமென்று சொல்லப்படும்.
இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலைவிட வேறு விர்த்தியை எந்தவிடத் திலடைய மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத்தக்கது.

சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். இப்படியெல்லாம் மனுதர்மம் சொல்லுகிறது.

சூத்திரன் அவன் சம்பாதித்த பொருளாக இருந்தாலும், அதை அடித்தும் நாம் (பார்ப்பனர்கள்) எடுத்துக்கொள்ளலாம். மனுதர்மத்தில் இருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி, ஆரிய திராவிடப் புரட்டு என்று அப்பட்டமாகப் புளுகுவதைத் தோலுரித்தார்.

இந்த நூலில் முக்கியமாக இன்னொரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. திருக்குறளை இந்து மத நூல் எனத் திரித்ததாகும்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனிதநேய சிந்தனையை உலகுக்குத் தந்த தமிழ்மறையான திருக்குறளை வெட்கமில்லாமல் இந்து நூல் என்று திரிபுவாதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆரிய தர்மமான மனுதர்மம் பிறப்பில் பேதம் கற்பிக்கிறது. தமிழ் மறையான திருக்குறள் பிறப்பில் பேதம் இல்லை என்கிறது. இரண்டையும் இந்து மத நூல்கள் என்று சொல்ல எத்தர்களான ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?

இந்து என்ற வார்த்தையே இந்தியாவிலுள்ள எந்த மொழியையும் சேர்ந்ததல்ல. அது ஒரு பாரசீகச்  சொல். உண்மை இப்படியிருக்க தமிழ்இந்து என்று ஒரு புதிய புளுகுப் பிரச்சாரத்தை உடையும் இந்தியா நூலிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொண்டு ஊதிப் பெரிதாகக் காட்டப்படும் இந்த ஆரிய பலூனை உண்மை என்ற திராவிட ஊசி மூலம் உடைத்து நொறுக்க பெரியாரியம் தயாராகி விட்டது. வெளிப்படையாக தமது உயர் ஜாதி மனநிலையை அடியோடு விட்டுவிட்டு மனிதர்களாகத் தம்மை ஆரியம் காட்டிக் கொள்ளும் காலம் வரும் வரை இத்தகைய திரிபுவாதங்களுக்கும், பொய்யுரை களுக்கும், புரட்டுகளுக்கும் பெரியார் திடலிலிருந்து பதிலடி வந்து கொண்டேயிருக்கும். – பெரியாரிடி

குறிப்பு: இந்துத்துவத் திரிபுவாதங்களை முறியடிக்கும் ஆதாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் அடங்கிய விரிவான நூல் தயாராகிக் கொண் டிருக்கிறது, விரைவில் மக்களின் சிந்தனைக்கு வழங்கப்படவுள்ளது.