வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

இதோ ஒரு ‘கொலம்பசு’



அரப்பா, மொகஞ்சதாரோ இந்து கலாச்சாரமாம், இந்த உணர்வில்லாதவர்கள் பிரிவினைவாதிகளாம்! சொல்லுகிறார்  மோகன்பகவத்.

அரப்பா, மொகஞ்சதாரோ கலாச்சாரம் இந்து கலாச்சாரம் என்றும், அது பாகிஸ்தான் பகுதியாகி விட்டதால் இந்துக்கலாச்சாரத்தை நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறிய மோகன் பகவத், இந்து என்ற உணர்வில்லாததால் பங்களாதேஷ் மக்கள் தனிநாடாக பிரிந்தன; எவர் இந்து என்ற உணர்வில்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் பிரிவினைவாதிகள் என்றும்  கூறியுள்ளார்.

தொடர்ந்து இட ஒதுக்கீடு, இந்துத்துவம், நாடு முழுவதும் இந்து பண்பாடு குறித்து பேசிவரும் மோகன் பகவத் தற்போது இந்து என்ற உணர்வில்லாதவர்கள் பிரிவினை வாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில்  ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் பகவத் “இந்தியா சுதந்திரம் அடைந்த போது தனி நாடு வேண்டும் என எழுந்த போராட் டத்தினால் பாகிஸ்தான் உருவானது. பாகிஸ்தானியர்கள் இந்துத்துவ சிந்தனையை ஏற்கவில்லை, ஆகையால் அவர்கள் தனித்து போய்விட்டனர். ஆனால் இந்தியா முழு வதும் இந்து என்ற உணர்வுடன் உள்ளனர். இதுதான் இந்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இந்தியா ஒரு இந்து நாடு; அதை ஒப்புக்கொள்ள மனமில்லாததால் இந்தியாவை பாகிஸ்தான் எதிரியாக நினைக்கிறது.

மொகஞ்சதாரோ, அரப்பா ஆகியவை பண்டைய இந்துக்களின் நாகரிகத்தை பறைசாற்றும் இடங்கள் ஆகும். ஆனால் அவை இப்போது பாகிஸ்தானின் பகுதிகள் ஆகி விட்டன. அதனால் தான் நமது பண் டைய இந்துத்வா கலாச்சாரத்தை நம்மால் உலகுக்கு எடுத்துக் காட்ட இயலவில்லை. இந்துத்வா என்பது பலமொழிகள், கலாச் சாரங்கள், மதங்களை கடந்த ஒற்றை இந்தியா ஆகும்.  இந்துத்வா வேற்றுமையில் ஒற்று மையைக் காண்கிறது.   அதனால் தான் இந்தி யாவை ஒரு இந்து தேசம் என கூறுகிறோம்..

வங்கதேச மக்கள் இந்தியாவில் உள்ள வங்க மொழியை பேசினாலும் அவர்கள்  தனி நாடாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?  அவர்கள் இந்துத்வாவை ஒப்புக் கொள்ள தயங்குவதாலும்,  இந்தியா ஒரு இந்து தேசம் என்பதாலும் தான்”  எனக் கூறி உள்ளார்.

அரப்பா மொகஞ்சதாரோ

இதுவரை திராவிட நாகரிகமான அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ குறித்து எந்த ஒரு பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அதிகம் பேசவில்லை, இந்த நிலையில் மோகன் பகவத் திடீரென்று அரப்பா மொகஞ் சதாரோ குறித்து தனது பேச்சில் குறிப் பிட்டுள்ளார்.

அதுவும் அங்கு உள்ளது இந்துக்களின் கலாச்சாரம் என்பதாக அழுத்திக் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டில் பேசிய சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருதத்தின் பிறப்பிடம் சரஸ்வதி நதிக்கரை என்று குறிப்பிட்டி ருந்தார். அதே போல் பார்ப்பனர்கள் இந்துமதம், இந்து கலாச்சாரம், சமஸ்கிருதம் போன்றவை அனைத்தும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்து உருவாகியவை என்று கூறியுள்ளார்.

சரஸ்வதி என்ற ஒரு நதி இருந்ததற்கான அடையாளம் இன்றுவரை கண்டறியப் படவில்லை, மேலும் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி, அது பாய்ந்த இடங்கள் குறித்து பல்வேறு குழப்பமான குறிப்புகள் உள்ளன. இந்திய வரலாற்று மற்றும் கலாச்சார ஆய்வுக்கழக தலைவர் எழுதிய நூலில் சரஸ்வதி என்ற நதி இன்றைய கோசி (பீகார்) நதியின் துணை நதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

ஆனால் சாமியார்கள் சரஸ்வதி நதி என்பது இன்றைய ராஜஸ்தான், அரியானா குஜராத் பகுதிகளில் பாய்ந்த நதி என்று கூறிவருகின்றனர். 2014-ஆம் ஆண்டு புதிதாக ஆட்சியில் அமரந்த அரியானா அரசு சரஸ்வதி நதியை தேடும் பணிக்கு பலநூறு கோடிகளை செலவு செய்து வருகிறது.

இப்படி ஒரு குழப்பமான சரஸ்வதி மற்றும் அதன் நதிக்கரையில் தோன்றிய மதம் இந்துமதம் என்று இதுவரை கூறிக்கொண்டு இருந்த இந்துத்துவ வாதிகள் தற்போது திடீரென்று அரப்பா, மொகஞ்ச தாரோ பற்றி பேசத் துவங்கியுள்ளனர். 1997ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசினர் முக்கியமாக அருங் காட்சியகங்களில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் குறித்த இடத்தில் இருந்த திராவிட நாகரிகம் என்பதை அழித்துவிட்டு அடையாளம் தெரியாத நாகரிகம் (Unknown Civilization)  என்று எழுதிவைத்தனர்.

தற்போது அந்த அடையாளம் தெரியாத நாகரிகம் என்பதையே இந்துக் கலாச்சாரமாக மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக் கிறார்கள் என்றே தெரிகிறது. அதற்கான முகாந்திரமாக இதுவரை அரப்பா, மொகஞ்ச தாரோ பற்றி மோகன் பகவத் பேச ஆரம்பித் துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, நாகலாந்து, திரிபுராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது, இந்த மாநிலங்களில் இந்துக்கள் மிகவும் குறைந்த அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

- விடுதலை ஞாயிறு மலர், 4. 8. 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக