ஞாயிறு, 23 நவம்பர், 2014

சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே

சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே 



கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன்

 

உறுதி

சென்னை, நவ.16-_ சிந்துச்சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கினார். சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மய்யத்தில், சிந்துச்சமவெளி குறியீடுகளை விளக்கும், 'டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா' என்ற புத்தகத்தின் வழியாக, அய்ராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரை களை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.
அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்துச் சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துச்சமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துச் சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத் திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துசமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப் பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், 'பூசன்' என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத் தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங் குகிறது. சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்
விடுதலை,ஞாயிறு, 16 நவம்பர் 2014 

ஞாயிறு, 2 நவம்பர், 2014

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா? பெரியார்


திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.

திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவைகள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும்.

இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமையாததாக இருக்கின்றது.

--------------------

01.05.1947
அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசாரக் குழு பயிற்சிப் பாசறையில் நடத்திய வகுப்பின் உரைத் தொகுப்பு. - குடிஅரசு” - சொற்பொழிவு - 03.05.1947

அனுப்பி உதவியவர்:-தமிழ் ஓவியா