செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அசுரர்களின்’ பட்டியல்:

சுக்கிராச்சாரியார் 

(அசுரர்களின் குல குரு)
இரணியாட்சன்
இரணியகசிபு
பிரகலாதன்
மகாபலி சக்கரவர்த்தி
விரோசனன்
சலந்தரன்
விருத்திராசூரன்
ரத்த பிந்து
மயன் - அசுர சிற்பி
விருசபர்வன்
சண்டன்
முண்டன்
சுபர்பானு
சூரபதுமன்
பானுகோபன் -சூரன் மகன்
தாரகன் -சூரனின் தம்பி
சோமுகாசுரன்
மகிசாசூரன்
மகசி - மகிசாசுரனின் தங்கை
சுந்தன் - உபசுந்தன்
சும்பன் - நிசும்பன்
இராவணன்
கும்பகர்ணன்
வீடணன்
சூர்ப்பனகை
இந்திரஜித்
மாரீசன்
கரன்
தாடகை
கைகஸி - இராவணின் தாய்
நரகாசுரன்a
இடும்பி - பீமனின் மனைவி

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

ஆரியர் - திராவிடர்

அய்யா பேசுகிறார்




திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டி ருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும்.

எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி, ஙி, சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது.
- தந்தை பெரியார் (குடிஅரசு 14.7.1945)

அம்பேத்கர் பேசுகிறார்...



தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, ப: 95

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

ஆரிய - திராவிடப் போராட்டம்

பேராசிரியர் ப.காளிமுத்து




ஆரிய-திராவிடப் போராட்டம் என்பது நெடிய வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டதாகும். சிந்து சமவெளி நாகரிகம் செழித்தோங்கியிருந்த காலத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருகிறது. கைபர்-போலன் கணவாய்களின் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்கள், இன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இந்த மண்ணின் மய்ந்தர்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆடு - மாடு மேய்த்தல், வேள்வி செய்தல், வேள்வியில் மாடுகளை வெட்டிப் பலியிடுதல், பலியிடப்பட்ட மாட்டிறைச்சியைக் கூறுபோட்டு உண்ணல், சாராயம் (சோமபானம், சுராபானம்) காய்ச்சுதல், செம்மறியாட்டுக் கறியுடன் சாராயத்தைக் குடித்துக் களியாட்டம் போடுதல், மாற்றாரின் செல்வத்தைக் கொள்ளையிடுதல், நீர்த்தேக்கங்கள், அணைகள், ஏரி, குளங்கள் ஆகியவற்றை அழித்தல் ஆகிய இவையும், இவைபோன்ற பிறவும் ஆரியரின் முகாமையான தொழில்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

ரிக் வேத ஆரியர்கள் உணவுக்காகப் பசு மாடுகளைக் கணக்கின்றிக் கொன்றார்கள். அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதை ரிக் வேதம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. குதிரைகளும் எருதுகளும் கன்று ஈனாப் பசுக்களும் ஆட்டுக் கிடாய்களும் பலியிடப்பட்டன. இவற்றின் இறைச்சியை ஆரியர்கள் சுவைத்துச் சுவைத்து உண்டனர் என்று ரிக் வேதம் (ஙீ.91:14) கூறுகிறது. ஆரியர்களின் கடவுளான இந்திரன் இத்தகைய விலங்குகளின் இறைச்சியை உண்டதோடு ஆரியர் காய்ச்சிய சாராயத்தையும் (சோமபானம், சுராபானம்) விரும்பிக் குடித்ததாக வேதப் புத்தகங்கள் கூறுகின்றன.

ரிக் வேதத்தின் ஒன்பதாவது இயல், சாராயம் (சோம பானம், சுரா பானம்) காய்ச்சும் முறைகளைக் பற்றியும் இவற்றை எந்த அளவில் எவற்றோடு கலந்து குடிப்பது என்பதைப் பற்றியும் 1108 பாடல்களில் விரிவாகப் பாடுகின்றது. சுரா பானத்தைக் குடித்துக் கூத்தடித்த ஆரியர்கள் தங்களைச் ‘சுரர்’ என்றும் அதனை மறுத்த இந்த மண்ணின்  மய்ந்தர்களான திராவிடர்களை ‘அசுரர்கள்’ என்றும் அழைத்தனர்.

குமரி முதல் இமயப் பனிமலை வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ - அரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும் பரவிக் கிடந்த திராவிடப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களைத் திராவிடர்கள் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்’ என்றும் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆனால், இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்கள் இவர்களை ‘மிலேச்சர்கள்’ என்றும், ‘தாசர்கள்’ என்றும், ‘அரக்கர்கள்’ என்றும், ‘குரங்குகள்’ என்றும், ‘அசுரர்கள்’ என்றும் பெயரிட்டழைத்தனர். ஆரியர்களின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வேதங்களிலும் திராவிடர்களைக் குறிப்பதற்கு ஆரியர்கள் மேற்குறித்த இழிவான சொற்களையே பயன்படுத்தியுள்ளனர்.

‘இந்திரன், அக்கினி, சூரியன், சோமன், ருத்திரன்’ முதலான தேவர்களைப் போற்றிப் பாடும் பாடல்களாகவே வேதங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாசர்கள் அல்லது திராவிடர்களை அழித்து, ஒழித்து ஆரியர்களாகிய தங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து கொடுத்துத் துணையிருக்குமாறு ஒவ்வொரு கடவுளையும் வேண்டும் பாடல்களாகவே வேதப் பாடல்கள் விளங்குகின்றன.

“அக்கினியே, தானம் அளிக்காத எங்கள் பகைவர்களாகிய அரக்கர்களைத் (திராவிடர்களை) தூள் தூளாக்கு’ (ரிக்-441)

‘இந்திரனே, தெய்வ நம்பிக்கையில்லாத - கடவுளற்ற - சடங்குகள் செய்யாத தாசர் (திராவிடர்) இனத்தைப் பூண்டோடு அழித்துச் சாம்பல் ஆக்க வானத்தையும் பூமியையும் அனலாக்கு’ (ரிக் - 4617)

மேல் எடுத்துக் காட்டியவற்றால் வேத காலத்துத் திராவிடர்களுக்குத் தெய்வமோ, மதமோ, சடங்குகளோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. மேலும், திராவிட மக்கள் வேள்வி செய்யாதவர்கள்; வேள்வியை வெறுத்தவர்கள் என்பதையும் வேதப் பாடல்களின் மூலம் நாம் அறிய முடிகின்றது.

‘இந்திரனே! வேள்வி செய்யாத தாசர்களை (திராவிடர்களை) கண்காணாத இடத்திற்கு அடித்து விரட்டுவாயாக; அவர்கள் செல்வத்தை இழப்பார்களாக!’ (ரிக் - 7594)

‘இந்திரனே! எங்கள் எதிரிகளாகிய தாசர்களை தாசிகளை, நாத்திகர்களை அழித்துத் தரை மட்டமாக்கு; ஆரியர்களாகிய எங்களுக்குத் தாசர்களை, கருப்பன்களை அடிமைகளாக்கு.’ (ரிக் -)

திராவிடர்களை, ‘நாத்திகர்கள்’, அடிமைகள், கருப்பர்கள் என்ற சொல்லாட்சிகளால் ரிக் வேதம் குறிப்பிடுவதை இங்கே நாம் பார்க்கிறோம்.

வேத காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம்; சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை வரலாற்றாசிரியர்கள் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் கட்டிய கோட்டைகள், மாட மாளிகைகள், வளமான நகரங்கள், நீர்த் தேக்கங்கள், ஆற்று நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைப்பு முறைகள் வரலாற்றாசிரியர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. இறை நம்பிக்கையில்லாத - சடங்குகள் செய்யாத ஓர் உயர்ந்த நாகரிகம் செழித்து வளர்ந்திருந்தது. சிவகங்கைக்கு அருகில் கீழடியில் அண்மையில் நடத்தப் பெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பெற்ற அய்யாயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருள்களில் ‘மதச் சின்னங்கள்’ ஒன்றைக் கூடக் காண முடியவில்லை. ஆரியப் பார்ப்பனர்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கீழடி நாகரிகம் ‘திராவிட நாகரிகம்’ என்பதை அவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. அதனால் கீழடி அகழாய்வுப் பணிகள் மூடப்பட்டுவிட்டன. திராவிட நாகரிகம், நாத்திக நாகரிகமாக - அறிவுசான்ற நாகரிகமாகப் படிநிலை வளர்ச்சி பெற்றிருந்தமையைச் சிந்துவெளி - கீழடி அகழாய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

இவ்வாறு படிநிலை வளர்ச்சி பெற்ற - அறிவுசான்ற ஒரு நாகரிகத்தை அழிக்கும் வேலைகளில் ஆரியர்கள் தொன்றுதொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அவர்களுடைய வேதங்களே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

“தாசர்களுடைய (திராவிடரின்) கோட்டையை உடைத்துத் தகர்த்து நொறுக்கு; இந்திரனே! அவர்களுடைய நகரங்களை எரித்துத் தரையோடு தரைமட்டமாக்கு; நீர்த்தேக்கங்களை உடைத்தெறி; எங்களுக்கு நிறைந்த செல்வங்களைக் கொடு; குதிரைகளை, பசு மந்தைகளைக் கொடு; நல்ல மேய்ச்சல் நிலங்களை எங்களுக்கு வழங்கு; திராவிடர் நிலங்களை எங்களுக்கு வழங்கு; திராவிடர் இனத்தைப் பூண்டோடு ஒழித்துக் கட்டு” என்னும் கருத்துகளே வேதப் பாடல்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

அரக்கர்கள், அசுரர்கள் என்று தங்கள் எதிரிகளாகிய திராவிடர்களை அழைத்த ஆரியர்கள் அவர்களோடு நேருக்கு நேர் நின்று போரிட்டதில்லை. ஆரியர்கள் வஞ்சக வடிவினர்; “ஆரியர்கள் போர் செய்து திராவிடர்களை வென்று விடவில்லை; வெல்லவும் முடியாது. ஆனால், ஆரியப் பண்பாட்டை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர்” (தந்தை பெரியார், ‘விடுதலை’ 23.3.1950) என்கிறார் தந்தை பெரியார். ஆரியர் விரித்த சூழ்ச்சி வலையில் - ‘மோகினி’ வடிவைக் கண்டு அதில் திராவிடர் சிலர் வீழ்த்தனர்.

தங்களைப் ‘பூதேவர்கள்’ (நிலக் கடவுளர்கள்) என்று அழைத்துக் கொண்ட ஆரியப் பார்ப்பனர்கள், தங்கள் எதிரிகளாகிய திராவிடத் தொல்குடி மக்களை எவ்வளவு இழிவாக நடத்த முடியுமோ அவ்வளவு இழிவாக நடத்தினார்கள். திராவிடரைச் ‘சூத்திரர்’ என்று சொல்லி அவர்களைத் ‘தங்கள் வைப்பாட்டி மக்கள்’ என்றும், ‘தங்களின் அடிமைகள்’ என்றும், ‘போரில் புறமுதுகிட்டு ஓடியவர்கள்’ என்றும் பலவாறாக இழிமொழிகளால் பழித்துரைத்தனர். தங்களின் சொற்களுக்குப் பணியாதவர்களை, எதிர்த்து நின்றவர்களை ‘அரக்கர்கள்’ என்றும், ‘அசுரர்கள்’ என்றும், ‘குரங்குகள்’ என்றும் தங்கள் நூல்களில் எழுதி வைத்தனர்.

ஆரியக் குடியிருப்புகள் அமைந்திருந்த கங்கைச் சமவெளியில் எருமை, செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், யானைகள், பசு மாடுகள் முதலானவற்றின் எலும்புகள் நிறையக் கிடைத்துள்ளன. இவற்றில், வெட்டப்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. தொல்லியல் துறையின் ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய விலங்குகளின் இறைச்சிகளையெல்லாம் விரும்பி உண்ட ஆரியர்கள், இராவணனை ‘அரக்கன்’ என்றும், இவனோடு சேர்ந்தவர்கள் ‘மனிதர்களைக் கொன்று உண்டவர்கள்’ என்றும் தங்கள் புராணங்களில் எழுதி வைத்துள்ளனர்.

‘நரகாசுரன்’ தன்னைக் கொலை செய்த நாளை மகிழ்ச்சியாடு வெடி வைத்துக் கொண்டாடுமாறு கூறியதாகக் கதை அளந்தனர் ஆரியப் பார்ப்பனர். எந்த மடையனாவது இவ்வாறு கூறுவானா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இராமாயணக் கதையே ஆரிய-திராவிடப் போராட்டத்தைக் குறிக்கும் கதை என்று நேரு பண்டிதரே குறிப்பிட்டிருப்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் ஆரியப் பார்ப்பனரின் சூழ்ச்சிகளை முறியடிக்கத் திராவிடர்களாகிய நாம் ‘அசுரன் விழா’, ‘இராவணன் விழா’ கொண்டாட வேண்டும்.

கங்கையாற்றைக் கடக்கும்போது கங்கையிடம் சீதை சொல்கிறாள்: ‘என் கணவரோடு பாதுகாப்பாக நல்லபடியாக நான் திரும்பி வந்துவிட்டால் இறைச்சி உணவோடு ஆயிரக்கணக்கான மதுக் கலயங்களை உனக்குப் படைக்கிறேன்’ என்று உறுதிமொழி கூறுகிறாள். மேலும் யமுனை ஆற்றைக் கடக்கும்போது சீதை அதனை வணங்கி, ‘என் கணவர் என் விருப்பங்களை நிறைவேற்றிவிட்டால் ஆயிரம் பசு மாடுகளையும், மதுக் கலயங்களையும் உனக்குப் படையலிடுகிறேன்’ என்கிறாள். ‘நாய்க் கறி’ ஒன்று மட்டும் இராமாயணத்தில் விலக்குப் பெற்றுள்ளது. இறைச்சியை விரும்பி உண்ணும் ஆரிய மரபினை இராமாயணம் தூக்கிப் பிடிக்கிறது. இவ்வாறு ஆரியர்களின் - இந்துத்துவக் கோட்பாடுகளைப் பேசும் கதைகளை ஒழிப்பதே நமது தலையாய கடமையாகும். நம்மை இழிவுபடுத்தும் பார்ப்பனர் நூல்களை அடையாளம் கண்டு அவற்றை அழிப்பதென, நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.17

பண்டித நேருவும் அசுரர்களும்

வழக்குரைஞர் சு.குமாரதேவன்




பண்டித நேரு அரசியல் தலைவர் மட்டுமல்ல அவர் ஓர் வரலாற்றாய்வாளரும் கூட. சிறைச்சாலையின் கொடுமைகளை அனுபவித்தவர். அவ்வாறு சிறைக் கொடுமைகளை அனுபவித்தபோதும் சரி பின்பு பிரதமரானபோதும் சரி அவர் வரலாற்றின் நெடிய பக்கங்களை அனைவரும் அறியுமாறு செய்தவர் என்றால் அது மிகையில்லை.

சிறைக் கொட்டடியில் அவர் இருந்தபோது தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களில் புதிய புதிய செய்திகளை எழுதியிருப்பார். அந்தச் செய்திகள் இந்திராவுக்கு மட்டும் சொன்னதல்ல அது அனைவருக்கும் சொன்னதாகும். Discovery of India(கண்டுணர்ந்த இந்தியா) என்ற புத்தகத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி எழுதியிருப்பார். நேரு மிக முக்கியமாக 4ஆவது அத்தியாயத்தில் “கண்டுணர்ந்த இந்தியா” என்ற தலைப்பில் எழுதியதன் சுருக்கம் என்னவென்பதை பாரக்கலாம்.

நேரு சொல்கிறார் இந்து என்ற வார்த்தை எந்த தொன்மையான இலக்கியங்களிலும் பயன்படுத்தப்படவில்லை. இந்து என்ற சொல் ஒரு மதத்தை பின்பற்றுபவர்களைக் குறிப்பிடவில்லை. ஆனால் அது ஒரு இன மக்களை குறிப்பிடுகிறது என்று கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தந்திர முறைகள் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிந்து சொல்கிறார். இந்து என்ற சொல் புராதானமான பாரசீகத்தில் வழங்கி வந்ததாக சொல்லும் நேரு, சிந்து நதியின் இன்னொரு புறத்தில் வாழ்ந்து வந்தவர்களைப்பற்றி குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிந்து என்ற சொல்லின் திரிவுதான் இந்து மற்றும் இந்துஸ்தான் ஆகிய சொற்கள் தோன்றி இருக்கின்றன என்கிறார். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இட்சிங் I-itsingh) என்றவர் மத்திய ஆசியாவை சேரந்தவர்கள் இந்தியாவை இந்து என்று அழைத்தார்கள் என்று சொல்கிறார் என்றும் நேரு கூறியுள்ளார்.

இந்து என்று சொல்வது இந்து என்ற மதத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமல்லாமல் சிந்துநதிக்கு கீழ் பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் அதாவது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் அனைவரையும் சேர்ந்த சொல் என்று நேரு மேலும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்பது வேதகாலங்களிலும் அதற்கு பின்பும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்திருந்த ஒன்று என்றும் பிற்காலத்தில்தான் தடைசெய்யப்பட்டது என்பதையும் மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு (Special Guest) மாட்டிறைச்சி மற்றும் கன்றிறைச்சி முதலியவை வழங்கப்பட்டுள்ளது என்பதை தன் ஆராய்ச்சியின் விளைவாக நேரு கூறியுள்ளார். கண்டுணர்ந்த இந்தியா என்ற பகுதியில் மிக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாக நேரு காவியங்கள்-சரித்திரம்-பாரம்பரியம்-பரிந்துரை என்ற பகுதியில் சொல்லியுள்ள செய்திகள் நம் திராவிட இயக்கத்தில் சொல்லப்படும் செய்திகளை அப்படியே சொல்லுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இராமாயணமும் மகாபாரதமும் ஆரியர்களின் தொடக்ககால வாழ்வினையும் அவர்களது போராட்டங்களையும் வெற்றிகளையும் விவரிக்கின்றன. ஆனால் அதில் காணப்படும் சம்பவங்கள் பிற்காலங்களில்தான் இயற்றப்பட்டன என்றும் இந்த புராணக்கதைகள் உலகில் பல்வேறு இடங்களில் பேசப்படும் கேட்கப்படும் சொல்லப்படும் கதைகளான அய்ரோப்பிய வனதேவதை கதைகள் கிரேக்க புராண கதைகள் ஆகியவை போலவே இவைகளும் உள்ளது என்றும் நேரு கூறியுள்ளார். பகவத்கீதை பற்றி நேருவுக்கே உரித்தான குழப்பும் பாணியில் சில கருத்துக்களை சொல்லியிருப்பது குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது. அதே சமயத்தில் இராமாயணம் என்பது ஆரியர்கள் திராவிடர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட போரின் விளைவு என்றும் தென்னக பகுதியில் இருந்த மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்களை குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் மாற்றி இருப்பது பற்றி இன்னும் விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என்று நேரு கூறியுள்ளார்.

உலக வரலாறு என்கின்ற இரண்டு புத்தகங்களிலும் கண்டுணர்ந்த இந்தியா மற்றும் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களிலும் ஆரிய திராவிட போராட்டம் நிகழ்ந்துள்ளது என்றும் ஆரியர்கள் படையெடுப்பின் காரணமாக தென்னக மக்களை அழிக்க வேண்டும் அவர்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை அசுரர்களாக சித்தரித்துள்ளனர் என்பதும் நேருவின் நூல்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

எப்படி இந்து என்கின்ற சொல் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு சொந்தமில்லையோ அது போலவே பக்தன் என்கின்ற சொல்லும் இன்றைக்கு இருக்கும் பக்தர்களுக்கு பொருத்தமில்லாத ஒரு சொல்லாகும். “பராமர்த்தனே யேர் இரத்தக    விரக்தோ அபர மாத்மநீ...”

என்ற வரிகளில் பக்தர்கள் என்றால் அவர்கள் கடவுளை தவிர வேறு யார் மீதோ, எந்த பொருள் மீதோ  ஆசை வைப்பவர்கள் பக்தர் கிடையாது. மேலும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாமல் வாரிசு ஆசை இல்லாமல் மனித வாழ்வில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன் பக்தன் என்று ஒரு சுலோகம் சொல்கிறது.

அப்படி பார்த்தால் பக்த கோடிகள் என்பவர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்கள் என்று சொல்வதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆக இந்து மதம் என்னும் மதத்திற்கு பெயர் இரவல் பெயர். அதில் வரும் பக்தர் என்பவருக்கு சரியான விளக்கத்தை பாரத்தால் யாருமே பக்தர்கள் இல்லை. அதேபோல் அசுரர்கள் என்று சொன்னால் அவர்கள் முழுக்க முழுக்க ஆரிய கூட்டத்திற்கு அவர்களின் ஆர்ய வர்த்தமான பரவலுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம். எனவே நேரு சொல்வது நம் திராவிடர் இயக்கத்தின் கோட்பாடுகளை அப்படியே வழிமொழிவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை ஞாயிறு மலர், 14.10.18