வெள்ளி, 2 அக்டோபர், 2015

திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைப்பில்
உலகின் மூத்த மனிதனான திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திருவள்ளூர், செப். 13- இன்று தமிழ்நாடு என்றழைக்கப்படும் இந்த நிலத்தின் தொன்மையை உணர்த்தும் விதமாகவும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழிடங்களைத்தேடி சென்னையிலிருந்து ஒருநாள் சுற்றுப்பயணம் நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிடப் பண்பாட்டு, வரலாற்று இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்கெனவே தியாகராய நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் திராவிடர் இயக்க வரலாற்றோடு தொடர்புடைய இடங்களை மீள் பார்வை செய்யும் விதமாக சில நடைப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்நிலத்தின் தொன்மையை விளக்கும் விதமாக ஆதி மனிதர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றுவரத் திட்டமிடப்பட்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலப்பயணத்தின் முதல் பயணம் நடைபெற்றது.
பல்துறை அறிஞர்களுடன் பயணம்
திட்டமிட்டபடி ஜூலை 26 ஆம் தேதி, ஞாயிறன்று காலை 6:45 மணியளவில் தனி பேருந்தில், சென்னை பெரியார் திடலிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள (சென்னையிலிருந்து  90 கி.மீ தொலைவில்) தொல்குடி மக்கள் வாழ்ந்த குடியம் பகுதியை நோக்கி பல கேள்வி களுடனும், அந்தக் கேள்களுக்கு பதிலை தேடும் பயணமா கவும் புறப்பட்டது. இந்தப் பயணத்தில் மூன்று மருத் துவர்கள், பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அலுவலர்கள், பகுத்தறிவாளர்கள், தொல்லியல் துறை ஆய்வாளர்கள், கடலியல் ஆய்வாளர் என பல்துறைகளைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் கலந்து கொண்டனர். இந்த பயணத்திற்கு வழிகாட்டவும், குடியம் குகைகள் குறித்த விளக்கம் அளிப்பதற்கும் ஏற்கனவே பல முறை இக்குகைகளுக்கு வருகை தந்திருந்த கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்தார். பயணத்திட்டத்தில் பூண்டி நீர்த் தேக்கம், பூண்டி தொல்பொருள் அருங்காட்சியகம், குடியம் குகைகள், கோனே அருவி (ஆந்திர மாநிலம்) ஆகிய இடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த அரிய பயணத்தில் 15 வயதிலிருந்து 84 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலப்பயணம் என்ற பெயர் பொறித்த தொப்பி வழங்கப்பட்டது.
வரலாறும் - பொழுதுபோக்கும்
வரலாற்றையும் பொழுதுபோக்கையும் ஒன்றாக ஒருங்கிணைத்திருந்த இந்தப்பயணம் இதில் கலந்து கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், மிக அரிய கருத்துகளை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அமைந்தது. கூவம் நதி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டில் தொடங்கும் இடம், பூண்டி நீர்த் தேக்கத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு, 12 லட்சம் ஆண்டு களுக்கு முன்பு கற்கால நாகரிக மக்கள் வாழ்ந்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள குடியம் குகைகள் என்று மலையேற்றத் துடன் கூடிய வியக்கவைக்கும் பின்நோக்கிய காலப் பயணம். அதைத் தொடர்ந்து கோனே அருவியில் குளியல் என்று வரலாற்று அறிவுக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்ற வகை யில் என்றென்றும் மறக்கமுடியாத பயணமாக அமைந்து விட்டது.
கூம்பு வடிவக் குடிசை
குடியம் கிராமத்திலிருந்து குகைக்கு செல்லும் 7 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்திற்கு தயாரானோம். அந்த கிராமத்தில் இருந்த கூம்பு வடிவக் குடிசைகள் ஆச்சர்யம் தந்தன, அவை பழங்காலத்தில் மனிதன் வசித்த குடியிருப் பின் வடிவம் என்றும், இன்று அவை வீடாக இல்லாமல் அவர்களது களஞ்சியமாக உபயோகத்தில் இருந்ததையும் காணமுடிந்தது. அதை கடந்து மலைப்பாதைக்கு வந்தோம்... கூழாங்கற்கள் குவிந்த அந்த மலைப்பாதை வித்தியாசமாக இருந்தது. தொல்பொருள் ஆய்வாளர் தீபிகா, இவை கூழாங்கற்கள் மட்டுமல்ல கற்கால மனிதனின் கல் ஆயுத கிடங்காக அவ்விடம் இருந்துள்ளது என, ஒரு கல்லை எடுத்து இது ஆதிமனிதன் ஆயுதமாக செதுக்கியது, இயற்கையில் உடைந்த கல்லுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக் காட்டினார். அதைத் தொடர்ந்து ஆர்வம் தாங்காமல் மற்றவர்களும் ஆதி மனிதனின் ஆயுதத்தை கண்டறியும் ஆர்வத்துடன் அங்கு பரவியிருந்த கற்களின் குவியலில் தேடத் தொடங்கிவிட்டனர்.
குடியம் குகைகள் - ஆவணப்படம்
முன்னதாக இந்த பயணம் குறித்த ஒரு புரிதலை உண்டாக்குவதற்காக பயண நாளுக்கு முதல் நாளான ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், குடியம் குகைகள் பற்றிய ஒரு ஆவணப்படம் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா கலந்து கொண்டு இன்னும் கூடுதல் தகவல்களை கூறி சிறப்பித்த தோடு அடுத்த நாள் தொல்லியல் துறை ஆய்வாளர் குமரகுருவுடன் குடியம் குகைகளுக்கே வருகை தந்து, பிரெஞ்சு ஆய்வாளர் சாந்திபஃப் போன்றவர்களும் புரூஸ்புட், இராபர்ட்புரூஸ்  ஆகியோர் இங்கு வந்து ஆய்வு செய்திருப்பதையும், அதில் இராபர்ட்புரூஸ் மிகமுக் கியமான பங்காற்றி இங்கு கற்கால மனிதர்கள் -அதாவது 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்ததாக கண்டுபிடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறி மேலும் மேலும் வியப்படையச் செய்துகொண்டேயிருந்தார்.
கல் ஆயுதத் தொழிற்சாலை
150 ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அறிஞரான, இராபர்ட் புரூஸ் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக பல்லாவரத்தை கண்டறிந்ததாகவும் அப்போது தான் ஆதி மனிதனின் வாழ்விடமாக தமிழகத்தின் இப்பகுதி (குடியம் குகைகள்) இருந்திருக்கக் கூடும் என்ற உண்மை உணரப் பட்டு, இன்றுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியம் பகுதியின் வளமான ஆற்று படுகை யும் சூழலும் கற்கால மனிதனுக்கு ஆயுதங்களாக உறுதி யான கற்கள் கிடைத்ததால் அவ்விடத்தில் வாழ்ந்ததாகவும் தகவல் தந்தனர். குடியம் பகுதியில் தோண்டாமலேயே பூமியின் மேற்பகுதியில் கற்கால மனிதனின் ஆயுதங்கள் கொட்டிகிடப்பதால் அவ்விடம் தொல்லியல் துறையால் கல் ஆயுதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவதா கவும் கூறினார்.
வருத்தமும்? வியப்பும்!
அதுமட்டுமல்ல, 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் குடியம் குகைகள் என்று சொல்லக்கூடிய இந்த மலைப்பகுதி வரையிலுமாக கடல் இருந்ததாகவும் (தரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் உயரம்), கடல் அலைகள் அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட அரிப்பினால் இந்த குகைகள் உருவான தாகவும் கூறி அதற்கு ஆதாரமாக அந்தப்பாறைகளில் கிளிஞ்சல்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். கடற்கோள் ஏற்பட்டு கண்டங்கள் பிரிந்தபின்,  பிரிந்த கண்டங்களுக் கிடையில் கடல்நீர் நுழைந்துவிட்டதால், குடியம் மலை உச்சி வரையிலுமிருந்த கடல் உள்வாங்கி இன்று உள்ள நிலைக்குச் சென்றிருக்கிறது என்று ஒரிசா பாலு விளக்கி யதும் அனைவரும் இப்படிப்பட்ட ஒரு அருமையான இடத்தை இவ்வளவு பக்கத்திலிருந்தும் பார்க்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டும், சரி இப்போதாவது பார்த்தோமே என்று வியந்தும் போயினர்.
அடுத்த பயணம் எப்போது ?
ஒட்டுமொத்தமாக திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைக்கும் அடுத்த பயணம் எங்கே? எப்போது? என்று கலந்துகொண்ட அனைவரும் வாய்விட்டே கேட்டு விட்டனர். காலை உணவும், மதிய உணவும் பூண்டி நீர்த் தேக்கத்தில் உள்ள பூங்காவில் உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. மதிய உணவை கொள்கைப் பாச உணர்வுடன் திருவள்ளூரிலுள்ள பாரதிதாசன் மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் .உமாசங்கர் அவர்கள்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார். திரும்பும்போது, அனைவருக்கும் இந்த பயணம் குறித்த கருத்தறியும் படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. காலையில் தொடங்கிய இந்தக் காலப் பயணம் இரவு 9 மணிக்கு தொடங்கிய இடத்திற்கு திரும்பியது. இப்பயணத்திற்கான ஏற்பாடுகளை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடி வேல், தொல்லியல் ஆய்வாளர் தீபிகா மற்றும் இராமநாதன், தேவகிதாசன் ஆகியோர்  மேற்கொண்டனர்.

-விடுதலை,13.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக