செவ்வாய், 1 டிசம்பர், 2015

நீதிக்கட்சி சமதர்மக்கட்சி! - தந்தை பெரியார்


தமிழர்களா? ஆந்திரர்களா?
பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார்கள் என்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது - வெறுக்கத்தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக, வெட்டிப் புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள், - தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்திவிட்டு அந்தச் சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும்  அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமுகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தமிழர்-களைவிட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது.
உதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகல் ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்குப் பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திரர் பனகல் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.
மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகல், 2. ஒரு சர். பாத்ரோ, 3. ஒரு சர். கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய அய்ந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1. ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர் சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம் அய்யர், 6. ஒரு பி. டி. ராஜன், 7. ஒரு குமாரசாமி செட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில்கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு  சர். கே. வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு சர். உஸ்மான், 3. ஒரு சர். சி. பி. ராமசாமி அய்யர், 4. ஒரு கே. ஆர். வெட்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ண நாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக்-கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக்கொண்டாலும் சரி. மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிடவில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர்கூட கார்ப்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை.
மேலும் இன்று எந்தத் தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் ஆந்திரக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத் துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக் கொள்கையைப் பொருத்த வரையில்கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று, ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கை களையாவது ஒப்புக்கொள்ளு-கின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன் வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது, ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம்.
ஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடை-யாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றிபெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
- பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
(பெரியார் களஞ்சியம், - குடிஅரசு, - தொகுதி 17, பக்கம் 412
* * *
நீதிக்கட்சி சமதர்ம கட்சியே!
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும், பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்ஜியம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகிறது. அதனா-லேயே, நாம் அதை சமதர்ம ராஜ்ஜியம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள், ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வார் பயத்தினாலா? இல்லவே இல்லை.  தாங்களாகவே ஆசைப்-பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு செய்து கொண்டு, போய் அமர ஆசைப்-படுகிறார்கள். பறையனை பார்ப்பான் பிரபுவே! எஜமானே! என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ்கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்-பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தை-யாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆகாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கிறேன். (27.12.1936 அன்று சென்னை _- கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க நான்காவது ஆண்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை) -குடிஅரசு - சொற்பொழிவு - 10.01.1937
(பெரியார் களஞ்சியம் - குடிஅரசு - தொகுதி 22, பக்கம் 42)
-உண்மை,16-30.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக