புதன், 18 டிசம்பர், 2019

இந்தியாவின் பூர்வீகக்குடிகள் யார்?

வகுப்புப் பிரிவினை வந்தது எப்படி?- மனுதர்மத்தின் சரிதையும் அதன் கொடுமையும் - ஓர் தமிழறிஞரின் ஆராய்ச்சி

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

ஆரியர் வருகையால் தமிழர் சீர் குலைந்து ஆரிய ஆதிக்கத்திற்கு அடிமையாயினரென்றும் அதனை நீக்கவே தமிழ்நாடு தமிழருக்கேயென்னும் கிளர்ச்சி தோற்றுவிக்கப் பட்டிருக்கிறதென்றும் நாம் இன்று கூறுவதை கூட சுயநல மென்றும் வகுப்பு வாதமென்றும் கூறும் தேசீயவாதிகளென் போர்களின் மயக்கம் தெளிவதற்காக சுமார் 10 ஆண்டுகட்கு முன் ஆதிதிராவிடர் முற்கால தற்கால நிலைமை என்ற தலைப்புடன் திருநெல்வேலி ஜில்லா மேலப்பாளையம் தோழர் மா. பெ.க.அழகர்சாமி அவர்களால் பண்டைத் தமிழர் நிலையினையும், ஆரியர் சூழ்ச்சிகளையும் விளக்கி கோலார் தங்கவயல் தமிழன் பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையில் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்.

இந்தியாவின் பூர்வீகக் குடிகள்

இற்றைக்கு சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் தற்கால இந்தியாவென்று அழைக்கப்படும் இத்தேசம் பெருங்காடு களடர்ந்த ஓர் பூபாகமாயிருந்தது. இப்பெருங்கானகத்துக்கு ஆதாரமாகிய மலைகளிலும், குகைகளிலும் "கோலர்" என்னும் ஓர் சிறு வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மனிதர்கள் கண்ணுக்குத் தென்படாமலே வாழ்ந்து வந்தனர். இவர்கள் சிறிதும் நாகரீகமில்லாதவர்கள். இவர்கள் மனிதர்க ளோடு நெருங்கிப் பழகுங்கால், இலை, தழை முதலியவை களைக் கொடிகளில் கோர்வையாகக் கட்டி இடையில் (இடுப்பில்) ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள். மற்ற காலங்களில் சுயேச்சையாகத் திரிவார்கள். இவர்கள் கரிய நிறத்தவர்கள்... காய், கனி, கந்தமூலாதிகளைப் உண்பார்கள். தேனருந்துவார்கள். மலையில் கிடைக்கும் மிருகங்களின் தந்தம், எலும்பு, பலவர்ணக்கற்கள் முதலியவற்றை அழகு பெற வரிசையாகக் கோர்த்து ஆபரணமாக காதுகளிலும், கைகளிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசுவது "கா', "கூ"ஜெ'னுஞ் சப்தத்தோடு கூடிய ஓர் பாஷை யாகும். இவ்வகுப்பைச் சேர்ந்த குடிகளை இக்காலத்திலும் குடகு நாட்டையடுத்துள்ள பெரிய மலைகளிலுள்ள குகை களில் காணலாம். சிற்சில இடங்களில் கோலர்களை திராவிடர் அடக்கியாண்டு வந்திருக்கின்றனர்.

மற்றொரு வகுப்பார்

இந்நாட்டின் பெருங்காடுகளின் சிற்சில இடங்களிலும், கிழக்கு சமுத்திரக்கரையையடுத்துள்ள சமபூமிகளிலும், கங்கை நதியின் மருங்கிலுள்ள தாழ்ந்த சமவெளிகளிலும் மற்றோர் வகுப்பார் வசித்து வந்தனர். இவ்வகுப்பார் மிகுந்த உழைப்பாளிகள், நாகரீகமுடையவர்கள். பஞ்சால் நெய்யப் பட்ட வஸ்திரங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார் கள். மாநிறம் போன்றவர்கள். நிலங்களை உழுது சமைத்து பயிரிட்டுதானியங்களை உண்பார்கள். பசுவின் பாலருந்து வார்கள். முத்து, பவழம், முதலியவற்றை அணியாகக் கோர்த்து ஆபரணமாக கழுத்தில் அணிந்து கொள்வார்கள், இவர்கள் பேசும் பாஷை தமிழ், இவ்விரண்டு வகுப்பாரே இந்நாட்டின் பூர்வீகக்குடிகள்.

ஆரியர்வருகை

இன்னவர்களின் வாழ்க்கை இவ்வாறிருக்க, மத்திய ஆசியாவினின்றும் இன்னொரு சாரார் வடமேற்குக் கண வாய்களின் வழியாய் இந்நாட்டில் வந்து குடியேறினார்கள். இவ்வகுப்பார் குளிர்ச்சியான பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்களான படியால் திடகாத்திரமாயிருந்தார்கள். ஆட்டு உரோமங்களால் நெய்யப்பட்ட கம்பளங்களை ஆடையாக அணிந்து கொள்ளுவார்கள், புது நிறத்தவர்கள், ஆடு, மாடுகளை மந்தை மந்தையாக வளர்த்து வந்தனர். குளிர்ச்சியைப் போக்கி உஷ் ணத்தைத் தருவதான மாமிசத்தை சமைத்து உண்பார்கள் "சோமபானம்" என்று சொல்லப்படும் ஓர் வகைச் செடியிலிருந்து இறக்கப்படும் மது (லாகிரியைத் தரும் வஸ்து)வை அருந்துவார்கள். வட நாடுகளில் கிடைக்கும் உருத்ராட்சத்தைக் கோர்த்து சிகை யிலும், கழுத்திலும் அணிந்து கொள்வார்கள். மீசையுடை யவர்கள். ஆயுதந்தாங்கியவர்கள். தெய்வப்பற்றுள்ளவர்கள். தங்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டும் வந்தனர். இவர்கள் நிலையான குடிகளல்ல! அடிக்கடி தங்கள் வாசஸ்தானத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள். இவர்கள் தங்கள் வாசஸ் தானத்தை மாற்றிக் கொள்ள சாதகமான குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாஷை சமஸ்கிருதம். இவர்கள் வட திசையிலிருந்து வந்து குடியேறினவராதலால் தங்களை வட நாட்டார்" அல்லது "ஆரியர் என்றும், தங்கள் பாஷையை வடமொழி" அல்லது "ஆரியம் ! என்றும், இந்நாட்டு பூர்வீக குடிகளை தென்றேயத்தவர் அல்லது திராவிடார்' என்றும் அவர்கள் பாஷையைத் தென்மொழி அல்லது "திராவிடம்", என்றும் வழங்கிவந்தனர்.

தேவகாலம் -- ஆரிய மதம்

ஆரியர்கள் இந்நாட்டில் வந்து பூர்வீக குடிகளைக் கண் ணுற்றதும் தாங்களும் அவர்களைப் போலவே நிலையான வாசஸ்தானத்தை ஏற்படுத்த ஆவல் கொண்டு கங்கை நதியின் கரையையடுத்துள்ளவர்களோடு சண்டையிட்ட னர். இவர்கள் ஆயுதப் பயிற்சியுள்ளவரானதாலும், பூர்வீக குடிகளிடம் சண்டைக்கு வேண்டிய ஆயுதங்களில்லாமை யாலும் இலகுவில் வெற்றி பெற்றனர். ஆரியர்கள் எழுதும் வன்மையுடையவர்களாதலின் இந்த சண்டையை "தேவா சுர யுத்தம்" என்று வர்ணித்து ஸ்கந்த புராணத்தை வரைந்து உள்ளார்கள். இவர்கள் கங்கை நதியையடுத்துள்ள தாழ்ந்த சமவெளிகளில் பாஞ்சாலம், அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம், அயோத்தி, கண்டகி, கோசலம், மிதுலை, கோசி முதலிய பெயரோடு பல பட்டணங்களை நிருமாணித்தனர். ஆண்டு கள் ஓராயிரம் கடந்தன. இவர்கள் ஜனத்தொகை அதிகமாகி யது. தலைமை வகிப்பதற்குப் பிராமணர்கள் என்றழைக் கப்படுவோர் இக்காலத்தில் பெருமுயற்சி செய்து வருகிறது போலவே அக்காலத்திலும் தலைமை வகிப்பதற்காக ஆரியர்களிடையில் பிளவுகளேற்பட்டு சச்சரவுகள் நடந்தது. முடிவில் பெருஞ்சண்டையும் நடந்தது. இந்த நிகழ்ச்சியையே "வியாசர்" என்னும் காரணப் பெயர் பூண்ட ஓர் ஆரியர் கட்டுரையாக வரைந்து "பாரதம்" என வழங்கினார். இன்னும் இந்த வியாசர் என்பாரால் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் எழுதப்பட்ட காலமுமிதுவேயாகும்.

ஆரிய-திராவிட கலப்பும்

நான்கு ஜாதிப் பிரிவினையும்

ஆரியர்கள் ஜனத்தொகை அதிகமாய்விட்டபடியால் அவர்கள் உணவுக்கு வேண்டிய மாமிசம் கிடைக்கவில்லை. அவர்கள் பின்னும் தெற்கே சென்று பூர்வீக குடிகளிடையில் பலவித பாட்டுகள் பாடியும், அதற்கேற்ப நடித்தும், சம்பிர தாயமாகப் பேசியும் அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள். இதுவே 'நாடகம்' எனப்படுவது. 'ஆரியர்கள் கூத்தாடினாலும் காரியத்தில் கண் என்பதே போல் பூர்வீக குடிகள் உவந்த ளிக்கும் உணவுப்பொருள்களையேற்றும் உண்டும் காலங் கடத்தி வந்தனர். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'' என்பதே போல் ஆரியர்கள் தங்கள் மாமிச உணவை அனாவசியம் - அனாச்சாரமெனத் தள்ளி, தானிய உணவை பிரியமாய் உண்ணவாரம்பித்தனர். பூர்வீக குடிகள் உணவுப் பொருள்கள் கொடுக்க மறுத்த விடத்து அவர் களிடும் பயிர்களை அறுத்தும், தானியங்களை கொள்ளையிட்டும் வந்தனர் ஆரியர்கள். ஆரியர்கள் உபத்திரவங்களைப் பொறுக்க முடியாத பூர்வீக குடிகள் தங்களைத் தாங்களே காப்பாற்றவேண்டி, ஆயுதங்களைத் தயாரித்தனர்.

வகுப்புப் பிரிவினை

இவ்வாறு பூர்வீக குடிகள் (பூர்வீக திராவிடர்கள்) தங்களுடைய பலத்தை அபிவிருத்தி செய்து கொண்டதும், பார்த்தார்கள் ஆரியர்கள், தங்களுடைய திருட்டுத்தனம் நடவாதெனக் கண்டனர். ஆகவே ஒரு சில பூர்வீக குடி களோடு சமாதானம் செய்து கொண்டனர். அத்துடனிருக்காது திராவிடர்கள், ஆரியர் தெய்வங்களை வணங்கும்படியாக வும் செய்து வந்தனர். கலப்பு மணமும் செய்து கொண்டனர். ஆரிய-திராவிடர்கள் (கலப்பு ஜாதியார்) பெருங்குழுவினராய் விட்டமையாலும், சுயநலங்கருதிய ஆரியர்கள் அவர்க ளைக் கொண்டே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள் ளும் பொருட்டும் அவர்களைப் பிரம்ம, க்ஷத்திரிய , வைசிய, சூத்திர எனும் நான்கு பிரிவினராகப் பிரித்து தாங்கள் முதல ணியினின்று வாழ்க்கை நலம் பெற்றனர்.

பூர்வீக திராவிடர்களும் பவுத்த மதமும்

ஆரியர்கள் - வஞ்சக சூழ்ச்சிக்கு இடங்கொடாத பூர்வீக திராவிட மக்கள், கலப்புற்ற ஆரிய-திராவிடர்களை நீக்கி தனியாக வாழ்ந்தனர். தென் பாகத்திலுள்ள பூர்வீக திராவிடர் களையும், மத்திய பாகத்திலுள்ள ஆரிய - திராவிடர்களையும் பூர்வீக திராவிட அரசர்களே ஆண்டு வந்தனர். வருடங்கள் ஓராயிரம் சென்றன. (கி.மு. 1000-0) மலையாளம், கொச்சி முதலிய நாடுகளை ஆட்சி செய்து வரும் மன்னர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரங்களையே (நட்சத்திரங்களின் பெயர்களையே) தங்கள் பெயராக ஏற்றுக்கொள்ளுவது போல பூர்வீக திராவிட (தமிழ்) அரசர்களிடையில் அவர்கள் பிறந்த வருஷத்தின் பெயரையும் அவர்கள் பெயராக வழங்கி வந்தனர் ஒரு சிலர். இஃதிவ்வாறாக மத்திய பாகத் திலுள்ள ஆரிய-திராவிடர்களை - அரசாண்டு வந்த சாக்கி யர் மரபிலுதித்த மன்னன் சுத்தோதனர் என்பாருக்கு (கி.மு. 550) சித்தார்த்தி வருடம் ஓர் ஆண்மகவு பிறந்தது. இக் குழந்தைக்கு சித்தார்த்தர் என நாமகரணஞ் சூட்டினர். இவர் வாலிப வயசையடைந்ததும் ஆரிய திராவிடர்களால் செய்யப்படும் பலி, மிருகவதை முதலியவற்றைக் கண்டு அவற்றை தடுப்பதற்கான வழிகளைச் சிந்தித்தார். முடிவில் பூர்வீக திராவிடர்களின் கொள்கையை ஆதாரமாகக் கொண்டே சில அரிய உபதேசங்களை ஜனங்களிடையில் போதித்தார். இவரை எல்லாரும் பின்பற்றினார்கள். இவர் வெகு காலம் ஜீவந்தராய் வாழ்ந்தபடியால் இவரை பெரிய கிழவனென்று பொருள்படும் பவுத்தர் (புத்தர்) என்று அழைத்தனர். இவர் உபதேசத்தை ஏற்றுக் கொண்டவர்களை பௌத்த சமயிகள் (புத்த மதத்தினர்) என்றும் வழங்கி வந்தனர். புத்த மதம் தலை சிறந்து நின்றது. இன்னாளில் தென்னாட்டில் இராவணன், மகாபலி, நந்தன் முதலிய பூர்வீக திராவிட மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களை வஞ்சகமாக ஆரியர்கள் கொன்று அன்னவர்கள் நாடுகளை யும் ஆரியர்கள் கைப்பற்றின கதைகளை விரிக்கிற்பெருகு மென விஞ்சி விடுத்தனம். இவ்வாறு ஆன நிகழ்ச்சிகள் புராணங்களாகவும் பிற்காலத்தில் சங்கராச்சாரி என்பவரால் மகாவிஷ்ணுவின் பத்து அவதார திருவிளையாடல்களாகவும் கற்பனா சக்தியுடன் எழுதப்பட்டன.

- தொடரும்

- விடுதலை: 18.1.1940

- விடுதலை நாளேடு 18 12 19

18.12.2019 அன்றைய தொடர்ச்சி

வினாயக புராணம் கூறுவது

மேலே சொல்லப்பட்ட ஸ்கந்த புராணம், வேதம், பாரதம், இராமாயணம், பாரதம் முதலியகட்டுரைகளால் பூர்வீக திராவிடர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பார்க்கிலும் அதிகமான தீமையைத் தரும் நூல் வேறொன்றுளது. . அதனைப் பற்றி சிறிது கூறுவோம். ஆரியர்களே எல்லாரிலும் மேம்பட்டவர்கள்; அவர்களே கடவுளை வணங்கத் தகுதியுள்ளவர்கள்; ஏனையோர் ஆரியர்களையே வணங்க வேண்டும் என வியாசர் என்பவரால் எழுதப்பட்ட நூற்கள் அனந்தமாயினும் அவற்றுள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பற்றுடையவையாவிருப்பதையுணர்ந்த ஆக்கியோர் இறுதியாக எழுதப்பட்ட வினாயக புராணத்தில் கூறியிருப்ப தை நம் வாசகர்கள் நன்கறியுமாறு இங்கு குறிப்பிடுகிறோம். அவையாவன, "நம்மால் எழுதப்பட்ட நூற்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்ட கொள்கையுடையவையாயிருப்பது எனது குற்றமன்று. அவைகள் அவ்வக்காலங்களில் கால வேறுபாட்டுக்கும் ஜனங்களுடைய மனமகிழ்ச்சிக்கும் தக்கவாறு எழுதப்பட்டவைகளாகும். ஆதலால் நூற்களை வாசிக்கும் வாசகர்களே உண்மையை ஆராய்ச்சி செய்து நடந்து கொள்ளல் வேண்டும்.

மனுதர்ம வரலாறு

ஆதலால் பிற்காலங்களில் நூலாராய்ச்சி வல்லுநர் ஒருக்கால் இக்குற்றங்களைக் கண்டு ஆரியர்களால் எழுதப்பட்ட நூற்களனைத்தும் வெறுங்கட்டுரைகளெனத் தள்ளிவிடுவாராயின் அக்கால ஆரியர்களின் சந்ததிகளுக்கு அத்துணை மேம்பாட் டுக்கு வழியில்லையென்றும் ஆரி யர்கள் சூழ்ச்சியை பெருங்கூட்டத்தினரான கலப்புற்ற ஆரிய திராவிடர்களும் கலப்பற்ற பூர்வீகக் குடிகளும் அறிந்து கொண்டால் ஆரியர் சந்ததிகளுக்கு துன்பமுண் டாகுமென்றுங்கருதிய ஆரியர்கள் தங்கள் சந்ததிகளை சுகமாக வைக்கவேண்டி எக்காலத்திலும், யாவராலும் தள்ளற்பாலதல்லாத ஓர் நூலை இயற்றவேண்டுமென வெண்ணினர். அவ்வெண்ணத்துக்கு, "கூத்துக்கு ஏற்ற கோமாளி" என்பதே போல், அக்காலத்தில் ஆரியர்களுக்கு தலைவராயிருந்து பாலனம் பண்ணி வந்த ஏழாவது மனு வைசுதன் என்பவருமிசைந்தார். இவர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு பல ஆரிய சிற்றரசர்களையும் ஆண்டு வந்தார். அரசர்களில் முதன்மை பெற்றவர்களுக்கு 'மனு' வென்ற பட்டம் அக்காலத்து வழங்கி வந்தமையால் இவரும் வைசுத மனுவென்னும் பெயரோடு ஆட்சி புரிந்து வந்தார். பிராமணர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் பூஜை இவரையே குறிக்குமாதலால் இவருக்கு சிரார்த்தமனு வென்னும் காரணப்பெயர் வழங்கலானது. இவர், சுயநலங்கருதிய ஆரியர்கள் பலரை அங்கத்தினராகக் கொண்ட ஓர் ஆலோசனை சபையை ஸ்தாபித்து ஓர் நூலை எழுதினார்.

அதில் கூறப்பட்டவை

இந்நூலில், பிராமணர் எனப்படுவோரை எல்லாரும் வணங்க வேண்டும்; அவர்களுக்கு திருப்தியான உணவளிக்க வேண்டும்; பின்னர் அவர்கள் கருதியவற்றால் சந்தோஷிப்பிக்க வேண்டும்; அவர்களுக்கு எள்ளத்தனை துன்பமியற்றியவர்களும் அவர்களிஷ்டப்படி நடவாதவர் களும் கடுந்தண்டனையடைய வேண்டும்; பிராமணர்க ளுக்கு மற்றவர்களால் துன்பமேற்பட்டவிடத்து அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசர்களுடைய தயவு இன்றியமை யாததுவாதலால் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ஆயுதப்பயிற்சி பெற்றவர்களை சத்திரியர்கள் எனக்கூறி பின்னுள்ள இரு வகுப்பினரும் சத்திரியர்களை வணங்க வேண்டும்; அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று எழுதி வைத்தனர்.

பிரித்தாளும் தந்திரம்

இந்நூலில் பூர்வீக திராவிடர்களை இம்சிப்பதற்காகவும் அவர்களினின்றும் ஆரியர்-திராவிடர்களை விரோதப்படுத் தவும் பிரித்தாளுந் தந்திரம் கையாளப்பட்டது. ஆரிய-திராவிடர்களை (தாங்களுமுட்பட) நான்கு வர்ணமாக வகுத்து வர்ணாசிரமப்படி சட்டம் அல்லது நீதி ஏற்படுத்திய இந்நூலில் பூர்வீக திராவிடர்களை "நீசர்" என்றும், "தீண்டப் படாதவர்கள்" என்றும் ஏளனமாக எழுதியதுமின்றி மனித வர்க்கத்தினின்றும் விலக்கி விட்டார்கள்.

சகோதரர்களே! வாசகர்களே!! பார்த்தீர்களா ஆரியன் தந்திரத்தை இக்காலத்தும் பாண்டித்யமடைந்த விற்பனர் களால் வேதம், இதிகாசம், புராணம் யாவும் பொய்மையுடைத் தெனக் கண்டறியப்பட்ட இக்காலத்தும், காருண்ய ஆங்கில அரசாங்கத்தாரால், "இந்துக்களால் எழுதப்பட்டவைகள்" வீண் கட்டுரைகள் எனத் தள்ளிவிடப்பட்ட இக்காலத்தும் ஆரிய சூழ்ச்சியால் எழுதப்பட்ட மனு நீதியை அறவே தள்ளிவிட முடியாமல் அந்த சட்டத்தின் பெரும்பாலும் இன் னும் அமுலிலிருந்து வருகிறது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்றவாறு மனு நீதி இயற்றப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவும் பழங்கதைகளில் ஒன்றாய்விட்டது. இதன் ஆயுளுங்கிட்டிவிட்டது. இரவும் அந்த நீதி நூல் ஒரு தலைச் சார்பாக எழுதப்பட்டதென்பது வெள்ளிடை மலையெனத் தெள்ளிதில் விளங்குகிறது. ஆத லின் இக்காலத்தில், நவீன நாகரீகத்திலீடுபட்டு வருமிக்காலத் தில் பழங்கதையான மனு நீதியைக் கையாளுவது நியாய மானதன்று என உணர்ந்து தக்கன செய்யத் தமிழர்முன் வருவாராக.

- விடுதலை: 18.1.1940

 -  விடுதலை நாளேடு, 20.12.19

செவ்வாய், 26 நவம்பர், 2019

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை தமிழர் தலைவரிடம் அளித்து ஆதரவு கோரினர்

மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு, மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்த்து கூட்டமைப்பு உருவாக்கம்!

*மும்மொழிக் கொள்கை என்பதன் பெயரால் இந்தியை திணித்திடும் 2019 தேசியக் கல்விக் கொள்கையை கைவிடுக!

*உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியில் வழக்காடுவதற்கு உரிய ஆணை பிறப்பித்திடுக!

தென் மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து தங்களது "குப்பம் பிரகடனத்தின்" கோரிக்கையினை அளித்தனர். (சென்னை பெரியார் திடல் - 15.11.2019)

சென்னை, நவ.16 தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய பகுதியினை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்டுள்ள 'திராவிடர் செயற்களம்' அமைப்பின் பொறுப்பாளர்கள் திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை - பெரியார் திடலில் சந்தித்து தங்களது அமைப்பின் சார்பாக மத்திய அரசிற்கு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேற்றத்திற்கான மனுவினை அளித்தனர். உரிய வழிகாட்டுதலையும், ஒருங்கிணைப்பையும் திராவிடர் கழகத்தின் தலைவரிடம் வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் 15.11.2019 அன்று சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரைச் சந்தித்து தங்களது அமைப்பு பற்றி எடுத்துரைத்தனர். தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளின் மொழி உரிமையினைப் பாதுகாத்திடவும் இந்தி மொழி மேலாதிக்கத்தினை தடுத்து நிறுத்திடவும், அரசியல், பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகாமல் தென் மாநிலங் களைப் பாதுகாத்திடவுமான நோக்கங்களைக் கொண்டு திரா விடர் செயற்களம்(We are South Indians) 
எனும் அமைப்பு அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10ஆம் நாள் திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் சந்தித்து, தங்களது அமைப்பின் நோக்கங்களைக் கோரிக்கை களாக்கி குப்பம் பிரகடனம்(Kuppam Declaration) என வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசியல்கட்சித் தலை வர்கள், சமூக அமைப்பினரைச் சந்தித்து தங்களது அமைப்பின் கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்தி மொழித்திணிப்பை வலுவாக எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்து தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். நேற்று (15.11.2019) சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து குப்பம் பிரகடனத்தில் உள்ள கோரிக்கைகளை விளக்கி திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பினை வேண்டினர்.

திராவிடர் செயற்களத்தில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகள்

இந்தி மேலாதிக்கத்திற்கு தூண்டுதலாக உள்ள அரசியல் சாசனத்தின் அரசமைப்பு உறுப்புகள் 343, 344, 345, 346 மற்றும் 351 திருத்தப்பட வேண்டும், இந்தி மொழிக்கான சிறப்புரிமையை நீக்கரவு செய்ய வேண்டும்.

வருகின்ற நவம்பர் 18 அன்று தொடங்கவிருக்கின்ற நாடாளு மன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தமிழகத்தின் மக்க ளவை மாநிலங்களவை உறுப்பினர்கள் 5 மாநிலங்களின் உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து அரசியல் சாசன திருத்தங்களை கோரவேண்டும்.

தென்மாநில ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியுரிமையை பறிக்கும் தேசிய கல்விக்கொள்கை - 2019அய் திரும்பப்பெற வேண்டும்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். - இந்திய ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு நடவடிக்கை களுக்கு மாற்றாக மாநில சுயாட்சி முறையை (State Autonomy)வலியுறுத்த வேண்டும்.

இட ஒதுக்கீட்டு முறையை சமூக மற்றும் கல்வியில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர்க்கே நடைமுறைப்படுத்த வேண் டும். சமூகநீதிக்கெதிரான பொருளாதாரத்தில் பின்னடைந்த உயர்வகுப்பினர்க்கான இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற வேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்திய ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கே வழங்க வேண்டும்.

டில்லியை சுற்று சுழல் மாசுவிலிருந்து பாதுகாக்க இந்திய ஒன்றிய அரசின் திட்டங்கள் தென்மாநில நகரங்களுக்கும் மாற்ற வேண்டும்.

அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் அம்மாநில மக்களின் தாய்மொழியே வழக்காடு மொழியாக சட்டமியற்ற கோர வேண்டும்.

இந்திய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் தகுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும்.

தொழில்துறை மற்றும் வேளாண்துறையில் பணியாற்றும் அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் அரசமைப்பு உறுதி யளித்த வாழ்க்கை கூலி முறை(Living Wages) நடை முறை யாக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

பொறுப்பாளர்களிடம் தமிழர் தலைவர்

தம்மைச் சந்திக்க வந்த திராவிடர் செயற்கழகத்தின் பொறுப் பாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

உங்களது (திராவிடர் செயற்களம்) கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டி யவை. கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் இந்தி எனும் ஒரு மொழியினை எதிர்த்து அல்ல; இந்தி மொழியை, பிற மொழி பேசும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்துதான். இது ஒரு மொழித் திணிப்பாக மட்டும் கருதப்படக் கூடாது. ஒரு காலாச்சாரத் திணிப்பாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசை எதிர்த்து அமைதி வழியில் போராட வேண்டும். பிற தென் மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் இரு மொழிக்கொள்கை (தாய் மொழி & ஆங்கிலம்) நடை முறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதற்கு தந்தை பெரியார் ஊட்டிய திராவிட இன உணர்வுதான் அடிப்படைக் காரணமாகும். மொழியால் தென் மாநில மக்கள் வேறுபட்டிருக்கலாம். இனத்தால் - திராவிடர் இனத்தால் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் திராவிடர் செயற்களம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர்த்த பிற தென் மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல்கள் வலுப்பட்டு வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்துக்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசுங்கள். கூடிய விரைவில் தமிழகத்திலோ அண்டை மாநிலத்திலோ அல்லது இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலை வர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அடுத்த கட்டமாக தலைநகர் டில்லியில் ஒரு போராட்ட மாநாடு கூட்டப்பட வேண்டும். திராவிடர் செயற்களத்தின் செயல்பாடுகளுக்கு திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும்.

கல்வித்திட்டம் என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒன்றாக இல்லாத நிலையில் எப்படி ஒரே மாதிரியான கல்விக்கொள்கையினை இந்தியா முழுமைக்கும் ஏற்றுக் கொள்ள முடியும். கல்விக் கொள்கையும் மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு ஒரே வழி 'கல்வி' மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல் அழுத்தம் பெற வேண்டும். தென் மாநிலங்கள் இதற்கு முன்னோடியாய் வட மாநிலங்களின் உரிமையினையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்;  இது வடக்கு - தெற்கு பிரச்சினை அல்ல; அடக்குமுறைக்கு எதிரான  ஒட்டு மொத்த குரலின் வெளிப்பாடு.திராவிடர் செயற்களத்தின் பணி பாராட்டுதலுக்கு உரியது. எங்களது ஒத்துழைப்பு, ஆதரவு எப்பொழுதும் உண்டு.

இவ்வாறு தமிழர் தலைவர் சுருக்கமாக உரையாற்றினார்.

தமிழர் தலைவரைச் சந்திக்கும் பொழுது திராவிடர் செயற்களத்தின் பொறுப்பாளர்கள் நிறுவனர் அபிகவுடா (கருநாடகம்) சிவலிங்கம், செந்தமிழ் முருகன் மற்றும் தோழர்கள் பங்காருபேட்டை ராமமூர்த்தி (ஆந்திரா), டார்ஜான், பிரதாபன் மற்றும் நாகேஷ் உடனிருந்தனர். சந்திப்பின்பொழுது திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் உடன் இருந்தார்.

 - விடுதலை நாளேடு 16 .11.19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

திராவிடநாடும்-திரு.வி.க.வும்!

பெரியார் என்றால் திரு.வி.க.


திரு.வி.க. என்றால் பெரியார்




ப.திருமாவேலன்


இவர்கள் இருவரும் ஒருவரையொரு வர் வேறொருவருடன் இவ்வளவு நட்புடன் இருந்தது இல்லை.

1917 முதல் 1953 வரை (அதாவது திரு.வி.க. மறையும் வரை!) முரண்பட்ட நேரத்தில் கூட நட்பாய் இருந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் நீங்கலாக அதாவது 1925 முதல் 1937 வரையில் பெரியாரும் திரு.வி.க. வும் முரண்பட்ட காலக் கட்டம். அப்போதும் இருவரும் நட்பாய் இருந்தார்கள். திரு.வி. க.வை மிகக் கடுமையாகக் கூட தாக்கி எழுதி இருக்கிறார் பெரியார். ஆனால் மென்மை யாகத் தான் பதில் தருவார் திரு,வி.க.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்த பெரியாரை சந்திக்கச் செல்கிறார் திரு.வி.க. அவரை பார்த்ததும் பெரியாரின் கண்களில் லேசாக நீர் வழிகிறது. 'நான் செத்தால் அழுவதற்கென்று நீங்கள் தான் இருக்கிறீர்கள்' என்கிறார் பெரியார். 'இங்கு அய்யாவை பார்க்க எத்தனையோ பேர் வருகிறார்கள். ஆனால் உங்களைப் பார்த்ததும் தான் அழுகிறார்' என்றார் அருகில் இருந்தவர்.

1953ஆம் ஆண்டே திரு.வி.க. அவர்கள் இறந்து விட்டார்கள். அந்தக் காலக்கட்டத் தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் தங்கி இருந்தார் பெரியார். எப்போது சென்னை வந்தாலும் திரு.வி.க.வின் ராயப்பேட்டை வீட்டுக்குச் சென்று அவரை பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத் திருந்தார் பெரியார்.

அப்படித்தான் திரு.வி.க.வை பார்க்கச் செல்கிறார் பெரியார். ' மறைமலையடிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சென்று பாருங்கள்' என்கிறார் திரு.வி.க. அந்த உத்தரவை தலைமேல் போட்டுக் கொண்டு அடிகளைச் சென்று சந்திக்கிறார் பெரியார். 15.9.1950 அன்று அடிகள் மறைகிறார். அதற்கு முந்தைய நாள் அடிகளைச் சென்று பார்க்கிறார் பெரியார். மரணப்படுக்கையில் அடிகள் இருக்கும் படம் 'விடுதலை' நாளிதழில் வெளியாகி உள்ளது. அந்தளவுக்கு திரு.வி. க.வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர் பெரியார்.

அதனால் தான் 'சுயமரியாதை இயக்கத் துக்கு தாய் நான். தந்தை தான் பெரியார் ஈ.வெ.ரா. அந்தப் பிள்ளை தந்தையிடமே அதிகமாக வளர்ந்து விட்டது' என்று திரு.வி.க. சொன்னார். இது 1940 வரை மட் டும்தான். 1942இல் சென்னை பொதுமருத்துவ மனையில் பெரியார் - திரு.வி.க. சந்திப்பு நடந்தது. இறுதி வரை தாயும் தந்தையும் ஒன்றாகத்தான் சுயமரியாதைக் குழந் தையை வளர்த்தார்கள். 1942க்குப் பிறகு நடந்த திராவிடர் கழக மாநாடுகள், திருக் குறள் மாநாடுகள், பெரியார் அழைத்த பொதுக்கூட்டங்கள் ஆகிய அனைத்திலும் திரு.வி.க. இருந்தார். இந்த தகவல்களை திரு.வி.க. ஆய்வாளர்கள் சொல்வது இல்லை. ஏனென்றால் இவை எதுவும் 'திரு.வி.க. எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள்' நூலில் இல்லை.

ஏன் இல்லை? திரு.வி.க. மறைத்து விட்டாரா? இல்லை. 'வாழ்க்கைக் குறிப்பு கள்' நூலை 1944ஆம் ஆண்டே எழுதி திரு. வி.க. வெளியிட்டு விட்டார். இதன்பிறகும் ஒன்பது ஆண்டுகள் திரு.வி.க. அவர்கள் வாழந்தார்கள். எனவே தான் அவரது தேசிய இயக்கப் பணிகளை, தொழிற்சங்கத் தொடர்புகளைச் சொல்லும் ஆய்வாளர்கள் திராவிட இயக்கத் தொடர்புகளைச் சொல்ல வில்லை.

கடலூரில் நடந்த திராவிட நாடு பிரி வினை மாநாட்டில் (14.09.1947) தந்தை பெரி யார் படத்தை திறந்து வைத்தவர் திரு.வி.க.

''திராவிடப் பெருமக்களின் தலைவன், எனது பழைய நண்பரும் உழுவலன்பனு மாகிய இராமசாமிப் பெரியார் படத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகி றேன். இவர் ஓர் இயற்கை ஞானி என்று தான் கூற வேண்டும். பெரும் பெரும் காரியங்களை எல்லாம் எளிய முறையில் சாதிக்கும் திறமை இவரிடம் ஆரம்பத்தில் இருந்தே காணப்பட்டு வந்தது.

மனோதத்துவ ஆராய்ச்சியின் படி இப்பெரியாரின் புற உறுப்புகளை நோக் கினால் அஞ்சாமையின் சாயல் இவருடைய கண்ணொளியில் பொலிவதைக் காண லாம். இந்தியா எங்கும் ஏன் உலகமெங்கும் கூட இந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்திய சுதந் திர விழா கொண்டாடப்பட்ட காலத்தில் 'நாம் எதிர்பார்த்த சுதந்திரம் அல்ல இது. சுரண்டல் சக்கரத்துடனும் சர்வாதிகார சக்க ராயுதத்துடனும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியைத் துவங்கும் நாள் தான் இது' என்று கட்டளையிட்டார். தன் மனச்சாட் சிக்கு தோன்றியதை யார் என்ன கூறினா லும் தனக்கு லட்சியமில்லை என்று வெளி யிட எவ்வளவோ அஞ்சாமை வேண்டும். அஞ்சாமை உள்ள இடத்தில் உண்மை இருக்கும். உண்மை உள்ள இடத்தில் தான் அஞ்சாமை பிறக்க முடியும்" என்று பேசியவர் திரு.வி.க. அவர்கள்.

திராவிடர் கழகத்தின் 19ஆவது மாநாடு ஈரோட்டில் 1948 அக்டோபர் மாதம் நடந்தது. இதில் 'திராவிட நாடு' படத்தைத் திறந்து வைத்து திரு,வி.க, பேசினார்.

''இந்நாட்டு மக்கள் எல்லோருமே திரா விடர்கள் தான். என்றும் திராவிடன் தான். அதனால் திராவிட நாடு படத்தை திறந்து வைப்பதில் தவறு இல்லையே என்கிற முடிவுக்கு நான் வந்தேன்" என்று சொல்லி விட்டு திராவிடம் பற்றி தான் ஆயிரம் பக்கம் அளவில் ஒரு புத்தகம் எழுத இருக்கிறேன் என்றார். திராவிடம் என்ற சொல்லுக்கான விளக்கத்தை திரு.வி.க. விவரிக்கிறார். 'திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதங்களே போதும்' என்று அடுக்குகிறார்.

இந்தியாவில் இருப்பது ஆரியம், திரா விடம் என்ற இரு கலாச்சாரங்கள் மட்டுமே, திராவிட நாடு வளமானது, திராவிட நாடு பிரிந்தால் தான் தொழிலாளர் வாழ்வு வளம் பெறும், திராவிடர் கழகம் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும் போதுதான் தொழி லாளர் வாழ்வு மலரும். ஆரிய மாயை அகற்றி திராவிடத்தில் மறுபடியும் புத்து ணர்ச்சியை உண்டாக்கப்பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்துக்கு நீங்கள் யாவரும் தன்மான தமிழ்மகன் ஒவ்வொருவனும் உரிமை கொண்ட தொழிலாளர் தோழனும் உதவி புரிதல் வேண்டாமா?" என்று கேட்ட வர் திரு.வி.க.

இதைத் தொடர்ந்து  31.10.1948 அன்று சென்னை ஜிம்கானா மைதானத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் திரு.வி.க. இக்கூட்டத் தில் பேசும்போது, 'நமது குறிக்கோள், நமது முடிவான லட்சியம் திராவிடநாடு, திருவிட நாடு, திரவிடநாடு தான்' என்றும் முழங் கினார். உலக சமதர்ம இயக்கத்துக்கு துணை புரிவது தான் திராவிடர் கழகம் என்றும் கூறினார். 'பரத கண்டம் பேசிய நான் திரா விட நாடு கேட்பதால் எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று சிலர் கேட்பதாக சொல்லிக் கொண்டார் திரு.வி.க.

''இனி யாவரும் ஈரோடு காட்டும் வழி, ஈரோட்டுப் பெரியார் காட்டும் வழி நடந்து வர வேண்டியதுதான். திராவிட நாடு திரா விடருக்கே' என்று தனது பேச்சை முடித் தார்கள்.

1949 மே 1 அன்று சென்னையில் திரா விடர் கழகம்  நடத்திய  மே தினக்கூட்டங் களில் திரு.வி.க. பங்கெடுத்தார். 1953 செப் டம்பர் மாதத்தில் திரு.வி.க.வின் பிறந்த நாளைக் கொண்டாடினார் பெரியார். திரு. வி.க. படத்தை பெரியார் திறந்து வைத்து பேசினார். 13.9.1953 அன்று இந்த விழாவை பெரியார் நடத்தினார். 17.09.1953 அன்று திரு.வி.க.அவர்கள் மறைந்தார்கள். தனது நண்பருக்காக அவர் உடல் தாங்கிய ஊர்வ லத்தில் சென்ற பெரியார் அவர்கள், இறுதி நிகழ்ச்சிகளில் முழுமையாக அமர்ந்து இருந்தார். அதன்பிறகு நாடு முழுவதும் திரு.வி.க.வுக்கு இரங்கல் கூட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம்.

"பெரியார் என்றால் திரு.வி.க.

திரு.வி.க. என்றால் பெரியார்"

என்று சொல்வது இதனால் தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 7.9.19

கீழடி திராவிடத்தின் தாய்மடி!




ஜாகோர் என்ற ஜெர்மானிய பழைய பொருட்கள் சேகரிப்பாளர் உலகம் முழுவதும்  சென்று பண்டைய நாகரீகத்திற்கான பொருட் களை சேகரித்துக்கொண்டு இருந்த போது நெல்லை மாவட்டத்தின் வடக்கில் உள்ள வீர பாண்டியபுரம் என்ற ஊரில் நூற்றாண்டு பழைமை யான வரலாற்று அடையாளங்கள் உள்ளதாக கேள்விப்பட்டு 1876-ஆம் ஆண்டு அச்சிறு கிராமத்திற்கு சென்றார்.   அங்கு கிடைத்த சில பழைய மண்பாண்டங்கள் ஆதிச்ச நல்லூரிலி ருந்து கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூருக்கு சென்றார்.

புற்காடுகளுக்கு இடையில் அங்கு உள்ள ஆடு மேய்ப்பவர்கள் அழைத்து சென்று காட்டிய இடமெல்லாம், அங்கு ஒரு மனித நாகரிகம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதைக் கண்டு இங்கிலாந்தின் அகழ்வாராய்ச்சி ஆய்வா ளர்களிடம் இது குறித்து எடுத்துக்கூறிவிட்டு தனது கையில் கிடைத்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஜெர்மனுக்கு சென்றுவிட்டார்.

தற்போது அவர் எடுத்துச் சென்ற ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட் கள் ஜெர்மன் தொல்பொருள் மியூசியத்தில் பாதுக் காக்கப்பட்டு வருகிறது,

அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியிட மிருந்து பிரிட்டிஷ் அரசரின் ஆளுமைக்குக் கீழ் இந்தியா வந்தது, அதன் பிறகு ஆதிச்ச நல்லூர் அகழாய்வு வேகம் பிடித்தது, 1904ஆம் ஆண்டு அலக்சாண்டர் ரியா என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பழைமையான தொல்லியல் களம் என்று ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்டார்.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் பழைமை நாகரீகம் புதைந்துள் ளது என்றும், அதை அகழாய்வு செய்யுங்கள் என்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் ஒருமித்த குரலாக கோரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கும் போது  வைகை நதிக்கரையில் 2013-ஆம் ஆண்டு புதிய அகழாய்வு  அடையாளங்கள் கண்டறியப்பட்டது, வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன.

அதில் கீழடியை 4 கட்டங்களாக மத்திய அரசு ஆய்வு நடத்தி முடித்தது, ஆனால் அதுகுறித்த இறுதி அறிக்கையை இன்றுவரை வெளியிட வில்லை. அகழாய்வை தலைமையேற்று நடத் திய அமர்நாத்தை விதிமுறைகளுக்கு முரணாக அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது, இந்த நிலையில் தமிழார்வலர்கள் பலர் நீதிமன்றத்தில் கீழடிஅகழாய்வு குறித்து வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து தமிழக அரசின் அகழாய்வுத் துறை கீழடி ஆய்வை கையிலெடுத்தது,

கீழடி அகழாய்வின் அய்ந்தாம் கட்ட ஆய் வுகள் துவங்குவதற்கு முன்பு தமிழகத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அபாரவெற்றி பெற்றது, மதுரையில் எழுத்தாளரும் கீழடிகுறித்தும் வைகை நதிக்கரை நாகரீகம் குறித்தும் அதிகம் எழுதியவருமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப் பினராக பதவியேற்றார். அதன் பிறகு ஜூன் மாதம் மீண்டும் கீழடியில் அகழாய்வுப் பணிகள் துவங்கியது. இம்முறை தமிழக அரசின் கீழ் அப்பகுதிகுறித்து நன்கு அறிந்த நாடாளுமன்ற உறுப்பினரின் ஆர்வம் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக கீழடி அகழாய்வுப் பணிகள் வேகமாக நடைபெற்றன,

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரம் கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது,

அந்த ஆய்வு முடிவுகளின் படி உலக நதிக்கரை நாகரிகம் குறித்த வரலாற்றை திருப்பிப் போடும் வகையில் அங்கு கிடைத்த பொருட்கள் அமைந்திருந்தது, அதாவது சிந்து வெளி நாகரி கத்திற்கு முன்பான ஒரு நாகரிகம் என்று உறுதி யிட்டுக் கூறப்படும் வகையில் ஆய்வு முடிவுகள் அமைந்திருந்தது.

ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் , நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன. கி.மு 600-களிலேயே பேச்சும் எழுத்தும் இருந்தி ருப்பது, இந்திய மொழிகளிலேயே அதிக அக வையுடைய மொழி, தமிழ்தான் என்பதை உறுதி செய்கிறது.

கீழடி ஆய்வில் 1,001 குறியீடுகள் கிடைத் திருப்பது, சாதாரண செய்தியல்ல. சிந்துவெளி ஆய்விலும் கீழடி ஆய்விலும் நிறைய ஒற்றுமை கள் தெரிய வருகின்றன. விரைவில் சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது சான்றுகளோடு நிறுவப் படும்; ஆம்! இந்தியாவின் தொல் குடிகள் தமிழர் என்பது சான்றுகளோடே நிறுவப் படும்.

சங்ககாலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங் களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத் தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பக டைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சி யில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப் பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

கீழடி அகழாய்வு முடிவுகள்

கருதுகோளாக இதுவரை எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை, கீழடி திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இருந்த, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.  மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது  கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பேசுகை யில், "பத்து நாட்களாக நாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கீழடியின் நான்காம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளைத் தமிழகத் தொல்லியல்துறை இப்போது வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.

கீழடியில், அமர்நாத் மேற்கொண்ட ஆய் வின்போது 6 மீட்டர் ஆழக்குழி அமைத்து அதில் 3ஆவது மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரிகள் கி.மு. 290 காலத்தினதாக அமைந்தன. தற்போது, எதிர்பார்த்ததைவிட மேலாக கி.மு 6ஆம் நூற் றாண்டுப் பதிவுகளின் சான்றுகளாக இந்த முடி வுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. அகழ்வில் இன்னும் ஆழம் சென்றால், இதற்கும் முந்தைய காலத்தின் சான்றுகள் கிடைக்கும்.

கீழடி ஆய்வு தொடங்கிய அதே ஆண்டில் தொடங்கப்பட்டது, பாட் நகர் அகழாய்வு. அங்கே உணரும் அருங்காட்சியகம் அமைக்க இந்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சனோலி பகுதியில் பழங்காலத் தேர் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அதில் கீழடி இடம்பெறவில்லை.

பாட் நகர், சனோலி ஆய்வுகள், எற்பாடுகள் எல்லாமே பாராட்டுக்குரியவைதான். அதே சமயம், கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அறிவிக்க வேண்டும். ஆய்வுக்கும் அருங் காட்சியகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கி அடுத்தகட்ட அகழாய்வை இந்திய அரசு நடத்த வேண்டும்.

முதல் இரண்டாண்டுகள் அமர்நாத் மேற் கொண்ட ஆய்வறிக்கை, இடைக்கால அறிக்கை யாகக் கொள்ளப்பட்டது. மூன்றாம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சிறீதர், அகழாய்வு செய்த இடத்திலிருந்து கட்டுமானத் தொடர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று தனது ஆய்வறிக் கையைச் சமர்ப்பித்தார். இதை முன்வைத்து, ஆய்வை முடித்து கீழடியைக் கைவிட்டது இந்திய அரசு; இது, அரசின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறையும் இந்தியத் தொல்லியல்துறையும் இந்த ஆய்வுப் பணியைத் தொடர வேண்டும்” என்றார்.

திராவிட நாகரிகம்


கீழடி குறித்த தகவல்கள் வெளிவந்த பிறகு அது தமிழர் நாகரிகம் என்று கூறிக்கொண்டே அதை பாரத நாகரிகம் என்ற அடையாளம் சூட்ட துவங்கிவிட்டனர். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சுதி ஏற்றும் வகையில் இது பாரத நாகரிகம் என்று புதிய பெயர் சூட்டி அழைத்தார்.

பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியத்தில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மொகஞ்சாதாரோ மற்றும் ஹரப்பா தொடர்பான அகழ்வாராய்ச்சி பொருட்கள் வைக்கப்பட்டிருந் தன. இப்பொருட்களைக் கொண்டு அங்கு வாழ்ந்த மனித நாகரிகம் குறித்து மாதிரி ஒன்று அமைக்கப்பட்டது, அந்த இடத்திற்கு 1960 முதல் 1962-ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்த யஸ்வந்தராவ் சவான் காலகட்டத்தில் திராவிட நாகரிகம் (dravidian civilization) என்று பெயர்  சூட்டப்பட்டது,  அன்றிலிருந்து 1995-ஆம் ஆண்டு சிவசேனா கட்சி மகாராட்டிரா மாநில அரசைக் கைப்பற்றும் வரை நீடித்தது, 1995-ஆம் ஆண்டு சிவசேனா மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மனோகர் ஜோஷி தலைமையில் ஆட்சிப்பொறுப்பில் ஏறிய உடன் 1996-ஆம் ஆண்டு பம்பாய் நகரம் மும்பாயாக மாறியது. இதுமட்டும் தான் உலகிற்குத் தெரியும் வேல்ஸ் மியூசியம் சத்திரபதி சிவாஜி மியூசியமாக மாற்றப்பட்டது, அதுமட்டுமல்ல நுழைவாயிலில் இருந்த சிந்துவெளி மாதிரியில் இருந்த திராவிட நாகரிகம் (dravidian civilization)  என்பதை அகற்றி விட்டு பெயர் தெரியாத நாகரீகம் (unknown civilization) என்று மாற்றிவிட் டார்கள். இன்றுவரை அது அப்படியே தொடர்கிறது,

யூப்ரடீஸ் டைகரீஸ் நாகரிகத்தை சுமேரிய நாகரிகம், நைல் நதிக்கரை நாகரிகத்தை எகிப்த் திய நாகரிகம், என்று பெயர் இட்டு அழைத்த வரலாற்று அறிஞர்கள் சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று அழைத்தனர். ஆனால் அது முற்றிலும் மாற்றப்பட்டு தற்போது அடையாளம் இழந்து அடையாளம் தெரியாத நாகரிகம் என்று ஆகிவிட்டது,

ஆனால் அது அடையாளம் தெரியாத நாகரிகம் அல்ல, அது திராவிடர் நாகரிகம் என்று கீழடி மீண்டும் உறுதிசெய்துவிட்டது, அது மட்டுல்ல நதிக்கரை நாகரிகத்தின் வேர்கள் தாமிரபரணி, வைகை போன்ற நதிக்கரையில் இருந்து துவங்கி இருக்கவேண்டும் என்பதை இன்று ஆய்வுகள் தொடர்ந்து உறுதி செய் து வருகின்றன.

- விடுதலை ஞாயிறுமலர், 5 .10 .19

செவ்வாய், 8 அக்டோபர், 2019

குருமூர்த்தி அய்யர் திராவிடரா - சூத்திரரா?

சென்னை, அக்.8  "துக்ளக்" ஆசிரியர் திரு வாளர்  குருமூர்த்தி அய்யர்வாள் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் ஒன்றை எழுதியுள்ளார்  "துக்ளக்" ஏட்டில் -  (9.10.2019 - பக்கம் 9, தனியே பெட்டிச் செய்தியாக காணலாம்)
திராவிடர்கள்
யார் திராவிடன்? என்று சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரத்திலிருந்து கேட்டுள் ளார்.
கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங் கரரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்த அபிநவ சங்கரர் 'திராவிட சிசு' (திராவிடத்தின் குழந்தை ) என்று அழைத்தார். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் திராவிட சிசு என்றால், ஆதிசங்கரர் உள்பட திராவிட தேசத்தில் பிறந்த அனைவரும் திராவிடர்கள்தான். ஆரியர் கள் என்று எந்த பிராமணர்களை கழகங்கள் அழைக்கின்றனவோ, அவர்களே திராவிட பிராமணர்கள் என்றும், கௌட பிராம ணர்கள் என்றும் பிரிக்கப்படுகிறார்கள். விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களைக் கௌட பிராமணர்கள் என்றும், அதற்கு தெற்கே இருப் பவர்களை திராவிட பிராமணர்கள் என்றும் அழைக் கிறார்கள்.
திராவிட தேசத்தில் இருக்கும் பிராமணர்களை ஐந்தாகப் பிரித்து, பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். கௌட தேசத்தில் இருக்கும் ஐந்து வகையான பிராமணர்களை பஞ்ச கௌட பிராம ணர்கள் என்று அழைக்கிறார்கள். தமிழ், கன்னட, தெலுங்கு, கேரள, மகாராஷ்டிர, குஜராத், மார்வாரி, குஜராத்தி பிராமணர்களை, பஞ்ச திராவிடர்கள் என்றும், கௌடா, கன்யக்புஜா, மைதிலி, சரஸ்வதி, உத்கல முதலான ஐந்து வகையான பிராமணர் களை பஞ்ச கௌடர்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த விவரங்கள் ஸ்கந்தபுராணத்தில் இருக்கின்றன.
சம்ஸ்க்ருதப் புலவரான கல்கணன் எழுதிய ராஜதரங்கிணி என்கிற காஷ்மீர் மற்றும் மேற்கிந்திய ராஜ வம்சங்களைப் பற்றிய சரித்திர புத்தகத்திலும் இது இருக்கிறது. கௌடம், திராவிடம் என்று பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப் பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்து. திராவிடன்என்றால் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
துக்ளக் - 9.10.2019
"துக்ளக்" அய்யர் எடுத்துக் காட்டுவதெல்லாம் வரலாற்று ஆதாரங்களையல்ல - புராணங்களைத் தான் - புராணங்கள் வரலாறாகாது என்பது கடுகத் தனைப் புத்தி உள்ளவர்களுக்கும் தெரிந்தது ஒன்று.
சரி... அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் பிராம ணர்கள் - திராவிடர்கள் என்பது உண்மையென்றால் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள தயங்குவது ஏன்? திராவிடர் களைப் பற்றி திராவிடர் கழகம் எடுத்துக் கூறினால் 'கள்' குடித்த மந்திகள் போல உறுமுவது ஏன்?
விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் திராவிடன் என்று கூறி முடிக்கிறார் கட்டுரையில்.
குருமூர்த்தி அய்யர் ஒரு சரியான முட்டுச் சந்தில் வந்து நின்று விட்டார். இப்பொழுது இவர் எழுதிய இந்தக் கருத்து - அவரை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருக்கப் போகிறது. பார்ப் பனர்கள் ஆரியர்கள் அல்லவாம் திராவிடர்கள் தானாம்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கரி லிருந்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகேந்திர சரஸ்வதி உட்பட (தெய்வத்தின் குரல், முதல் பாகம், பக்கம் 267) ஆரியர்  திராவிடர் என்பது கற்பனை, வெள்ளைக்காரனால் கற்பிக்கப் பட்டது. பிரித்தாளும் சூழ்ச்சிக்காக அவ்வாறு கற்பிக்கப்பட்டது என்று சொன்னதெல்லாம் என்னவாயிற்று? கோல்வால்கரால் எழுதப்பட்ட ஆர்.எஸ்.எஸின் வேதநூல் என்று கூறப்படும்  BUNCH OF THOUGHTS என்ன கூறுகிறது?
"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியாது. நாம் தொடக்கம் இல்லாத அநாதிகள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; அறிவுத் திறன் கொண்டவர்கள். ஆன்மாவின் விதிகளை யெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகள், அறிவற்ற மாக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே, தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை மற்றவரிடமிருந்து பிரித்துக் காட்ட நாம் ஆரியர்கள் - அதாவது அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப் பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்" என்கிறார் ஆர்.எஸ்.எஸின் குருநாதர்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் ஆரியர்கள் என்று இங்கு கூறுகிறாரே - அது எப்படி? கோல்வால்கரும் ஒருக்கால் வெள்ளைக்காரர்தானா? அல்லது கலப்பா?
அந்தந்த சந்தர்ப்பத்தில் வசதிக்கேற்ப எதை யாவது புளுகி தப்பித்துக் கொள்வது. அல்லது மேலாதிக்கம் செலுத்துவது என்ற சூதாட்டம்தான் இந்த ஆரியப் பார்ப்பனர்களின் அடிமட்ட புத்தியாகும்.
வெள்ளைக்காரர்களால் கற்பிக்கப்பட்டதுதான் ஆரியர் திராவிடர் என்றால் வரலாற்று ஆசிரி யர்கள் என்று கூறப்படும் சி.எஸ்.சீனிவாசாச்சாரி, எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார்கள் எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஆகிவிடுவார்களே!
"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங் களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும் - தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்."
"இது ஆரியர்கள் திராவிடர் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது - ஏனென்றால் ஆரி யர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்." என்று எழுதியவர்கள் தான் இவர்கள் (இந்திய சரித்திரம் - பக்கங்கள் 16, 17)
சி.எஸ்.சீனிவாசாச்சாரியாரையும், இராமசாமி அய்யங் காரையும் வெள்ளைக்காரர்களின் கைக் கூலிகள் என்று சொல்லப் போகிறார்களா?
ஆரியர் -  திராவிடர் கட்டுக்கதை என்றால் சிந்துச் சமவெளி நாகரிகம்,திராவிட நாகரிகம் என்று சொன்னது வெள்ளைக்கார அரசாங்கமா?
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அன்றைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் முரளி மனோகர் ஜோஷி அரங்கேற்றியது என்ன?
சிந்துச் சமவெளியில் கிடந்த தடயமான காளையை கிராபிக்ஸ் மூலம் குதிரையாக ஆக்கிக் காட்டிய பித்தலாட்டத்தின் உட்பொருள் என்ன?
ஆரியர்களாவது, திராவிடர்களாவது என்று இப்பொழுது குறுக்குச்சால் ஓட்டும் கூட்டம் பதில் சொல்லட்டும். ஆரியர்களும், திராவிடர்கள் என்றால், சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றிக் காட்ட உச்சிக்குடுமியை ஒரு தட்டு தட்டி விட்டு குறுக்கு வழியில் காளையை இருட்டடித்து குதிரை மீது சவாரி செய்ய ஆசைப்படுவது ஏன்? ஏன்?
இன்னொரு முக்கியத் தகவலும் உண்டு - குருமூர்த்தி அய்யர்வாள் 2000 ஆண்டிலும் வாழ்ந்தவர்தானே.
டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் அவரே, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் சூத்திரதாரியும் கூட.
மத்தியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் "திராவிடர் என்சைக்ளோப்பீடியா" என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். அந்நூலை பெற்றுக் கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி திருவாய் மலர்ந்து கொட்டியது என்ன? "திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாம் அன்றோ"  என்பதுதான் - அந்த ஆரியவாளின் ஆர்வம் கொப்பளிக்கும் வார்த்தை! நூலைக் கொடுத்தவர் சாதாரண மானவர் அல்லவே.
திராவிட மொழி ஆய்வின் திராவிடப் பெருங் கடலாயிற்றே, குப்பத்தில் அதற்கான பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உந்து சக்தியாக விளங் கியவர் ஆயிற்றே. திருவனந்தபுரத்தில் உலகளா விய திராவிட மொழியியற் பள்ளி  (INTERNATIONAL SCHOOL  OF  DRAVIDIAN LINGUISTICS) யின் மூலவித்து போன்றவர் டாக்டர் வி.அய். சுப்பிரமணியம்.
பதட்டப்படவில்லை - பளிச்சென்று பதிலடி கொடுத்தார் பக்குவமாக.
"அப்படியா? - இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணிலிருந்து "திராவிடம்" என்ற சொல்லை நீக்கி விடுங்கள், நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன்" என்று சொன்னாரே பார்க்கலாம், சுருங்கி விட்டதே முரளி மனோகரின் முகம். (ஆதாரம் - DLA NEWS - மார்ச்சு 2003)
இதற்கு மேலும் குருமூர்த்தி வகையறாக்கள் ஆரியர் திராவிடர் பற்றி சொல்ல என்ன பரப்புரையை வைத்துள்ளனராம்?
பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப்பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்தாம் - பம் முகிறார் பார்ப்பனருக்கான செய்தித் தொடர்பாள ராக தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
இவர்களுடைய வேதங்களின் மனுதர்மத்தில் கூட ஆரியர், திராவிடர் என்ற வார்த்தைகள் காணப்படுகின்றனவே.
யஜூர்வேதம் (6, 22) என்ன சொல்லுகிறது?
"ஓ இந்திரனே! உயிர் வாழ்க்கைக்கு இன்றி யமை யாதவைகளான பிராண வாயு, ஜலம், அன்னம், முதலியவைகளை ஆரியர்களாகிய எங்களுக்கு அமிர்தமாகவும், எங்களை யார் பகைக்கிறார்களோ, அந்த அனாரியர்களுக்கு விஷமாகவும் ஆக்கிவிடும்" என்கிறதே யஜூர்.
ஆகா,  வேதங்களின் விரிந்த மனப்பான்மைக்கு வேறு என்ன  எடுத்துக்காட்டுதான் தேவை? - அது இருந்து தொலையட்டும் இந்த சுலோகத்தில் இடம் பெறும் "ஆரியர்" என்பது வேதகாலத்திலேயே வெள்ளைக்காரனால் இடைச் செருகல்  செய்யப் பட்டது என்று செப்புவார்களோ!
"பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயநம் முதலிய கர்மலோகத்தினாலும் மேற் சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தவர்கள்" (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 43)
பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம் போசம், யவநம் சகம், பாரதம், பால்ஹீசம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னப்படி சூத்திரர்களாகி விட்டார்கள். (மனுதர்மம், அத்தி யாயம் 10, சுலோகம் 44)
மனுதர்மத்தில் காட்டப்படும் திராவிடம், பிராமணர்கள் என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் விஷம வேலை என்று இந்தப் பார்ப்பன வெள்ளைக்காரர்கள் சொல்லப் போகிறார்களா?
வேதங்களில் சாத்திரங்களில் சொல்லப்படும் சுலோகங்களில் சொன்னபடிதான் வாழ்ந்து, அதன் தன்மையில் குருமூர்த்திகள் இப்பொழுது பூணூல் தரித்துக் கொண்டு இருக்கிறார்களா?
குருமூர்த்தி மற்றும் தங்களைப் பிராமணர்கள் என்று கூறிக் கொண்டு அதன் அடையாளமாகப் பூணூல் தரித்துக் கொண்டுள்ள - ஆண்டாண்டு தோறும் அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி  ஆவணி அவிட்டம் என்று நாமம் சூட்டிக் கொண்டு பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, இவர்கள் வேதத் தர்மப்படி நடந்து கொண்டுதான் பூணூலைத் தரித்துக் கொண்டுள்ளனரா?
இவர்களுக்கு குருநாதராக லோகக் குரு - மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
"பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான், மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்."
"பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு" என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராமண சந்நியாசிகள் அன்று பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகக் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்பொழுது இவன் செய்கின்ற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள், முதற் பகுதி - கலைமகள் - 1957-1958, பக்கம் 28)
கர்மானுஷ்டங்களை அனுசரிக்காத க்ஷத்தி ரியர்கள் சூத்திரகளாகி விட்டனர் என்று கூறும் மனுதர்மப்படி, பிச்சை எடுத்து வாழ வேண்டிய பிராமணர்கள் அதனை கடைப்பிடிக்காமையால் திருவாளர் குருமூர்த்தி அய்யர் உட்பட பூணூல் தரிக்க உரிமை  உடையவர்களா? க்ஷத்திரி யர்கள் சூத்திரர்கள் ஆனது போல, குருமூர்த்தி வகை யறாக்கள் பூணூலை அறுத்து எறிந்து விட்டு "சூத்திரர்கள்" என்று ஒப்புக் கொள்வார்களா?
அ'வாள்'களே வாலைச் சுருட்டிக் கொண்டு கிடப்பதுதான் உத்தமம்!
- விடுதலை நாளேடு, 8.10.19

சனி, 14 செப்டம்பர், 2019

மதவிழாக்களாக தோற்றமளித்தாலும் உண்மையில் அவை ஆரிய - திராவிடப் போரே!



தீபாவளி, ஓணம் பண்டிகைகள் மத விழாக்களாக தோற்றமளித்தாலும்  உண்மையில்  அவை ஆரிய - திராவிடப் போரே  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கேரளாவிலும், வெளியே உள்ள கேரள மலையாளி சகோதரர், சகோதரிகளும் கொண்டாடும் ஓணம் என்ற திருவிழாவின் அடிப்படையும், இங்கே தமிழ்நாட்டிலும், இதர பகுதிகளிலும் நம் இன எதிரிகளால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டி கையின் அடிப்படையும் ஒன்றே ஆகும். ஒரு வேறுபாடு உண்டு.

இரண்டும் ஆரிய - திராவிட இனப் போராட்டமேயாகும்.

திராவிடர்களின் உரிமையை, மண்ணை, ஆரியர்கள் எப்படி நயவஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் பறித்தார்கள் - அபகரித்தார்கள் என்ற வரலாற்று உண் மைகள்     புதைந்த கற்பனை மெருகேற்றப் பட்ட கதைகள் அடிப்படையில் சொல்லப் படுகின்றன.

தந்தை பெரியாரும்,


திராவிடர் இயக்கமும்தான்!


1. இரண்யாட்சதன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கு எதிராக அவர்களை அழிக் கும் பணியில் இருந்தமையால், தங்களைக் காப்பாற்ற தேவர்கள் வேண்ட, அவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து வந்து, அவன் பூமியைப் பாயாக சுருட்டி கடலுக் குள் ஒளிந்ததை மீட்ட பிறகு - பூமாதேவிக் கும் - இரண்யாட்சதனுக்கும் (அசுரன்) பிறந்த நரகாசுரன் மிகவும் தொல்லை கொடுக்க, அவனை அழிக்க, பெண்ணுரு வில் மோகினி அவதாரம் கொள்ள, அதில் அவன் மயங்கியதால், அவனைக் கொன் றாராம்;  அவன், தன் இறந்த நாளைக் கொண்டாடும்படியாகக் கேட்டதால், தீபவாளி நரகாசுரன் ஒழிந்த நாள் என்பது திராவிடனை - ஆரியன் அழித்த கதைப் பின்னணியே!

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க மும்தான் இந்த உண்மையை - வரலாற்றுப் பின்னணியை மக்கள் மத்தியில் இன்றும் கூறி வருகிறது!

இதுபோன்றே மாவலி மன்னனை (அவன் அசுரன்'' - நேர்மையாக கேர ளத்தை ஆண்டு, மக்கள் முழு மகிழ்ச்சியுடன் இருந் தார்கள்) மலையாளத்தில் உள்ள க்ஷத்திரியர்களை பரசுராமர் அவதாரம் எடுத்து கோடரி யால் வெட்டிக் கொன்றார் மகாவிஷ்ணு  (பரசு - என்றால் கோடரி) என்பது ஒரு அவதாரம்.

வாமன அவதார இரகசியம்!


நல்லாட்சி புரிந்த மாவலியை ஒழித்துக்கட்ட தந்திரம் செய்தது ஆரியம். மகா விஷ்ணு வாமன அவ தாரம் எடுத்து (குள்ளப் பார்ப்பான்) மாவலி மன் னனிடம் மூன்றடி மண் கேட்டான். கபடமற்ற மாவலியும் ஏற்றுக் கொண்டான். குள்ளப்  பார்ப்பானாகிய  வாம னன் என்ன செய்தான்? ஓரடியை ஆகாயத்தில் வைத்தான்; இன்னொரு அடியைப் பூமியில் வைத்தான். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று வாமனன் கேட்க, மாவலி தன் தலையில் வைக்குமாறு கூறினான். அவ்வாறு மாவலி தலை யில் காலை வைத்து அழுத்திக் கொன்றான் வாமனன். இதுதான் வாமன அவதார இரகசி யம். மண் முழுவதையும் பறித்துக்கொண்ட - பண் பாட்டுப் படையெடுப்பு அல்லவா இது! உழைத்த திராவிடர்களை - அவர் களின் நிலங்களை எப்படி சூழ்ச்சியால் பறித்த பின்னணியே அந்தக் கதை. மாவலி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் தானங்கொடுத்து விட்ட நிலத்தை - மக்களை சந்திக்க மட்டும் அனு மதிக்கப்பட்டான். மாவலி தங்களைச் சந்திக்க வருவதை கேரள மக்கள் மகிழ்ச்சி யோடு கொண்டாடுகிறார்கள் - அதுதான் திருவோணம் என்ற பண்டிகை.

மராத்தியத்தில் ஜோதிபாபூலே அவர் கள் (அக்காலத்தில் மகாத்மா'' என்று அம் மக்களால் அழைக்கப்பட்ட சமூகப் புரட்சி யாளர்) பாலி ராஜா திரும்புதலைப் பெரும் விழாவாகக் கொண்டாட வைத்தார்!

அவரும் பார்ப்பனர் எப்படி சூத்திரர், பஞ்சமர் மண்ணை அபகரித்தனர் - வஞ்சகத்தால் என்பதே அவதாரக் கதைகள்'' என்று தந்தை பெரியார் கூறியதைப் போலவே 150 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதியவர்!

ஏ.வி.சக்திதரன் எழுதிய கடவுளின் தேசம் நூல்!




கேரளத்தை - கடவுளின் தேசம்''  (god's own country) என்று அழைத்துக் கொள்வர். அதனை அப்படியே எதிர்த்து, மாற்றி  அது கடவுளின் தேசமா? இல்லை கடவுள் எதிர்ப்பாளர்களின் தேசமும்கூட''  என்று அங்கே நடந்த போராட்டங்கள் - எப்படி பார்ப்பனீயம் - ஆரியம் - வெற்றி பெற்றது என்பதை - பல கதைகளின் வரலாற்றுப் பின்னணியை அம்பலப்படுத்தி - Anti god's own country - a  short  history of Brahminical colonisation of Kerala - by A.V.Sakthidharan -(ஏ.வி.சக்திதரன் இந்துஸ்தான் டைம்ஸ்'' ஏட்டில் 40 ஆண்டு கள் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்) என்பவர்  எழுதியுள்ள ஆங்கில நூல் ஏராள மான தகவல்களுடன் வந்துள்ளது!

தந்தை பெரியார் இயக்கம்பற்றியும், நடிகவேள் எம்.ஆர். இராதா இராமாயண நாடகம் நடத்தியது - இரண்யன்', இராவண காவியம்' - புலவர் குழந்தை, இராவணப் பெரியார்''- எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை எழுதிய நூல்கள் உள்பட பலவற்றையும் இதில் (பக்கம் 87) குறிப்பிடுகின்றார்.

ஆரியம் அபகரித்த கதைகளே!


எனவே, ஆரிய - திராவிடப் போராட் டத்தின் அடிப்படையே இந்த இருவிழாக் களும் - ஆரியம் அபகரித்தக் கதைகளே!

"வாமன ஜெயந்தி!''


ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கேரளாவில் கால் பதிக்க  - ஓணத்தைக் கொச்சைப்படுத்தி - சில ஆண்டுகளுக்குமுன் வாமன ஜெயந்தி'' என்று புதிதாக ஏற்பாடு செய்தபோது பெரும் எதிர்ப்பையும் சந்தித்தது. அமித்ஷா, பா.ஜ.க. தலைவரான பிற்பாடு இது திடீரென நுழைக்கப்பட்டது.

எனவே, விழாக்கள் வெளிப்பார்வைக்கு மதவிழாக்களாக தோற்றம் இருப்பினும், உண்மைத் தத்துவத்தில் - வரலாற்றுப் பின்னணியில் அது ஆரிய - திராவிடப் போரே! பார்ப்பனர் எப்படி பார்ப்பனரல் லாத சூத்திர, பஞ்சமர்களை, புத்த நெறியினரை, சமணத்தவர்களை வஞ்சித்தனர் என்பதை இந்நூலைப் படித்துப் புரிந்துகொள்ளலாம். விரைவில் இதன் தமிழ்ப் பதிப்பை முற்போக்கு பதிப்பகத்தி னர் வெளியிடுவர் - இது ஆங்கிலத்தில் நவயானா' வெளியீடாக வந்துள்ளது.

பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்!


பொங்கலைப் போலவே ஓணம் என்ற ஒரு அறுவடைத் திருவிழா - பொங்கும் மகிழ்ச்சிக்கான விழா என்ற பறிக்கப்பட்ட உரிமைகள்  மீட்டெடுக்கப்படவேண்டும், அது குறித்துத் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய தருணமும் இதுவாகும்.

அந்த அடிப்படையில், புதிய கோணத் தில் மாவலியை வரவேற்கும் விழாவாகிய  ஓணத் திருவிழாவிற்கு நாம்  வாழ்த்துக் கூறுகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
11.9.2019

-  விடுதலை நாளேடு, 11.9.2019