செவ்வாய், 8 அக்டோபர், 2019

குருமூர்த்தி அய்யர் திராவிடரா - சூத்திரரா?

சென்னை, அக்.8  "துக்ளக்" ஆசிரியர் திரு வாளர்  குருமூர்த்தி அய்யர்வாள் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் ஒன்றை எழுதியுள்ளார்  "துக்ளக்" ஏட்டில் -  (9.10.2019 - பக்கம் 9, தனியே பெட்டிச் செய்தியாக காணலாம்)
திராவிடர்கள்
யார் திராவிடன்? என்று சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரத்திலிருந்து கேட்டுள் ளார்.
கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங் கரரை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்த அபிநவ சங்கரர் 'திராவிட சிசு' (திராவிடத்தின் குழந்தை ) என்று அழைத்தார். கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் திராவிட சிசு என்றால், ஆதிசங்கரர் உள்பட திராவிட தேசத்தில் பிறந்த அனைவரும் திராவிடர்கள்தான். ஆரியர் கள் என்று எந்த பிராமணர்களை கழகங்கள் அழைக்கின்றனவோ, அவர்களே திராவிட பிராமணர்கள் என்றும், கௌட பிராம ணர்கள் என்றும் பிரிக்கப்படுகிறார்கள். விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்களைக் கௌட பிராமணர்கள் என்றும், அதற்கு தெற்கே இருப் பவர்களை திராவிட பிராமணர்கள் என்றும் அழைக் கிறார்கள்.
திராவிட தேசத்தில் இருக்கும் பிராமணர்களை ஐந்தாகப் பிரித்து, பஞ்ச திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள். கௌட தேசத்தில் இருக்கும் ஐந்து வகையான பிராமணர்களை பஞ்ச கௌட பிராம ணர்கள் என்று அழைக்கிறார்கள். தமிழ், கன்னட, தெலுங்கு, கேரள, மகாராஷ்டிர, குஜராத், மார்வாரி, குஜராத்தி பிராமணர்களை, பஞ்ச திராவிடர்கள் என்றும், கௌடா, கன்யக்புஜா, மைதிலி, சரஸ்வதி, உத்கல முதலான ஐந்து வகையான பிராமணர் களை பஞ்ச கௌடர்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த விவரங்கள் ஸ்கந்தபுராணத்தில் இருக்கின்றன.
சம்ஸ்க்ருதப் புலவரான கல்கணன் எழுதிய ராஜதரங்கிணி என்கிற காஷ்மீர் மற்றும் மேற்கிந்திய ராஜ வம்சங்களைப் பற்றிய சரித்திர புத்தகத்திலும் இது இருக்கிறது. கௌடம், திராவிடம் என்று பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப் பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்து. திராவிடன்என்றால் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.
துக்ளக் - 9.10.2019
"துக்ளக்" அய்யர் எடுத்துக் காட்டுவதெல்லாம் வரலாற்று ஆதாரங்களையல்ல - புராணங்களைத் தான் - புராணங்கள் வரலாறாகாது என்பது கடுகத் தனைப் புத்தி உள்ளவர்களுக்கும் தெரிந்தது ஒன்று.
சரி... அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் பிராம ணர்கள் - திராவிடர்கள் என்பது உண்மையென்றால் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ள தயங்குவது ஏன்? திராவிடர் களைப் பற்றி திராவிடர் கழகம் எடுத்துக் கூறினால் 'கள்' குடித்த மந்திகள் போல உறுமுவது ஏன்?
விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவன் திராவிடன் என்று கூறி முடிக்கிறார் கட்டுரையில்.
குருமூர்த்தி அய்யர் ஒரு சரியான முட்டுச் சந்தில் வந்து நின்று விட்டார். இப்பொழுது இவர் எழுதிய இந்தக் கருத்து - அவரை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருக்கப் போகிறது. பார்ப் பனர்கள் ஆரியர்கள் அல்லவாம் திராவிடர்கள் தானாம்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கரி லிருந்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேகேந்திர சரஸ்வதி உட்பட (தெய்வத்தின் குரல், முதல் பாகம், பக்கம் 267) ஆரியர்  திராவிடர் என்பது கற்பனை, வெள்ளைக்காரனால் கற்பிக்கப் பட்டது. பிரித்தாளும் சூழ்ச்சிக்காக அவ்வாறு கற்பிக்கப்பட்டது என்று சொன்னதெல்லாம் என்னவாயிற்று? கோல்வால்கரால் எழுதப்பட்ட ஆர்.எஸ்.எஸின் வேதநூல் என்று கூறப்படும்  BUNCH OF THOUGHTS என்ன கூறுகிறது?
"நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியாது. நாம் தொடக்கம் இல்லாத அநாதிகள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; அறிவுத் திறன் கொண்டவர்கள். ஆன்மாவின் விதிகளை யெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகள், அறிவற்ற மாக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே, தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை மற்றவரிடமிருந்து பிரித்துக் காட்ட நாம் ஆரியர்கள் - அதாவது அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப் பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்" என்கிறார் ஆர்.எஸ்.எஸின் குருநாதர்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் ஆரியர்கள் என்று இங்கு கூறுகிறாரே - அது எப்படி? கோல்வால்கரும் ஒருக்கால் வெள்ளைக்காரர்தானா? அல்லது கலப்பா?
அந்தந்த சந்தர்ப்பத்தில் வசதிக்கேற்ப எதை யாவது புளுகி தப்பித்துக் கொள்வது. அல்லது மேலாதிக்கம் செலுத்துவது என்ற சூதாட்டம்தான் இந்த ஆரியப் பார்ப்பனர்களின் அடிமட்ட புத்தியாகும்.
வெள்ளைக்காரர்களால் கற்பிக்கப்பட்டதுதான் ஆரியர் திராவிடர் என்றால் வரலாற்று ஆசிரி யர்கள் என்று கூறப்படும் சி.எஸ்.சீனிவாசாச்சாரி, எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார்கள் எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஆகிவிடுவார்களே!
"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங் களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும் - தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்."
"இது ஆரியர்கள் திராவிடர் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகின்றது - ஏனென்றால் ஆரி யர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்." என்று எழுதியவர்கள் தான் இவர்கள் (இந்திய சரித்திரம் - பக்கங்கள் 16, 17)
சி.எஸ்.சீனிவாசாச்சாரியாரையும், இராமசாமி அய்யங் காரையும் வெள்ளைக்காரர்களின் கைக் கூலிகள் என்று சொல்லப் போகிறார்களா?
ஆரியர் -  திராவிடர் கட்டுக்கதை என்றால் சிந்துச் சமவெளி நாகரிகம்,திராவிட நாகரிகம் என்று சொன்னது வெள்ளைக்கார அரசாங்கமா?
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அன்றைய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச் சர் முரளி மனோகர் ஜோஷி அரங்கேற்றியது என்ன?
சிந்துச் சமவெளியில் கிடந்த தடயமான காளையை கிராபிக்ஸ் மூலம் குதிரையாக ஆக்கிக் காட்டிய பித்தலாட்டத்தின் உட்பொருள் என்ன?
ஆரியர்களாவது, திராவிடர்களாவது என்று இப்பொழுது குறுக்குச்சால் ஓட்டும் கூட்டம் பதில் சொல்லட்டும். ஆரியர்களும், திராவிடர்கள் என்றால், சிந்துச் சமவெளி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றிக் காட்ட உச்சிக்குடுமியை ஒரு தட்டு தட்டி விட்டு குறுக்கு வழியில் காளையை இருட்டடித்து குதிரை மீது சவாரி செய்ய ஆசைப்படுவது ஏன்? ஏன்?
இன்னொரு முக்கியத் தகவலும் உண்டு - குருமூர்த்தி அய்யர்வாள் 2000 ஆண்டிலும் வாழ்ந்தவர்தானே.
டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் அவரே, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் சூத்திரதாரியும் கூட.
மத்தியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் "திராவிடர் என்சைக்ளோப்பீடியா" என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். அந்நூலை பெற்றுக் கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி திருவாய் மலர்ந்து கொட்டியது என்ன? "திரவிடியன் என்ற சொல்லை நீக்கிவிடலாம் அன்றோ"  என்பதுதான் - அந்த ஆரியவாளின் ஆர்வம் கொப்பளிக்கும் வார்த்தை! நூலைக் கொடுத்தவர் சாதாரண மானவர் அல்லவே.
திராவிட மொழி ஆய்வின் திராவிடப் பெருங் கடலாயிற்றே, குப்பத்தில் அதற்கான பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உந்து சக்தியாக விளங் கியவர் ஆயிற்றே. திருவனந்தபுரத்தில் உலகளா விய திராவிட மொழியியற் பள்ளி  (INTERNATIONAL SCHOOL  OF  DRAVIDIAN LINGUISTICS) யின் மூலவித்து போன்றவர் டாக்டர் வி.அய். சுப்பிரமணியம்.
பதட்டப்படவில்லை - பளிச்சென்று பதிலடி கொடுத்தார் பக்குவமாக.
"அப்படியா? - இந்திய நாட்டின் நாட்டுப் பண்ணிலிருந்து "திராவிடம்" என்ற சொல்லை நீக்கி விடுங்கள், நானும் திராவிடக் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன்" என்று சொன்னாரே பார்க்கலாம், சுருங்கி விட்டதே முரளி மனோகரின் முகம். (ஆதாரம் - DLA NEWS - மார்ச்சு 2003)
இதற்கு மேலும் குருமூர்த்தி வகையறாக்கள் ஆரியர் திராவிடர் பற்றி சொல்ல என்ன பரப்புரையை வைத்துள்ளனராம்?
பாரத தேசம் இரண்டு பகுதிகளாக இருந்தது. வெள்ளைக் காரர்கள் அதை இனப்பிரிவாக மாற்றினார்கள் என்பது பலருடைய கருத்தாம் - பம் முகிறார் பார்ப்பனருக்கான செய்தித் தொடர்பாள ராக தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.
இவர்களுடைய வேதங்களின் மனுதர்மத்தில் கூட ஆரியர், திராவிடர் என்ற வார்த்தைகள் காணப்படுகின்றனவே.
யஜூர்வேதம் (6, 22) என்ன சொல்லுகிறது?
"ஓ இந்திரனே! உயிர் வாழ்க்கைக்கு இன்றி யமை யாதவைகளான பிராண வாயு, ஜலம், அன்னம், முதலியவைகளை ஆரியர்களாகிய எங்களுக்கு அமிர்தமாகவும், எங்களை யார் பகைக்கிறார்களோ, அந்த அனாரியர்களுக்கு விஷமாகவும் ஆக்கிவிடும்" என்கிறதே யஜூர்.
ஆகா,  வேதங்களின் விரிந்த மனப்பான்மைக்கு வேறு என்ன  எடுத்துக்காட்டுதான் தேவை? - அது இருந்து தொலையட்டும் இந்த சுலோகத்தில் இடம் பெறும் "ஆரியர்" என்பது வேதகாலத்திலேயே வெள்ளைக்காரனால் இடைச் செருகல்  செய்யப் பட்டது என்று செப்புவார்களோ!
"பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயநம் முதலிய கர்மலோகத்தினாலும் மேற் சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தவர்கள்" (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 43)
பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம் போசம், யவநம் சகம், பாரதம், பால்ஹீசம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னப்படி சூத்திரர்களாகி விட்டார்கள். (மனுதர்மம், அத்தி யாயம் 10, சுலோகம் 44)
மனுதர்மத்தில் காட்டப்படும் திராவிடம், பிராமணர்கள் என்பதெல்லாம் வெள்ளைக் காரனின் விஷம வேலை என்று இந்தப் பார்ப்பன வெள்ளைக்காரர்கள் சொல்லப் போகிறார்களா?
வேதங்களில் சாத்திரங்களில் சொல்லப்படும் சுலோகங்களில் சொன்னபடிதான் வாழ்ந்து, அதன் தன்மையில் குருமூர்த்திகள் இப்பொழுது பூணூல் தரித்துக் கொண்டு இருக்கிறார்களா?
குருமூர்த்தி மற்றும் தங்களைப் பிராமணர்கள் என்று கூறிக் கொண்டு அதன் அடையாளமாகப் பூணூல் தரித்துக் கொண்டுள்ள - ஆண்டாண்டு தோறும் அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி  ஆவணி அவிட்டம் என்று நாமம் சூட்டிக் கொண்டு பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, இவர்கள் வேதத் தர்மப்படி நடந்து கொண்டுதான் பூணூலைத் தரித்துக் கொண்டுள்ளனரா?
இவர்களுக்கு குருநாதராக லோகக் குரு - மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
"பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான், மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்."
"பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு" என்று கும்பகோணத்தில் ஒரு தெருகூட இருக்கிறது. பிராமண சந்நியாசிகள் அன்று பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகக் பெற்றுக் கொள்கிறேன் என்பார்கள். இப்பொழுது இவன் செய்கின்ற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (காஞ்சி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள், முதற் பகுதி - கலைமகள் - 1957-1958, பக்கம் 28)
கர்மானுஷ்டங்களை அனுசரிக்காத க்ஷத்தி ரியர்கள் சூத்திரகளாகி விட்டனர் என்று கூறும் மனுதர்மப்படி, பிச்சை எடுத்து வாழ வேண்டிய பிராமணர்கள் அதனை கடைப்பிடிக்காமையால் திருவாளர் குருமூர்த்தி அய்யர் உட்பட பூணூல் தரிக்க உரிமை  உடையவர்களா? க்ஷத்திரி யர்கள் சூத்திரர்கள் ஆனது போல, குருமூர்த்தி வகை யறாக்கள் பூணூலை அறுத்து எறிந்து விட்டு "சூத்திரர்கள்" என்று ஒப்புக் கொள்வார்களா?
அ'வாள்'களே வாலைச் சுருட்டிக் கொண்டு கிடப்பதுதான் உத்தமம்!
- விடுதலை நாளேடு, 8.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக