திங்கள், 13 செப்டம்பர், 2021

திராவிட என்னும் குறிப்புச் சொல் - 1



நண்பர்களே, நான் கவனித்து வந்துள்ள அளவில் திராவிடச் சிந்தனைகளின் ஆதரவாளர்களின் மத்தியில் ஒரு நெருடல் இருப்பதாகத் தெரிகிறது. ”திராவிடம் என்பது தமிழர்களைக் குறிக்காமல் தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கிறதே. மதராஸ் மாகாணம் இருந்த காலத்தில் வேண்டுமானால் அது தேவைப்பட்ட குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்ட பிறகு மொழிவழி தேசியமாகத் தமிழர்களுக்குத் தமிழ்த்தேசியம் தானே சரியாக இருக்கமுடியும். நாம் இன்னும் திராவிடம் என்று பேசிக் கொண்டிருப்பதால் தமிழ்த்தேசிய போலிகள் பல நேரங்களில் கேலி பேசுகின்றனவே” என்று.

திராவிடம் என்பது மொழியியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் இருமுனையில் அணுகத்தக்கதானத் தன்மையைப் பெற்றிருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி திராவிடம் என்ற சொல் உண்மையில் தமிழைத்தான் குறிக்கிறது. அது தென்னிந்தியாவின் பிற எந்த மொழியையும் குறிக்கவில்லை. அதற்குப் பட்டியல் போட்டுக் கூறத்தக்கதாகப் பல சான்றுகள் உள. மலையாளம் தோன்றி இராத காலகட்டத்தில் தெலுங்கையும் தமிழையும் 'ஆந்திர-திராவிடப் பாஷா' என்ற சொற்றொடரில் குறித்த 7-ம் நூற்றாண்டின் குமரில பட்டர், திருஞானசம்மந்தரை 'திராவிட சிசு' என்றழைத்த ஆதிசங்கரர் தொடங்கி 19-ம் நூற்றாண்டின் ராபர்ட் கால்டுவெல் வரை தமிழைக் குறிக்கத் திராவிடம் என்னும் சொல்லே பயன்பட்டு வந்திருப்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

குறிப்பாக அதன் பயன்பாடு விரிவடையக் காரணமாகக் கூறப்படும் கால்டுவெல் பாதிரியார் தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழைக் குறிப்பிடும் இடத்தில் dravira or tamil-proper என்று interchangeable ஆக இணைபொருளில் கையாள்கிறார். மொழிக்குடும்பம் என்று வகைப்படுத்தும் போதுதான் பிற தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக ஒரு குடையின் கீழ் ஒன்று கூட்டுகிறார். திராவிடம் என்பது தமிழ்தான் என்பதற்கு இன்னொரு ஆதாரமாக கிருஷ்ணதேவராயர் இயற்றிய 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 'அமுக்தமால்யதா' நூலை தெலுங்கு பல்கலை ஆய்வாளர் டாக்டர்.எஸ்.செல்லப்பா குறிப்பிடுகிறார். அதில் 'திராவிடக் குடும்பி' என்ற பதத்தில் தமிழ்க் குடும்பங்கள் சுட்டப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கிடைக்கும் மொழியியல் சான்றுகள் மறுக்க இடமளிக்கா வண்ணம் தமிழின் மாற்றுமொழிப்பெயர் தான் திராவிடம் என்றே நிறுவுகின்றன. அத்துடன், மொழியியல் வல்லுநர்கள் தமிழ் என்ற வேர்சொல்தான் வடமொழிப் பயன்பாட்டில் த்ரமில என்று மொழியப்பட்டு மருவி திராவிட என்றானது என்றும் முடிபு எய்துவதை ஒட்டியும்கூட எந்தவித உறுத்தலும் இல்லாது தமிழர்கள் பயன்படுத்தத்தக்கதொரு வார்த்தைதான் திராவிடம். பாரசீகர்களால் சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த அனைவரும் ஹிந்து என்றழைக்கப்பட்டுக் காலப்போக்கில் அப்படியே இந்திய பெருநிலப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதத்துக்கு 13-ம் நூற்றாண்டுக்கு முன் வரலாறே கிடையாது. ஆனால் இன்றைய தேதியில் அந்த வார்த்தையை விலக்கிவிட்டு இந்திய துணைக் கண்டத்தின் வரலாறை எழுதுவது என்பது இயலாத காரியம். திராவிட என்கிற சொல்லின் பயன்பாடு ஹிந்து என்ற சொல்லின் பயன்பாட்டை விடத் தொன்மையானது. தமிழ் மக்கள், மொழி, கலாச்சாரத்தைக் குறிப்பதாக நேரடி பொருள் கொண்டது.

அப்படியானால், திராவிடம் என்னும் அடையாளத்திற்குள் பிற தென்னிந்திய மொழிகளும் ஒருங்கே அர்த்தப்படும் சூழல் உருவானது எப்படி என்ற கேள்வி பிறக்கிறது. இது கால்டுவெல் ஏற்படுத்தி வைத்த குழப்பம். அவர்தான் திராவிடம் என்னும் தமிழ் சுட்டுக்குள் இதர மொழிகளையும் உள்ளடக்கி குறியீட்டுச் சொல்லாக்கினார். ஆனால் அவர் செய்தது மொழியியல் வகைப்பாடு நோக்கில். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் 1856-ல் வெளியானது. அதனையடுத்துத் திராவிடம், திராவிடன் என்கிற சொல்லாட்சி இதழியல் மற்றும் அரசியல் தளங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் சென்னை வெஸ்லி பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் மாகாண கவுரவ நீதிபதியாக உயர்ந்த ஜான் இரத்தினம் 1882-ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தியதுதான் முதல் பதிவாக உள்ளது. இவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் நல்வழிகாட்டி (mentor). அச்சமயத்தில் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பியிருந்த அயோத்திதாசர் ஜான் இரத்தினத்துடன் சேர்ந்து திராவிட பாண்டியன் (1885) பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார். திராவிடம் என்னும் சொல்லின் மலர்ச்சிக்கு வித்திட்டவர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம். திராவிட பாண்டியனைத் தொடர்ந்து திராவிட மித்திரன் (1885), திராவிட கோகிலம் (1907) போன்ற இதழ்கள் வெளியாகின. அயோத்திதாசர் 1891-ல் திராவிட மகாஜனசபாவை தொடங்கினார். இந்த அமைப்புகள் மற்றும் இதழ்களின் மையமான ஒற்றுமை - இவைகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைப் பேசியவை என்பதாகும்.

இதன் விளைவுகளில் ஒன்றாகப் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதார் என்ற இழிச்சொல்களுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் துவங்கினர். மேலும் மேற்கண்ட இதழ்கள், அமைப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு பகுதியை சேர்ந்தவர்களால் துவக்கப்பட்டவை. இதுவரை நாம் பார்த்த திராவிடச் சொல் பயன்பாட்டு புழக்கமும் தமிழ் மண்ணில் மட்டுமே இருந்தது. மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலே அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களை ஆதிசூத்திரர் என்ற பெயரால் குறிப்பிட்டதன் விளைவாகவே இங்கும் (தமிழ்நாட்டில்) ஆதிதிராவிடர்கள் என்னும் சொல் புழக்கத்துக்கு வந்ததாக பெ.சு.மணி திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் ஆந்திராவை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. ஆதிஆந்திரர் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அந்தந்த மண்ணின் அடையாளங்களாவன மண்ணின் மைந்தர்கள் தங்களுக்குச் சூடிக்கொண்ட பெயர்களிலும் எதிரொலித்தன. இதன்படியும் திராவிடர் என்பது தமிழர்களையே குறித்து வந்திருப்பது திட்டவட்டமாகிறது. இவ்வாறு மொழியியல் ரீதியில் உருவான ஒரு சொல் அரசியல் துறையிலும் முக்கியத்துவம் அடைந்து பரவலானது. ஆதிதிராவிடர் மகாஜன சபையின் சட்டசபை உறுப்பினராக இருந்த எம்.சி.ராஜாவால் முன்மொழியப்பட்டு நீதிக்கட்சியின் ஆட்சியில் 1922-ல் அரசாணை வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் சொல் அரசு ஏடுகளிலும் அலுவல் ரீதியாகப் புழக்கத்துக்கு வந்தது.

அதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் மட்டும் எடுத்தாளப்பட்டு வந்த திராவிட சொல்லாடல் பிற சாதிகளின் மட்டத்திலும் புழக்கத்துக்கு வர அடிகோலியவராக இருந்தவர் நீதிக்கட்சியின் நிறுவனராகவும், திராவிட இயக்கங்களின் முன்னோடி தலைவராகவும் இருந்த டாக்டர் நடேச முதலியார் எனலாம். 1912-ல் பிராமணரல்லாத அரசு ஊழியர்களால் மெட்ராஸ் யுனைடேட் லீக் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூளையாகப் பின்னணியில் இருந்தவர் நடேச முதலியார். அது பின்னர் மெட்ராஸ் திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த விதமான சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அரசு அலுவலங்களின் உயர் பதவிகளை அனைத்து மட்டங்களிலும் அலங்கரித்துக் கொண்டிருந்த பிராமண அதிகாரிகளால் பாரபட்சமாக நடத்தப்பட்டுப் பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டுப் பலவிதங்களிலும் அவமதிப்புக்கு உள்ளாகி வந்த பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை விவாதித்துக்கொள்ளவும் கோரிக்கைகளையும் தீர்வுகளையும் ஆலோசித்து முடிவு எடுக்கவும் ஒரு அமைப்புத் தேவையாக இருந்தது ஒரு காரணம் எனலாம்.

இன்னொரு காரணமாக, சமூக நடப்புகளில் பிராமணர்களால் பொது இடங்களிலும்கூடக் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை அமைந்தது. உதாரணமாக ’பிராமணாள் கபே’வை கூறுவார்கள். பணம், பதவி, அந்தஸ்து ஆகிய சம்பத்துகளில் பிராமணர்களுக்குச் சரிக்குச் சமமாக இருந்தபோதிலும் சென்னையின் பிரபல கபேக்களில் சூத்திரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிராமணர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அந்த இழி நடைமுறைக்கு ஆதரவாக ஹைகோர்ட் ஜட்ஜ்களாகவும், மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும், திவான்களாகவும் மேலும் எத்தனை அதிகாரம் மிக்கப் பதவிகளோ அத்தனையையும் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்த பிராமணச் சமூகம் இருந்தது. இது கல்வியறிவு பெற்று அறிவிலும் மான உணர்ச்சியிலும் எழுச்சி பெற்று வந்த பிராமணரல்லாதவர்களைச் சினப்படுத்தியது. அம்மாதிரி கபேக்களில் உள்ளே நுழைய பூணூலை காண்பித்தால் மட்டும் போதாது சந்தியாவந்தனமும் சொல்ல வேண்டும் என்பார் ராண்டர் கை. தமிழ்தாத்தா உ.வே.சா.,வுக்கே அவ்வாறு சந்தியா வந்தனம் சொல்லும் நிலை ஏற்பட்டதாக அவர் பதிவுச் செய்கிறார். இது ஆரியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சாதிவேற்றுமைகளைக் கடந்த பொதுமுழக்கமாகத் திராவிடம் எழுச்சி பெற அடியோட்டமாக அமைந்த அக்காலச் சூழல்.

நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களாகச் சொல்லப்படுபவர்களில் முதன்மையானவர் நடேச முதலியார் என்பது சாலப்பொருத்தமானது. மெட்ராஸ் திராவிடச் சங்கத்தைத் தொடர்ந்து அடுத்தக் கட்டத்துக்கான பெரிய அளவிலான அமைப்பை திட்டமிட்டபோது அவருடைய நினைவில் வந்தவர்கள் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் டி.எம்.நாயர் என்னும் இரு சமூக மதிப்பு மிக்க ஆளுமைகள். ஆனால் இருவரும் மெட்ராஸ் கவுன்சிலில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து எலியும் பூனையுமாக மோதி வந்தனர். அவர்களை ஒன்றிணைத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தொடங்கப்பட்டு, அதன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மூன்று பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசினி ஆகிய பெயர்களில் அவை வெளியாகின. நீதிக்கட்சியின் திராவிடன் பத்திரிக்கையின் மூலம் திராவிடர் என்னும் சொல் வெகுஜனங்களின் மத்தியிலும்கூடச் சரளமான புழக்கத்துக்கு வந்துவிட்டிருந்தது. திராவிடன் நாளேட்டின் முதல் இதழ் தான் தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கம் பற்றி இவ்வாறு அறிவித்துக் கொண்டது: “தேசிய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாக உள்ள தப்பான அபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிக்கையின் திருத்தமுள்ள நோக்கமாகும்”.

திராவிட என்ற சொல்லையே பெரியார்தான் கண்டுபிடித்துப் புகுத்தினார் என்றே பாமரர் பலரும் நம்பிவிட்டிருக்கிற அளவிற்கு அது அவருடைய அரசியலுடன் அடையாளப்பட்டு விட்டது. ஆனால் அவருக்கு முன்பே அந்தக் குறிப்புச் சொல் இவ்வாறான சரித்திரத்தின்படி தனக்கெனத் தனி வரலாறு உடைய ஒன்று. அடுத்து பெரியார் எப்போதிருந்து திராவிடத்தைக் கையிலெடுத்தார் என்று ஆராய்வோமானால் அது நம்மை 1937-38 இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்துக்கு இட்டுச் செல்கிறது.
- சிவசங்கரன் சரவணன் முகநூல் பதிவுு 11.11.2018,(திராவிட ஆய்வு முகநூல் குழு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக