செவ்வாய், 9 மே, 2017

திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு குறைகிறதா..?


மஞ்சை வசந்தன்

திராவிடம் என்பதற்குப் பதில் தமிழ்த் தேசியம் என்ற சொல் மாறினால் எல்லாம் மாறி தமிழ்நாட்டிற்கும் தமிழருக்கும் உயர்வு வந்துவிடுமா? சீர்கேடுகள் எல்லாம் களையப் பெறுமா?

திராவிடம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன?

தமிழர் என்பதற்கு வரையறை என்ன?

திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழர்கள் மேம்பட்டார்களா? சீரழிந்தார்களா?

திராவிடக் கட்சிகள் செல்வாக்கு இழக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் வளர்ந்து வருகின்றனவா? வளரமுடியுமா?

தமிழர் என்பதில் பார்ப்பனர் அடக்கம் என்று கொண்டு, தமிழர் மொழியை கலாச்சாரத்தை வளர்த்து உயர்த்த முடியுமா?

பார்ப்பனர் அவர்களது ஆதிக்க அம்புகளை எய்து உள்ளிருந்தே நம்மை வீழ்த்தத்தானே செய்வர்?
இச்சிக்கல்களுக்குத் தீர்வு எவை? என்பனவற்றை நாம் ஆழமாக அலசி அறிய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

திராவிடக் கட்சிகளின் மீது திட்டமிட்ட வெறுப்பு விதைப்பு

திராவிடக் கட்சிகளே தொடர்ந்து தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றனவே, அதை மாற்ற, திராவிடக் கட்சிகளின் மீது சுயநலத்திற்காக வெறுப்பை விதைத்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு. அதற்கு உதவி செய்தவர் பெங்களூர் குணா.

இப்போது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றவர்கள் எல்லாம், தங்கள் கொள்கையைச் சொல்வதற்கு மாறாய் திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்தான் தமிழ்நாடு கெட்டுப்போனது. எனவே, அவற்றை ஒழித்து அந்த இடத்தில் எங்களை அமர்த்துங்கள் என்று மக்கள் முன் கோரிக்கை வைக்கின்றனர். இதில் தமிழ்த் தேசியவாதிகள், பி.ஜே.பி.யினர், கம்யூனிஸ்டுகள் எல்லாம் அடக்கம்.

ஆக, திராவிட எதிர்ப்பின் அடித்தளமே சுயநல அரசியல் ஆகும். ஆட்சிக்கு வந்தவர்களின் ஊழல், கொள்ளை, சமரசங்கள் தமிழகத்தின் கேட்டிற்குக் காரணம் என்றால், அதில் பொருள் உண்டு. ஆனால், திராவிடக் கட்சிகளின் கொள்கை எப்படிக் காரணமாகும்.

மேற்கண்ட ஊழல், கொள்ளை, சமரசங்கள் எல்லாம் இந்த அரசியல் அமைப்பில் எவர் வந்தாலும் நடக்கும் என்பதே அனுபவம்! ஊழல், கொள்ளை, சமரசம் செய்துகொள்ளுதல் என்ற அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் எந்த அரசியல் கட்சி மிஞ்சும்? ஆட்சிக்கு வருமுன் தூய்மை காப்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இவற்றை அரங்கேற்றுவதுதானே அனுபவத்தில் நாம் காண்பது? ஊழல் ஒழிப்புப் பற்றிப் பேசுகின்ற புதிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் பல லட்சம் வாங்கியதைப் பார்த்தோமே! தொடக்கமே இப்படியென்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்?

இவற்றை ஒழிப்பதற்கு மக்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் எதிர்த்துப் போராடிச் சீர்செய்ய வேண்டும். அதை விடுத்து திராவிடம் என்பதற்குப் பதில் தமிழ்த்தேசியம் என்று பெயர் வந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடுமா?

பெயர் மாறினாலும் ஆளுகின்றவர் ஆசை மாறிவிடுமா? அவர்களின் சுயநலம் மாறிவிடுமா? ஜாதி உணர்வு மாறிவிடுமா? ஜாதி வேட்பாளர்களை நிறுத்தும் யுக்தி மாறிவிடுமா?

அரசியல் நடத்த கோடிகளில் பணம் வேண்டும் என்னும்போது ஊழல், கொள்ளை, சுரண்டல் அதுவாகவே வந்து சேர்ந்துவிடுமே!

அரசியல் கட்சித் தொண்டன் முழுநேர அரசியல்வாதியாக ஆகும்போது, அவன் அதை வைத்தே பிழைக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது, அங்கு ஊழல் ஊற்றுக் கண் திறக்கப்பட்டு விடுகிறதே!

இன்றைக்கு ஊழலை ஒழிப்போம், தமிழ்நாட்டை வளப்படுத்துவோம் என்பவர்கள் குடும்பம் 50 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது. இப்போது எப்படி இத்தனை ஆயிரம் கோடி சொத்து வந்தது என்று அவர்கள் கணக்குக் காட்டத் தயாரா?

ஊழலை ஒழிப்பேன், குடும்ப அரசியலைத் தடுப்பேன் என்கிறவர்களிடமே இந்த இரண்டும் உள்ளனவே! இவர்கள் எப்படி ஒழிப்பார்கள்?

மக்கள் தற்போது எழுச்சி பெற்றிருப்பதால் ஊழல், கொள்ளை, சுரண்டல் பெரிதும் குறையும். எனவே, இவற்றிற்காக பலமான கட்டமைப்பு கொண்ட திராவிடக் கட்சிகளை அகற்றுதல், தமிழர்க்கே கேடாய் முடியும். உதிரிக்கட்சிகள் சிதறிப் போனால், மதவாத பி.ஜே.பி. காலூன்றும். எனவே, உணர்ச்சிவசப் படாமல், தொலைநோக்கோடு முடிவெடுக்க வேண்டும்.

திராவிடர் என்ற சொல் தந்தை பெரியார் நுழைத்ததா?

மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம், 43, 44ஆம் சுலோகத்தில் திராவிடம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள். திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி.17ஆம் நூற்றாண்டில் குமரிலபட்டர் திராவிட பாஷைகள் பற்றிக் கூறியுள்ளார்.

கி.பி.17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர் என்ற பாடலில்

‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

டாக்டர் ஹட்சன் என்பவர் திராவிடன் என்ற சொல்லைப் பயன்படுத்தியதாய் கியர்சன் குறிப்பிடுகிறார் (Linguistic Survey of India Vol.I)

1856இல் கால்டுவெல் திராவிடர் என்ற சொல்லைக் கையாண்டார்.

பெரியாருக்கு முன் நீதிக்கட்சியினரே திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
திராவிடர் பற்றி பாவாணர் கருத்து:

“இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் _தமிழம் _ த்ரமிள _ திரமிட _ திரவிட _ த்ராவிட _ திராவிடம்’’ என்று கூறி தமிழே திராவிடம் என்றானது என்கிறார். அதாவது தமிழும் திராவிடமும் வேறு வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே என்கிறார்.

- ( ஒப்பியன் மொழி நூல், பகுதி - 1, பக்கம் - 15, தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 14)

ஆக, திராவிடம் என்ற சொல் தமிழுக்கோ, தமிழர்க்கோ எதிரானது அல்ல. அது ஓர் இனக் குறியீடு. ஆரியப் பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்கும் ஓர் அடையாளச் சொல். தமிழன் என்ற போர்வையில் ஆரியப் பார்ப்பனர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் கவசம், பாதுகாப்பு அரண் அவ்வளவே!

தமிழர் என்பதற்கு மாறாய் திராவிடர் என்பது ஏன்?

1.    பெரியார் திராவிடர்களுக்காய் குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிமிர்ந்து நின்றார்களா! வீழ்ந்து கிடந்தார்களா? ஆரியத்திற்கு அடிமையாய் மூடநம்பிக்கைச் சகதியில் ஜாதிச் சச்சரவில், தன்மானமிழந்து, தன்னிலை அறியாது சூத்திரர்களாய் வீழ்ந்து கிடந்தனர். திராவிடக் கொள்கை வருமுன்னே வீழ்ந்து கிடந்தவன், திராவிடத்தால் வீழ்ந்தான் என்பது அசல் பொய் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? பித்தலாட்டம் என்பதா?

2.    திராவிடத்தைக் கையில் எடுத்து பெரியார் போராடிய போது திராவிடப் பகுதியின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்வு செய்து, அதற்குத் திராவிடத்தைக் கையில் எடுத்தது சரியா? தமிழைக் கையில் எடுத்திருக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

3.    பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே இல்லையே. அங்கு சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழியாரையும் உள்ளடக்கித் தானே இருந்தது. அதற்கேற்ற அணுகுமுறையைத் தானே கொள்ள முடியும்?

4.    மொழியடிப்படையில் பிரிக்கும்போது, வேற்று இனத்தானும் வருவானே (வருகிறானே). ஆரியப் பார்ப்பான் நான் தமிழன் என்று வரும்போது நீ எப்படி மறுப்பாய்!

5.    மொழியடிப்படையில் பார்த்தால் ஒரே இனத்தவரே எதிர் எதிர் நின்று எதிரிகளாவரே.

6.    இன்றைக்குள்ள நதி நீர்ச் சிக்கலை அன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து திராவிடத்தை விமர்ச்சிப்பது சரியா?

7.    தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் என்றால், அயல்நாடுகளில் சென்று தங்கி, தலைமுறைத் தலைமுறையாய் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாரிசுகள் தமிழே தெரியாது அந்நாட்டு மொழியையே பேசுகின்றனர். தமிழ் தெரியாததால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? தமிழகத்திற்கு வந்த மார்வாடிகள் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார்கள்; அதனால் அவர்கள் தமிழர்களா?

வீழ்ந்தது ஆரியத்தாலா? திராவிடத்தாலா?
வீழ்ந்தது ஆரியத்தால்:

தமிழ்மொழி சிதைந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளி, மராட்டி என்று மாறியது ஆரிய சமஸ்கிருத கலப்பால் அல்லவா?

மொழிச்சிதைவு, இனச்சிதைவு யாரால்?

மொழி சிதைந்ததால் மொழிவழி தமிழினம் சிதைந்து விட்டதே.
கலாச்சாரச் சிதைவு யாரால்? ஒற்றுமைச் சிதைவு யாரால்?

ஜாதியற்ற, மூடநம்பிக்கையற்ற, பிறப் பொக்கும் என்ற சமதர்ம சிந்தனை கொண்ட தமிழர் கலாச்சாரம், வாழ்வியல் மாறி, சீர்கெட்டு, ஜாதி, மத, மூடநம்பிக்கை, மான இழப்பு வந்தது எல்லாம் ஆரியர்களால் அல்லவா?

கல்வி பறிபோனது யாரால்?

தாங்கள் மட்டுமே படிக்க வேண்டும், பார்ப்பனர் அல்லாதார் (தமிழர்கள் _ சூத்திரர்கள், படிக்கக் கூடாது என்று பல நூற்றாண்டுக் காலம் தடுத்துக் கெடுத்தவர்கள் யார்?

பகுத்தறிவு பறிபோனது யாரால்? இழிவு வந்தது யாரால்? ஆதிக்கம் வந்தது யாரால்?

ஆரியப் பார்ப்பனர்களால் அல்லவா!

தமிழ், கோயிலுக்குள் ஒலிக்கக் கூடாது என்று ஆரிய பார்ப்பனர்கள் தடுக்கிறார்களா?  தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தடுக்கிறார்களா?

தமிழர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று தடுப்பது யார்? ஆரியப் பார்ப்பனர்கள்தானே! தமிழை நீசப் பாஷை என்றது யார்? ஆரியப் பார்ப்பனர்கள்தானே!

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லி தமிழர்களை மருத்துவம் படிக்காமல் தடுத்தவர்கள் யார்? ஆரியர்கள் தானே!

திராவிடத்தால்தான் எழுந்தோம்:
மானமீட்சி

மானமே உயிர் என வாழ்ந்த தமிழர் ஆரியத்தின் ஊடுருவலால், ஆதிக்கத்தால் அடிமையாகி, சாத்திர, கோத்திர மூடநம்பிக்கை களால் சூத்திரனாகி, இழிநிலையில் உழன்றான்.

தமிழர்களின் தன்மான இழப்பிற்கு எவை யெல்லாம் காரணமோ அவற்றையெல்லாம் சாடினார். யார் எல்லாம் காரணமோ அவர்களையெல்லாம் எதிர்த்தார்.

தந்தை பெரியார் என்னும் தன்மானச் சூரியன் தந்த சூட்டினால் சொரணை பெற்ற தமிழர்கள் மெல்ல மெல்ல விழித்தனர். தான் யார்? என்ற தன் உணர்வே அப்போதுதான் தமிழனுக்கு வந்தது.

இந்த மண்ணின் உரிமையாளர் நாம். வந்தேறிகளான ஆரியர்கள் நம்மைக் கேவலப்படுத்துவதா? அடிமைப்படுத்துவதா? ஆதிக்கம் செலுத்துவதா? என்ற சிந்தனைகள் பிறந்தன. தந்தை பெரியாரின் கருத்துக்களை அசைபோடத் தொடங்கினர். அதன் விளைவாய் ஆரியத்தை வசைபாடத் தொடங்கினர். ஆரிய எதிர்ப்பு நெருப்பு பற்றிப் பரவத் தொடங்கியது. மானச்சூட்டின் விளைவாய் வந்த நெருப்பல்லவா அது. ஆறு வயது ஆரியச் சிறுவன் அறுபது வயது தமிழ் முதியவரை, வாடா, போடா என்ற நிலையைத் தகர்த்த இயக்கம் திராவிடம் அல்லவா? உளச்சான்று உள்ள எவர் இதை மறுப்பர்!

உரிமை பெறல்

கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செய்த ஆரியக் கோட்டையை இடஒதுக்கீடு என்னும் எரிபொருள் கொண்டு தகர்த்தது அல்லவா திராவிடம்? தகர்த்தவர் அல்லவா தந்தை பெரியார்! இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்! இடஒதுக்கீடு பெற்று தமிழர்கள் எல்லாத் துறையிலும் நுழைவாசல் திறந்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!

உயர்பதவிகள் முழுக்க ஆரியப் பார்ப்பனர்களுக்கே என்ற ஆதிக்கத்தைத் தகர்த்து, தமிழர்கள் அப்பதவிகளில் தலைநிமிர்ந்து அமர வழி செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!

தாசில்தாராகத் தாழ்த்தப்பட்டவர் முன்செல்ல, கோப்புகளைச் சுமந்து ஆரியப் பார்ப்பனர்கள் பின்செல்லத் தலைகீழ்ப் புரட்சியை ஏற்படுத்தியப் புரட்சி இயக்கமல்லவா திராவிடர் இயக்கம்!

கல்வி

சூத்திரன் கற்கக்கூடாது என்ற சாத்திரத்தை மாற்றிச் சரித்திரம் படைத்த இயக்கம் எது?

குலக்கல்வித் திட்டத்தைக் குழியில் புதைத்து அம்பட்டன் பிள்ளையை ஆட்சியராக்கிய இயக்கம் எது?

மருத்துவமா? சட்டமா? பொறியியலா? கலையா? இசையா? ஆட்சியா? வங்கியா? வானொலியா? எல்லா இடத்திலும் ஆரியப் பார்ப்பனர் என்ற ஆதிக்கத்தை அகற்றி, தமிழர்களை அங்கெல்லாம் அமர்த்தியதோடு அவர்களைச் சாதிக்க செய்த இயக்கம் எது?

இன்று எல்லா துறைகளிலும் முதலிடம் பெற்று பரிசு பெறுபவர்கள் யார்? கல்வியே வராது என்று சொல்லப்பட்ட சூத்திரன்தானே? இந்த மாற்றத்தை நிகழ்த்தியது திராவிடம் அல்லவா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வா, சூத்திரத் தமிழன்தான் முதலிடம் பெறுகிறார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வா சூத்திரத் தமிழன்தான் முதலிடம். இந்திய ஆட்சிப் பணியா? சூத்திரத் தமிழர்கள்தான் அதிகம் தேர்வு பெறுகிறார்கள்.

பொறியியல், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அறிவியல், ஆட்சி என்று அனைத்திலும் முத்திரை பதிப்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?

அப்துல்கலாமும், அண்ணாதுரையும் ஆரியப் பார்ப்பனர்களைப் பின்தள்ளி முன்னே நின்றது எந்த இயக்கத்தால்? திராவிடம் தந்த விழிப்பாலும் உரிமையாலும் அல்லவா?

கலை

கே.பி. சுந்தரம்பாளும், சிவாஜிகணேசனும், பாரதிராஜாவும், இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் ஆரியத்தை அடியில் தள்ளி, பிடியைத் தங்களுக்குள் கொண்டு வந்தது திராவிடம் தந்த விழிப்பால், ஊக்கத்தால், வாய்ப்பால், உரிமையால் அல்லவா?

பிராணாநாதாவும், சகியும் வசனமாகி, புராணமும், இதிகாசங்களும் திரைப்படங்க ளாகிய நிலையை மாற்றி, வேலைக்காரியும், பராசக்தியும், மனோகராவும், இரத்தக் கண்ணீரும் வந்து, அனல் தெறிக்கும் தமிழ் வசனம் பேசிய மாட்சியும், சமூக அவலங்களை உணர்த்திய காட்சியும் திராவிடம் தந்த புரட்சியல்லவா?

தெலுங்குக் கீர்த்தனையும், கர்னாடகச் சங்கீதமும் பாடப்பட்ட மேடைகளில் தமிழிசையை வழிந்தோடச் செய்தது திராவிடம் அல்லவா?

மேடைத் தமிழ்

மேடையில் நற்றமிழ் சொற்களை, அடுக்கு மொழியில் மிடுக்காகப் பேசுவது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உணர்வைத் தூண்டி எழுச்சியை உருவாக்குவது என்ற செயல்கள் திராவிடம் தந்த கொடையல்லவா?

மேடை நாடகங்கள்

மன்மத நாடகமும், பக்த பிரகலாதாவும், சூரசம்காரமும் நடிக்கப்பட்ட மேடைகளில், சமூக விழிப்பூட்டும் நாடகங்கள் நடத்தப் பட்டது திராவிடம் ஏற்படுத்திய புரட்சி யல்லவா? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றோரால் சமூகச் சீர்திருத்த நாடகங்கள் மூலை முடுக்கெல்லாம் நடத்தப்பட்டு, தன்மானமும் பகுத்தறிவும், தமிழ் உணர்வும் ஊட்டப்பட்டது திராவிடத்தால் அல்லவா?

புரட்சி இயக்கங்கள்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார், கவிஞர் சுரதா போன்றோரால் இனஉணர்வும், மொழி உணர்வும், விழிப்புணர்வும், தன்மானச் சூடும், உரமும், திறமும், ஊக்கமும் கொடுக்கப்பட்டது திராவிடத்தின் எழுச்சியால் அல்லவா?

மானமுள்ள மணமுறை

ஆரியர் மந்திரம் சொல்லி, அக்கினி வளர்க்கப்பட்டு, மானம் இழந்து, மதியிழந்து, நடத்தப்பட்ட தமிழர் வீட்டுத் திருமணங்களை, மானமும், அறிவும் உள்ளதாய், தமிழ் மரபுக்கு உகந்ததாய் மாற்றிய சாதனை திராவிடத்தின் வெற்றியல்லவா? அருந்ததி பார்க்காமல், அம்மி மிதிக்காமல், ஆரியப் பார்ப்பனர் மந்திரம், அக்கினி இல்லாமல் செய்யும் திருமணம் செல்லாது என்றிருந்த நிலையை மாற்றி, மனம் ஒத்து மாலை மாற்றிக் கொண்டாலே திருமணம் செல்லும் என்று சட்டப்படி தகுதி கொடுத்தது திராவிட அரசு அல்லவா?

தமிழர் விழாக்கள்

தமிழர்களை இழிவு செய்யும் ஆரியர் விழாக்களை அடையாளங் காட்டி, தமிழர்க்குரிய பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடச் செய்து தமிழர் பண்பாட்டை மீட்ட இயக்கம் திராவிடம் அல்லவா?

தமிழ் வளர்த்தல்

ஆரியம் அழித்தொழிக்க நினைத்த தமிழை, வீரியத்துடன் மீட்டு, ஏட்டிலும், நாட்டிலும் உயர்த்தி நிறுத்தியது திராவிடம் அல்லவா?

ஸ்ரீயும், ஸ்ரீமதியும், மகாராஜ ராஜஸ்ரீயும், கனமும், மகா கனமும் பேசிய தமிழ் ஏடும் நாடும், திரு, திருமதி, பெருந்தகை, மாண்புமிகு, மானமிகு என்று பேசச் செய்தது திராவிடம் அல்லவா?
நாராயணசாமியும், சுப்பிரமணியுமாய் திரிந்த தமிழனை செழியன், பாண்டியன், தமிழ்வளவன், தமிழரசி, செல்வி, செல்வன் என மாற்றியது திராவிடம் அல்லவா?

தமிழ்ப் படித்தவர்களை இரண்டாம் தரமாக நடத்திய நிலையை மாற்றி, அவர்களுக்கும் சமநிலை, உயர்நிலை தந்தது திராவிடம் அல்லவா?

தமிழ்வழிக் கல்வி அளித்து, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தந்தது திராவிடம் அல்லவா?
நீதிமன்றங்களிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தமிழைப் பயன்படுத்தியது திராவிடம் அல்லவா?

திருக்குறளை தெருதோறும் பரவச் செய்தது திராவிடமும், பெரியாரும் அல்லவா? தொல்காப்பிய வாழ்வைத் துலங்கச் செய்தது திராவிடம் அல்லவா?

தமிழ்நாடும், தமிழ் மாநாடும் :

தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி, நடைமுறையில் அப்படியே அழைக்கச் செய்த சாதனையைப் புரிந்தது திராவிடம்.

தமிழுக்காக மாநாடுகள் நடத்தி, தமிழ் அறிஞர்களைப் பங்கு பெறச் செய்து எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது திராவிடம். கல்லூரிகளில் தமிழை இடம் பெறச் செய்தது திராவிடம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கியது திராவிடம். தமிழ் வளர்ச்சித் துறையைத் தந்தது திராவிடம், தமிழ் அகராதிகளை, அகர முதலிகளை வெளியிட்டது திராவிடம். தமிழை, செம்மொழி என அறிவிக்கச் செய்தது திராவிடம். அதற்கான நிதியைப் பெற்றதும் திராவிடம். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி, அவர்களின் குடும்பங்களின் இன்னலைப் போக்கியது திராவிடம்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு :

இந்தியை வலியப் புகுத்த முயன்ற அரசின் செயலை எதிர்த்து, வென்று, தமிழுக்குப் பாதுகாப்பையும், சிறப்பையும், தந்தது திராவிடம். அதற்காக இன்னுயிரை இழந்ததும் திராவிடம்.

தொழிலாளர் நலன் :

தொழிற்சங்கங்களை வலுவாகக் கட்டமைத்துத் தொழிலாளர் நலனையும், பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்தது திராவிடம்.

பெண்ணுரிமை :

இந்தியாவிலே தமிழகப் பெண்கள்தான் உரிமையும், விழிப்பும், பாதுகாப்பும், கல்வியும், சொத்தும் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் பெரியாரும் திராவிடமும்தானே! விதவை மணம், ஜாதி மறுப்பு மணம், சொத்துரிமை, வேலை வாய்ப்பு போன்ற புரட்சிச் சிந்தனைகள் செயலில் வந்தது திராவிடத்தால்தான்!

தேவதாசி முறையை ஒழித்து, தமிழ்ப் பெண்களை மீட்டது; கூட்டங்களில் ஆண்களோடு பெண்களை அமரச் செய்தது திராவிடம். மகளிர் காவல் நிலையங்கள் அமைத்து பெண்களைக் காவலர்களாகப் பணிக்கமர்த்தியது திராவிடம். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இன்று நிமிர்ந்து நிற்பது திராவிடம் தந்த திடம் அல்லவா!

ஜாதி ஒழிப்பு :

இந்தியா முழுமையும் இன்றளவும் ஜாதிக் கொடுமைகள் தலைதூக்கி நிற்கின்ற நிலையிலும் தமிழகத்தில் ஜாதி வெறுப்பு ஒழிந்து, ஒரே இடத்தில் எல்லோரும் சேர்ந்து வாழும் நிலையை உருவாக்கியது திராவிடம். அதன் உச்சமாகச் சமத்துவபுரங்கள், சமபந்தி உணவு. தாழ்த்தப்பட்ட மக்கள் முழுப் பாதுகாப்போடும், சம உரிமையுடனும் வேறுபாடின்றி வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு காணப்படுவதற்கு முழுக்க முழுக்கக் காரணம் திராவிட கட்சிகளும், பெரியாரும் அல்லவா?

தமிழர் ஆண்டு :

உலகுக்கே ஆண்டுக்கணக்கைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், இந்த உண்மை மறைக்கப்பட்டு, நம்மீது புராணக் கதை சுமத்தப்பட்டு, 60 சமஸ்கிருத ஆண்டுகளைத் தமிழாண்டுகள் என்று சொல்லி நம்மைக் கேவலப்படுத்தியதை மாற்றி தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஆணையிட்டது திராவிடம். ஆனால் அதைத் தகர்த்தது ஆரியம். ஆரிய திராவிடப் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளம்!

ஆரியர் ஆதிக்கம் அகற்றல் :

உணவு விடுதி என்றால் அதில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தனியிடம், தண்ணீர்ப் பானை தனி என்ற நிலை நீடித்தது. இதைக் கடுமையாக எதிர்த்துத் திராவிட இயக்கம் போராடியதன் விளைவாய் இந்த வேறுபாடு அகற்றப்பட்டது. அதேபோல் உயர்பதவியில் ஆரியப் பார்ப்பனர்களே அமர்ந்த நிலை தகர்க்கப்பட்டுத் தமிழர்களும் செல்லும் நிலை திராவிடத்தால் உருவாக்கப்பட்டது. அல்லவா?

‘தமிழ்நாடு’ உருவாக பெரியார் ஆற்றிய பணிகள்:

1938இல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய ஒரு தமிழர் தலைவரைப் பார்த்து, தரமிழந்து, அறியாமையின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியத்தைக் கெடுக்கவே பெரியார் திராவிடத்தை எடுத்தார் என்று அபாண்டமாக, பொய்யாக, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை குணா கூறுகிறார் என்றால் அவர் ஒரு ஆரிய கைக்கூலியா? என்பதைத் தமிழர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார் முழங்கிய தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமே தமிழ்த் தேசியத்திற்கான முதல் முழக்கம் என்பதை வரலாற்று அறிவுடைய அனைவரும் அறிவர், ஏற்பர். அதனால்தான் தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று நன்றியுள்ள அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.

1.    தனது ஏடுகளில் நாள்தோறும் எழுதினார்.

2.    ஆற்றலுள்ள ஆர்வம் உள்ள அறிஞர்களை விட்டு எழுதச் செய்தார்.

3.    ஊர்தோறும் மேடைதோறும், நாள்தோறும் பேசினார்.

4.    தன் தோழர்களை, தமிழர் நாட்டு வளர்ச்சிக்குப் பேசச் செய்தார்.

5.    கவிஞர்கள் மூலமாகத் தமிழர், தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பரவச் செய்தார்.

6.    நாடகங்கள் மூலம் உணர்வு ஊட்டினார், வளர்த்தார்.

7.    திரைப்படங்கள் மூலமாகவும் தமிழர் உணர்வு பரவத் தூண்டினார், உதவினார், ஆதரித்தார்.

8.    தமிழ்நாடு உருவாக, அதற்குத் தடையாக இருந்த ஜாதி, மதம், மூடநம்பிக்கை, ஆரியப்

பார்ப்பனர் ஆதிக்கம் இவற்றை எதிர்த்து முடிந்த அளவு ஒழித்தார்.

9.    தமிழரிடையே சமத்துவத்தை வளர்த்தார்.

10.    தமிழரிடையே ஒற்றுமை வளர ஜாதி மறுப்பு (கலப்பு) மணங்களை நடத்தினார்.

11.    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அடிப்படையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தமிழ் காலத்திற்கு ஏற்ப கருத்துக்களை உள்வாங்கி வளம்பெற வேண்டும். உலக மாற்றத்தின் தேவைக்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மாற்றமும், ஏற்றமும் பெற்று வளர வேண்டும் என்று பேசினார், அதற்கான செயல்களிலும் இறங்கினார்.

12.    தமிழ்நாடு உருவாவதற்கு அரசியல் அணுகுமுறைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் ஆதரவையும், அரசியல் பிரச்சாரங்களையும் செய்தார்.

தமிழ் தேசியத்தின் கொள்கை என்ன?

தமிழர் நலன், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் உயர்வு, தமிழர் மீட்சி, தமிழர் மரபுகள், கலை, கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்படல், தமிழர் மருத்துவம் வேளாண்மை மீட்டெடுத்தல், தமிழர் கல்வி வளர்ச்சி, தமிழர் வேலைவாய்ப்புக்கு வழிசெய்தல், நதி நீர்ச்சிக்கலில் தமிழர் உரிமை காப்பாற்றுதல், தடுப்பணைகளைத் தடுத்தல் போன்றவை தானே!

திராவிடக் கட்சிகளின் கொள்கைகளும் அதுதானே!

இவை அனைத்தையும் தானே திராவிடக் கட்சிகள் சொல்கின்றன, செய்கின்றன! இவற்றிற்காகத்தானே போராடுகின்றன?

“தமிழர்”, “திராவிடர்” என்ற சொல் பயன்பாட்டைத் தவிர வேறு என்ன வேறுபாடு.

திராவிடம் என்ற பெயரில் கட்சிகள் இருந்தாலும் செய்தது எல்லாம் தமிழர்க்காக, தமிழ் மொழிக்காகத் தானே?

பெயர் மாற்றத்தால் மட்டும் பெரிய மாற்றம் வந்து விடுமா?

தமிழர் என்ற பெயரில் பார்ப்பனரை சேர்ப்பது ஆபத்தல்லவா?

திராவிடக் கட்சிகளிலே ஊடுருவியவர்கள் பார்ப்பனர்கள். அப்படி இருக்க பார்ப்பனர்களை தமிழர்கள் என்று சேர்க்கத்துடிக்கும் தமிழ் தேசிய கட்சியுள் அவர்கள் எளிதாக ஊடுருவி அழித்தொழித்து விடுவார்களே! அதைத் தடுக்க “திராவிடம்’’ என்பதுதானே இனப் பாதுகாப்பாகும்!

தமிழர்களுக்கு எதிரானவர்களைச் சேர்த்து தமிழர் நலன் காப்பதெப்படி?

நாம் தமிழ் வளர வேண்டும், தமிழ் கருவறையுள் ஒலிக்க வேண்டும், தமிழ்ப் புத்தாண்டு ‘தை’ முதல்நாள் என்போம், பார்ப்பனர்கள் இவற்றை எதிர்க்கக் கூடியவர்கள்; சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்வாய்க் கருதுபவர்கள்!

தமிழர் இசையை அழித்து, கர்நாடக இசையை தூக்கிப் பிடிப்பவர்கள். மத ஒழிப்பு தமிழர் கொள்கை. மதவெறி மதமோதலை வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள்-. கருவறையுள் தமிழன் செல்வதை தடுப்பவர்கள் பார்ப்பனர்கள். இப்படி தமிழர்க்கு எதிரானவர்களை தமிழர் என்று சேர்த்து தமழையும் தமிழரையும் காப்பது எப்படி?

தமிழ்த்தேசியவாதிகளின் முன்னோடிகள் யார்?

ஆரியப் பார்ப்பன ராஜாஜியும் அவரது அணுக்கத் தொண்டர் ம.பொ.சி.யும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோடிகள்.

“கம்யூனிஸ்டுகளைவிட திராவிடர் கழகத்தார்கள் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம் சாதாரண மக்களைப் பற்றிக் கொள்கின்றது. இனி தமிழ்நாடு சந்தோஷமாக இருக்க வேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கைக் கட்டி வைத்துவிட வேண்டும். இனி அவர்கள் செய்கை வரலாற்றில் இடம் பெற வேண்டுமேயல்லாமல் நாட்டில் காணும்படி விடக்கூடாது’’ இது இராஜாஜி சபதம்.

இந்த இராஜாஜியின் அணுக்கத்தொண்டர் ம.பொ.சி. இராஜாஜியின் செயல் திட்டங்களை, விருப்பங்களை செயல்படுத்த அயராது பாடுபட்டவர்; ஆரியத்தின் அடிவருடி.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பதால், அவர்கள் (தமிழர்கள்) தேவ மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது நிறையோ, நெறியோ ஆகாது’’ என்று தமிழர்களை ஆரியத்திற்கு அடிமையாக்க உழைத்தவர்; சமஸ்கிருதத்தை தேவமொழியாக ஏற்கச் சொன்னவர் ம.பொ.சி.!

“மார்வாடிகளின் கடைக்கு முன்னால் மறியல் செய்தால், திராவிட வியாபாரிகள் கடைகள் முன் நாம் மறியல் செய்வோம்’’ என்று மார்வாடிகளுக்காக மார்தட்டியவர் ம.பொ.சி.! இப்படிப்பட்ட ம.பொ.சி.யைத்தான் கும்பிட்டுப் போற்றுகிறார்கள் குணா போன்றோரும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளும்.

தமிழ்த் தேசிய கட்சிகளால் திராவிடக் கட்சிகள் செல்வாக்கு குறைகிறதா?

தமிழ்த் தேசிய கட்சிகள் எழுச்சி பெறுவதாயும், திராவிடக் கட்சிகள் செல்வாக்கிழப்பதாயும் ஆரிய பார்ப்பனர்கள் ஊடகங்களின் வழி ஓயாது முழங்கி, திராவிடக் கட்சிகளை ஒழிக்க முயல்கின்றனர். தமிழ்த் தேசியவாதிகளும் முயற்சி செய்கின்றனர்.

இதற்குக் கடந்தத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பதிலையும், பாடத்தையும் தந்துள்ளார்கள்.
இனித் தேர்தல் வந்தாலும் திராவிடக் கட்சிகள்தான் வெல்லும்.

மக்கள் திராவிடக் கட்சிகளை எதிர்க்கவில்லை. ஊழல், கொள்ளை, சுயநலம், குடும்ப ஆதிக்கம், ஆடம்பர வேடிக்கைகள், கல்விச் சுரண்டல், சாராயக் கடைகள் போன்றவற்றைத்தான் வெறுக்கின்றார்கள், எதிர்க்கிறார்கள். இவற்றைத் தவிர்த்தால் திராவிடக் கட்சிகளை என்றும் மக்கள் வரவேற்று ஆதரிப்பர்! பார்ப்பனர் சூழ்ச்சியினையும் முறியடிப்பர்!

திராவிடக் கட்சிகள் திருத்தப்பட வேண்டியவையே தவிர ஒழிக்கப்பட வேண்டியவை அல்ல என்பதைத் தமிழர்கள் சிந்தையில் கொள்ள வேண்டும்.

தமிழர்க்கான வலுவான அமைப்பைச் சிதைத்து ஆரியப் பார்ப்பன ஆதிக்கப் பாசறையான பி.ஜே.பி.யை வளரவிடாது, திராவிடக் கட்சிகளின் குறைகளைக் களைந்து பாதுகாப்பதே தமிழர்க்கும், தமிழுக்கும், தமிழகத்திற்கும் நலம் பயக்கும்! 

 -உண்மை இதழ்,16-31.3.17

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திராவிடத்தால் எழுந்தோம் என்பது தீர்க்கமான கல்வெட்டு


கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற அண்மைக்கால சிலரின் குரல் -ஆழமான  வரலாற்றுப் புரிதல் இல்லாமையாலோ -திராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டுக்கால பணியையும், பங்களிப்பையும், தாக்கத்தையும் தாண்டிக் கடைபரப்ப முடியாத விரக்தியாலோ அதன் மீது ஏதாவது குற்றப் பத்திரிகை படித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடியாலோ எழுந்த ஒன்றே!

திராவிட கட்சிகளின் ஆட்சியின் 50 ஆண்டுகள் என்பதைக் கடந்து, கடந்த ஒரு நூற்றாண்டுக்கால திராவிடஇயக்கத்தின்பிரச்சாரங்களும்,போராட் டங்களும் ஆட்சியின் விளைவுகளும் சாதாரணமான தல்ல. இன்னும் சொல்லப்போனால் கவுதம புத்தர் தொடங்கிக் கொடுத்த ஆரிய வருணாசிரம, கலாச்சார போர்த்தொடுப்பு எதிர்ப்பின் தொடர் பணியைத் தூக்கிச் சுமந்து வருவதுதான்  திராவிடர் இயக்கம்.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையை (20-12-1916) ஒருமுறை படித்தவர்களுக்குக்கூட அது தெளிவாகவே விளங்கும். சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மதம் இந்து மதம். உலகில் வேறு எங்கும் காணமுடியாத வெங்கொடுமை இது.

சென்னை மவுண்ட்ரோடு ஜார்ஜ் டவுன்களில் நாய்களும், குஷ்டரோகிகளும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பல கைகளை மாட்டி பிராமணாள் ஓட்டல்கள் நடத்தப்பட்டதே - அந்த செய்தியெல்லாம் தெரியுமா? -

பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கும் உரிமை, பொதுக் கிணறுகளில், குளங்களில் அவர்கள் புழங்கும் உரிமை, பேருந்துகளில் பயணிக்கும் உரிமை, பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் கட்டாய சேர்ப்பு, மதிய உணவுத் திட்டம் இவற்றை எல்லாம் கொண்டுவந்தது திராவிடர் இயக்கக் கட்சியான நீதிக்கட்சி அல்லவா? (1924)

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் தடையிருந்ததே. இவற்றையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் வேரோடு பெயர்த்து எறிந்த இயக்கம் எது?

இந்தியைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடித்த தலைவர்கள் யார்? இயக்கம் எது? மடாதிபதிகளையும், சைவ மெய்யன்பர்களையும்கூட வீதிக்கு அழைத்து வந்து இந்தி எதிர்ப்புப் போர் நடைபெறுவதற்குக் காரணமாய் இருந்த இயக்கம் எது? அந்த இந்தி எதிர்ப்பு கொண்டுவந்த தமிழ் மறுமலர்ச்சியை மறுக்கத்தான் முடியுமா?  நமஸ்காரம் - வணக்கம் ஆனதே! உபந்நியாசம் -சொற்பொழிவு ஆனதே! அக்ராசனாதிபதி -தலைவர் ஆனாரே! வந்தனோபசாரம் -நன்றி என மறுமலர்ச்சி பெற்றதே!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் இருந்த சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை யைக் கொண்டு வருவதற்குக்கூட திராவிடர்  இயக்கம் போராட வேண்டியிருந்ததே! அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆட்சியில்தானே! புலவர்கள் மத்தியில் இருந்த திருக்குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய திருக்குறள் மாநாடு நடத்தியவர் திராவிடர் தந்தை பெரியார் அல்லவா! (1940)

1938இல் ஆச்சாரியார் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரா இல்லையா? 1952இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோதும் 6000 பள்ளிகளை இழுத்து மூடியதோடு அல்லாமல், அரை நேரம் படித்தால் போதும். மீதி அரைநேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்தால் போதும் என்ற குலக்கல்வித் திட்டத்தைப் பூண்டோடு ஒழித்து தமிழர்களின் வயிற்றில் பாலை வார்த்த தலைவரும் இயக்கமும் எது? நீதிக்கட்சி ஆட்சியில் 10,035 பள்ளிகள் தொடங்கப்பட்டன என்பது சாதாரணமா?

பார்ப்பனர் அல்லாதார் கல்வி உரிமைக்காக முதன்முதலில் வகுப்புரிமை ஆணை கொண்டுவந்தது நீதிக்கட்சியல்லவா? அந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தபோது தமிழ்நாட்டையே போராட்ட எரிமலையாக்கி முதன்முதல் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?

தமிழ்நாட்டில் இன்று சட்டரீதியாகவே 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தச் செய்ததற்குக் காரணம் யார்? இந்திய அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் நூறு தர வரிசையில் தமிழ்நாட்டில் 37 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனவே - முதல் 16 வரிசையில் 8 கல்லூரிகள் தமிழகக் கல்லூரிகள் என்பது திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனையில்லையா?

இந்தியா முழுமைக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் -நடத்திக் காட்டியவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை ஊரும் உலகமும் அறியுமே! அதற்கு வழிசெய்த பிரதமர் வி.பி.சிங் அவர்களே அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைத் துறக்க வழி செய்த 1929ஆம் ஆண்டு மாநாட்டின் தாக்கத்தை இன்றளவும் தமிழ்நாட்டில் காண முடி கிறதே! தமிழ்நாட்டில் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கமாகக் கருதும் நிலை வேறு மாநிலங்களில் உண்டா? மார்க்ஸியத் தலைவர்கள்கூட விதிவிலக்கு இல்லையே, இந்த அறிவுப் புரட்சியை நடத்தியது திராவிடர் இயக்கம் அல்லவா? இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை (இங்கிலாந்திற்கு முன்பாகவே கூட) 1921ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி அல்லவா?

பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக உரிமை, சொத்துரிமை, விவாக ரத்து உரிமை, விதவைத் திருமணம், இராணுவத்திலும்கூட பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்று அடுக்கடுக்கான தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றியதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு, முதலீட்டில் பங்கு என்ற புரட்சிகரமான தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் யார்? மூடப் பண்டிகைகளைக் கொண்டாடிவந்த நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல்நாளை பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடச் செய்த இயக்கம் எது?

தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதி வந்தது எந்த ஆட்சியில்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சட்டம் இயற்றியது எந்த ஆட்சி?

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான் என்று சட்டம் செய்தது முதல் அமைச்சர் அறிஞர் அண்ணாதானே! ஜாதி ஒழிப்பு இணையருக்குத் தங்கமும், ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையும், நாகம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், டாக்டர் தருமாம்பாள், டாக்டர் மீனாம்பாள், டாக்டர் முத்துலட்சுமி, மணியம்மையார், சத்தியவாணிமுத்து போன்ற மகளிர் வீராங்கனைகளின் பெயரில் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங் களைத் தொகுத்து மாலையாக்கிக் கொடுத்தவர் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா?

கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், உழவர் சந்தை, முதல் தலைமுறை பட்ட தாரிகளுக்கு கூடுதல் சலுகைகள், குடிசைமாற்று வாரியம் என்று பொருளாதார வளர்ச்சித் திட்டத் திலும்கூட ஒரு சமூகநீதிப் பார்வை என்பது தி.மு.க. ஆட்சிக்கே உரித்தான தனித் தன்மையல்லவா?

தமிழர் வீட்டுத் திருமணத்திற்குத் தமிழர் தலைமை தாங்கும் அருகதையில்லை; தமிழுக்கும் ஆங்கு இடம் இல்லை என்றிருந்த அவல நிலைமைக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்திய தலைவர் யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்த ஆட்சி எது? அந்தத் திருமணம் இந்தியாவையும் கடந்து சிங்கப்பூரிலும், மலேசிய நாட்டு அரசாங்கத்தாலும் சட்ட சம்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதே. இதனை இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் மாநிலத்தில் சாதிக்க முடிந்ததா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப் பட்ட நீதிபதி  ஏ.வரதராஜன் அமர்வதற்கு வித்திட்ட தலைவர் பெரியார் அல்லவா? அதற்கு செயலாக்கம் கொடுத்தவர்முதல் அமைச்சர் கலைஞர் அல்லவா? உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியும் அவர்தான் அன்றோ!

இந்துத்துவாமதவாதம்தமிழ்நாட்டில்தலை தூக்கமுடியாமைக்கானஅடித்தளத்தைஅமைத்த -அமைத்துக்கொண்டிருக்கிற, போட்ட போட்டுக் கொண்டிருக்கிற இயக்கம் எது? பாபர் மசூதி இடிக் கப்பட்டபோதும் இந்தியாவிலேயே அமைதி காத்த மாநிலம் தமிழ்நாடு தானே!- அந்த நிலைக்குக் காரணம் யாது?

தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் இவற்றைவிட வேகமாக, மேலாகச் செய்த  இயக்கம் உண்டா? தலைவர்கள் உண்டா? வாழ்நாள் எல்லாம் திராவிடர் இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திய  ம.பொ.சி. கூட கடைசியில் அந்தத் திராவிட இயக்கத்தை சார்ந்து நின்றுதானே பதவிப் பெருமைகள் பெற்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பல சாதனைகளைப் படைத்துள்ளது. என்ன வருத்தம் என்றால், “இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்றார் அறிஞர் அண்ணா. குறிப்பாக பகுத்தறிவுக் கொள்கைகளை மக்களுக்குப் பரப்புவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்காரர்களை பெரும்பாலும் ஆஷா டபூதிகளாக ஆக்கியிருக்க வேண்டாமே! அதுவும் அ.இ.அ.தி.மு.க. அக்மார்க் முத்திரை ஆன்மிக தி.மு.க.வாகவே அவதாரம்எடுத்துவிட்டதே! ஆட்சிக் காலத்தில் திராவிட இயக்கம், சமூகநீதி தொடர்பான பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்காததும் பெரிய குறைபாடே!

- நன்றி: ‘நக்கீரன்’, ஏப், 20-22, 2017

-விடுதலை,25.4.!7

சனி, 15 ஏப்ரல், 2017

திராவிடர் யார்? சி.பா.ஆதித்தனார் கூறுவது சரியா?


===============================================
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், திராவிடர் யார் என்ற கேள்விக்கு திராவிடர்கள் என்போர் தெலுங்கர். தமிழர்கள் அல்லர் என்கிறார்.
1875 ஆண்டிற்கு முன் திராவிடர் என்பது தெலுங்கர்களை மட்டுமே குறிக்கிறது.

அந்த ஆண்டில் கால்டுவெல்தான் தமிழர்களையும் குறிப்பதாக அச்சொல்லை மாற்றினார்.
திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை என்ற தவறான கருத்துகளைக் கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனார் ஓர் இன, மொழி ஆய்வாளர் அல்ல. அவர் ஒரு வழக்கறிஞர். ஒரு பத்திரிகையாளர்.
நாம் தமிழர் கட்சி நடத்தியபோது அவர் கூறிய அபத்தக் கருத்துக்கள் இவை. அந்த நாம் தமிழர் ஆதித்தனார் பின்னாளில் திராவிட இயக்கத்தில் சேர்ந்து பதவி வகித்தார் என்பதிலிருந்தே அவரது கொள்கை உறுதி தெரியுமே!

திராவிடத்தை எதிர்த்த மா.பொ.சி. பின்னாளில் திராவிடக் கட்சியில் பதவி வகித்தார். எனவே, இப்படிப்பட்டவர்களின் பினாத்தல்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்றாலும், உண்மையை அறிய ஆதித்தனார் கருத்துக்கு மறுப்பாக உண்மைத் தகவல்களை இங்குத் தெரிவித்துள்ளேன்.

கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.
ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள்
திராவிடர்கள்...

திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.
1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு.
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை,தென்மொழிகளைக் குறிக்கப்  பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).
கியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)  என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

சமற்கிருதம் தொடர்பாக நூல் எழுதியவர்களும், திராவிட என்ற சொல்லை இனம், மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே, (Caldwell coined the) சொல்வதைவிட, அவரே கூறுவதுபோல, “The word I have chosen is Dravidan from Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், திராவிட என்ற சொல்லை  வரையறுத்த பொருளில் பயன்படுத்தி, உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதுதான் உண்மையேயன்றி கால்டுவெல்தான் திராவிடர் என்ற சொல்லை தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தினார் என்பது தப்பான செய்தி.

திராவிடத்தை எதிர்ப்போர் யார்?
திராவிடத்தை எதிர்ப்போர் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் ஆரியர்களை அணைத்து தமிழர்களோடு சேர்க்கத் துடிப்பவர்கள்.

மேலும், திராவிடக் கட்சிகளை வீழ்த்திவிட்டு, தங்கள் பதவிக்கு வரத் துடிப்பவர்கள்.
இவர்களின் பேச்சில் மயங்கி உண்மையறியாது இளைஞர் திசைமாறினால், அது ஆரியர்கள் ஆதிக்கத்திற்கும் மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடிக்கவுமே உதவும்.
தமிழர்களே எச்சரிக்கை!

பதிவு Manjai Vasanthan

திங்கள், 13 மார்ச், 2017

ஆரியர்களின் வருகை


ஆரியர்களுடன் இரத்த உறவு கொண்ட அண்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஈரானியர் சவை ஹ என உச்சரித்து அதனால் “சப்த சிந்து” பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த தமது சகோதரர்களின் நாட்டை அவர்கள் "ஹப்த ஹிந்து" என்று அழைத்து வந்தனர். அதன் சுருக்கமே ஹிந்த் என்பது அக்காலத்தில் மேற்கத்தய நாடுகளில் சிறந்து விளங்கிய கிரீஸ் நாட்டினன் 'ஹ' வை ‘அ’ என்று உச்சரித்து வந்தனர். அதனால் ஹந்து இந்து இந்த்' ஆகிவிட்டது. இன்று எங்கும் நமது நாடு இதே பெயரில்தான் வழங்கப்படுகிறது. ரிக் வேதத்தில் சப்த சிந்து என்று பல இடங்களிலும் காணப் படுகிறது. அது சில இடங்களில் ஏழு நதிகள் பாயும் பிரதேசம் என்ற அர்த்தத்திலும் வருகிறது. அந்தச் சமயத்தில் இனக்குழுக்களின் பெயரிலேயே நாடுகளின் பெயரும், ஜனபதங்களின், ராஜ்ஜியங்களின் பெயரும் அமைந்து வந்தன. இதனால் அக்காலத்தவர்கள் நாட்டையும், ராஜ்ஜியத்தையும் பன்மையிலேயே குறிப்பிட்டனர்.

ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர். இதை ஒப்புக் கொள்ளாவிட்டால் சில பிரச்சனைகள் தோன்றிவிடும். ஆரியர்கள் மொழியும், மேற்கு நாடுகளில் வாழும் மக்களின் பல்வேறு மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவையாக உள்ளன.

வெளியே இருந்து வந்தனன் என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் மேற்கு நாடுகளில் மக்கள் இந்தியா விலிருந்து சென்றவர்கள் என்று கருத வேண்டிவரும்.

இதனால் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது மிகவும் கடினம். ஆரியர் குறித்தும், இந்தோ-அய்ரோப்பிய மொழிகள் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலேயே, இப்படிப்பட்ட கருத்து தோன்றுகிறது. இதனாலேயே நம் நாட்டு வரலாற்றாசிரியர்கள் சிலர் கலியுகம் மகாபாரதக்காலம் எனக் கணக்கிட்டு சரித்திரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் கொண்டு செல்ல முயலுகின்றனர். உண்மையில் ஆசியா மைனரில் ஹித்திதரும், கிரீஸில் கிரேக்கர்களும் ஈரானில் ஈரானியரும் பிரவேசித்த காலத்தை ஆராய்ந்தால் இந்தியாவில் ஆரியர் கி.மு. 1500-க்கு முன் நுழைந்திருக்க மாட்டார்கள் என்பது புரியும்.

'ரிக் வேதத்தை இயற்றிய மிகப்புகழ்பெற்ற ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்தரரும் வெகு காலத்திற்கு பிறகு குறைந்தது 300 ஆண்டுகளுக்கு பிறகு இருந்தவர்கள்தாம் (வளரும்)

- ராகுல சாங்கிருத்தியாயன்

-விடுதலை ஞா.ம.11.3.17

செவ்வாய், 7 மார்ச், 2017

Meera Bala Murugan.. ஈழதமிழர்களின் ஒரே பிரதிநிதியாக சர்வதேசமும் அங்கிகரித்த விடுதலைப் புலிகளே அவர்கள் கியூபாவில் நடந்த புரட்சிகர இயக்கங்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மிகத்தெளிவாக தாங்கள் திராவிடர்கள் என்று கூறி பதிவு செய்துள்ளனர்.. உங்கள் பார்வைக்காக அறிக்கை..