திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தென் மாநிலங்கள் முழுவதும் 'திராவிட மொழிகள் நாள்' ஜனவரி 25-இல் கடைப்பிடிப்பு

 

 'நாம் திராவிடர்' அமைப்பின் முன்னோட்டக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது

v6

'நாம் திராவிடர்' (We Dravidians), 'நாங்கள் தென் இந்தியர்(We are South Indians)  அமைப்பினர் சார்பாக ஜனவரி 25ஆம் நாள் 'திராவிட மொழிகள் நாளாக'  (Dravidian Lauguages Day)  கொண்டாடத் திட்டமிடப்பட்டு அதனை நடைமுறைப்படுத்து வதற்கான முன்னோட்டக் கூட்டம் சென்னை  பெரியார் திடலில் 22.1.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது.

தமிழ்நாடு,  ஆந்திரம்கர்நாடகம்கேரளா மாநி லத்தைச் சார்ந்த அமைப்பினர் பலர் இந்தக் கூட் டத்தில் பங்கேற்றனர்கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு தலைமை வகித்தார்திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர் கலைமாமணி ஜாகிர் உசேன்பத்திரிகையாளர் 'நக்கீரன்கோவிலெனின்திராவிடர் கழகப் பொருளாளர் வீகுமரேசன் மற்றும் கூட்ட அமைப்பினைச் சார்ந்த அபிகவுடா (கன்னடம்திராவிட சுரேஷ் (தெலுங்குஅருள் பிரகாசம்ஆர்.எஸ்கதிர்சூர்யா ஆகியோர் உரையாற்றினர்.

தந்தை பெரியார் நினைவிடத்தில் 'திராவிட மொழிகள் நாளை கொண்டாடுவோம்எனும் வாசகம் பொறித்த பதாகையை தூக்கி  முழக்கம் எழுப்பிய தோழர்கள் ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலையின் முன்பு கூடி கூட்டம் தொடங்கியது.

'நாம் திராவிடர்அமைப்பினைச் சார்ந்தோர் சென்ற ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கிவீரமணி அவர்களைச் சந்தித்து 'திராவிடர்'  அடையாளம் போற்றப்பட வேண்டும்அதற்கான பரப்புரையை களப் பணியினை தாங்கள் செய்து வருவதாகக் கூறினார்கள்தமிழர் தலைவர் 'நாம் திராவிடர்அமைப்பைச் சார்ந்தவர்களை மிகவும் பாராட்டிதென் மாநிலம் முழுவதும் இந்த திராவிடர் உணர்வுகள் பலப்பட வேண்டும்அதற்கான பணியினை அவசியம் மேற்கொள்ளுங்கள் என ஊக்கமூட்டினார்.

கன்னட மொழி பேசும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சார்ந்த அபிகவுடா இதற்கான முயற்சிகளை திராவிடர் மொழிகள் பேசும் தோழர்களுடன் மேற்கொண்டார்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளைப் போற்றி வீர வணக்க நாள் - ஜனவரி 25 நிகழ்ச்சிகள் தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறதுஇந்தித் திணிப்பை எதிர்த்து பல தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் கர்நாடகம்,  ஆந்திரம்கேரளா மாநிலங் களிலும் இப்பொழுது வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டனமொழி அடிப்படையில் திராவிடர்கள் பிரிக்கப்பட்டுஇந்தி  சமஸ்கிருத திணிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில் திராவிட மொழிகளான தமிழ்தெலுங்குகன்னடம்மலையாளம்துளு ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் பணியாக ஜனவரி 25ஆம் நாளே "திராவிட மொழிகள் நாள்என தென்  மாநிலங்களில் கூட்டம் நடத்திட உள்ளதை  'நாம் திராவிடர்அமைப்பினர் தெரிவித்தனர்மொத்தம் 127 மாவட்டங்களில் 'திராவிட  மொழிகள் நாள்கொண்டாடப்பட உள்ளதுதொடர்ந்து ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் மட்டும் வீர வணக்கம் செலுத்தும் நாளாக கடைப்பிடிக்கப்படுவது அனைத்து தென் மாநிலங்களிலும் - திராவிட மொழிகள் பேசும் மாநிலங்களிலும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க் கும்  உணர்வாக வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்இதற்குத் தமிழ்நாட்டில் குறிப்பாக திராவிட இயக்கங்களின் ஆதரவினை பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய கழக செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு அவர்கள் இந்தித் திணிப்பானது அன்று தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று தமிழர் தலைவரின் காலத்திலும் எவ்வாறு எதிர்க்கப்பட்டது என்பதைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்கலை மாமணி  ஜாகீர் உசேன்கலைத் தளத்தில்பண்பாட்டுத் தளத்தில் இந்தி  எதிர்க்கப்பட வேண்டும்அதற்கு திராவிட மொழிகளின் அடையாளம் வெகுப் பொருத் தம் எனக் கூறினார்பத்திரிகையாளர் நக்கீரன் கோவிலெனின், 'திராவிடம்என்பது தென் மாநிலங்கள் மட்டும் சார்ந்தது அல்லஇந்தியா முழுவதும் 'திராவிடஅடையாளத்தின் சின்னங்களைப் போற்றக் கூடிய மக்கள் - குறிப்பாக தொல்குடி மக்கள்  வாழ்ந்து வரு கின்றனர்எடுத்துக்காட்டாக 'ராம்லீலாஎன ராவண உருவத்தை எரிக்கும் ஆதிக்க மனப்பான்மையை விட ராவணனைப் போற்றும் பல நிகழ்ச்சிகள் ஆக்க  ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினர்தொடந்து 'திராவிடஅடையாளம் போற்றப்படும். 'திராவிடம் வெல்லும்என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பலரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள்வழக்குரைஞர் பாமணியம்மைசெந்துறை ராஜேந்திரன்கோசுரேஷ்வைகலையரசன்கலைமணி மற்றும் நாம் திராவிடர்  அமைப்பினைச் சார்ந்த தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொகுப்புவீகுமரேசன்

வெள்ளி, 21 ஜூலை, 2023

திராவிடப் பல்கலைக்கழகம்


ஆந்திரப் பிரதேசத்தில், சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் குப்பம் என்னும் இடத்தில்..

திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது..

இந்தப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் கர்நாடக அரசுகளின் உதவிகளுடன் நடைபெறுகிறது.

இங்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழிகளின் வரலாறு, தத்துவம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி போன்ற துறைகள் உள்ளது..

இன்னும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.. இந்தியத்துணைக்  கண்டத்திலேயே..!

ஒரு மொழி குடும்பத்திற்காக செயல்படும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது
திராவிடப் பல்கலைக்கழகம் மட்டும் தான்..

திராவிட இனத்தின் முதல் குடியே தமிழர்கள், திராவிட இனத்தின் மூத்த மொழியே தமிழ் தான்..

அதை அடையாளமாகக் கொண்டே, இந்த பல்கலைக்கழகத்தின் லோகோ வை, வடிவமைத்து உள்ளார்கள்..

www.dravidanuniversity.ac.in
திராவிட பல்கலைக்கழகத்தில் ஆந்திர நாத்திக சங்கத்தினர்

ஞாயிறு, 11 ஜூன், 2023

“திராவிடர்’’ என்பது ஆரிய பார்ப்பனர்க்குரிய சொல்லா?

 

“திராவிடர்’’ என்பது ஆரிய பார்ப்பனர்க்குரிய சொல்லா? – மஞ்சை வசந்தன்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே 1-15,2023

தமிழ்த் தேசியம் பேசும் ஆரிய பார்ப்பன கைக்கூலி பேர்வழிகள் சிலர், திராவிடர் என்பதை பார்ப்பனர்க்குரிய சொல்லாகக் கூறுகின்றனர். அதற்குச் சான்றாக ‘திராவிட்’ என்ற பெயர் பார்ப்பனர்க்கு இருப்பதாகக் காட்டுகின்றனர். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் திராவிட்டை அவர்கள் குறிப்பிட்டு தங்கள் கருத்துச் சரியென்கின்றனர்.

ஆனால், இவ்வாறு கூறுவது அறியாமையின் அடையாளம். ஆரிய பார்ப்பனர்கள் அயல்நாட்டிலிருந்து வந்து, இந்தியாவிற்குள் நுழைந்து மெல்ல மெல்ல பரவினர். அப்படி வந்தவர்கள் பெண்-களுடன் வரவில்லை. இங்-குள்ள மண்ணின் மக்களின் பெண்களோடு சேர்ந்தே தங்கள் வாரிசுகளைப் பெற்-றனர். அதன்படி இந்தியாவில் இருக்கும் எந்த ஆரிய பார்ப்பனரும் தூய ஆரிய இனத்தவர் அல்ல; அத்தனை பேரும் கலப்பில் பிறந்தவர்களே!

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்ததும் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர். இந்திய மண்ணின் மக்களான தமிழர்கள் பிச்சை கேட்ட ஆரியர்களைப் பார்த்து “நீங்கள் யார்?’’ என்று கேட்டபோது, “பரதேசி’’ என்று பதில் கூறினர். பரதேசி என்றால் பிற நாட்டான் என்று பொருள். அந்த பரதேசி என்றே சொல்லே பிற்காலத்தில் பிச்சையெடுக்கின்றவர்களுக்கு உரிய சொல்லாக மாறிவிட்டது.

வாயில் காக்க கூர்க்க இனத்தவரை அழைத்து வந்து பணியமர்த்தினர். பிற்காலத்தில் ‘கூர்க்கா’ என்ற சொல் வாயில் காக்கின்றவர்களுக்கு உரிய பொதுச்சொல்லாக மாறியது போலவே, ஆரியர்க்குரிய பரதேசி என்ற சொல் பிச்சைக்காரர்களுக்குரிய பொதுச்சொல்லாக மாறியது.

இப்படி பிச்சையெடுத்து வாழ்ந்தவர்கள், அதே பிச்சையை கவுரவமாக எடுக்க சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கி, நம் மக்களிடம் பொருட்களைப் பெற்று வாழ்க்கை நடத்தினர். வட இந்தியாவில் நுழைந்தவர்கள் மெல்ல மெல்ல தெற்கு நோக்கிப் பரவி இறுதியில் தென்னிந்தியப் பகுதியிலும் பரவினர். முதலில் ஆந்திரப் பகுதியிலும், பின்னர் கன்னடப்பகுதியிலும், இறுதியாக கேரளப் பகுதியிலும் அதிகம் பரவினர். தமிழகத்தில் மட்டும் அதிகம் பரவ இயலவில்லை. ஓரளவிற்குப் பரவியதும் சோழர் பகுதியில்தான். பாண்டியர் பகுதியில் அதிகம்
பரவ பாண்டியர்கள் அனுமதிக்கவில்லை. சோழர்கள் ஆரியர்களை அணைத்து ஆதரித்தபோது பாண்டியர்கள் ஆரியர்களை எதிர்த்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியனே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
பிற்காலத்தில் ஆரியர்கள் இந்தியா முழுக்க பரவி வாழ்ந்தபோது திராவிடப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர்களை வடஇந்தியாவில் வாழ்ந்த பார்ப்பனர்கள் திராவிட் என்று அழைத்தனர். இங்கு ‘திராவிட்’ என்பது இனத்தைக் குறிப்பதல்ல; ஆரியர் வாழ்ந்த இடத்தைக் குறிப்பது.

வடஇந்தியப் பகுதியை-கவுட தேசம் என்றும் தென்னிந்தியப் பகுதியை திராவிட தேசம் என்றும் ஆரியர்கள் அழைத்தனர். அதனடிப்படையில் திராவிடப் பகுதியில் வாழ்ந்த ஆரியர் என்பதனைக் குறிக்க ‘திராவிட் என்றனர். திராவிட மக்கள் மிகுதியாய் வாழும் பகுதியென்பதால் அது திராவிட தேசம் எனப்பட்டது.
இதை காஞ்சி மடத்து பெரிய சங்கராச்சாரியே ஒப்புக்கொண்டு கூறுகிறார்.

“நமது நாடு 56 தேசங்களைக் கொண்டது என்று சொல்லுவார்கள். நர்மதைக்கு வடக்கே இருப்பதை கௌட தேசம் என்றும், நர்மதைக்குத் தெற்கே இருப்பதைத் திராவிட தேசம் என்றும் கூறுவர்’’ என்கிறார்.
(காஞ்சி மே.6, 1954)

இச்செய்தி ‘திராவிட நாடு’ 16.05.1954 இதழில் 9ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 44ஆவது சுலோகத்தில், திராவிடம் என்பது இடப்பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பௌண்டம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தாதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய்விட்டார்கள்’’ என்கிறது மனுசாஸ்திரம்.
ஆக, சங்கராச்சாரியின் கருத்துப்படியும், மனுதர்ம சாஸ்திரபடியும் திராவிடம் என்பது இடம்; திராவிடப் பகுதியில் வாழ்ந்த பார்ப்பனர் என்பதன் அடையாளமாய் திராவிட என்று பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை. மாறாக, போலித்தமிழ்த் தேசியவாதிகள் திரித்துக்கூறுவதுபோல திராவிட என்பது ஆரிய பார்ப்பனரைக் குறிக்கும் சொல் அல்ல.

இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் தமிழர்களே வாழ்ந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட அனைத்துப் பகுதியிலும் தமிழே பேசப்பட்டது. பின்னால் ஆரியர் மொழி, இஸ்லாமியர் மொழியும் கலந்து ஹிந்து, வங்காளி, பீகாரி, குஜராத்தி, மராட்டி போன்ற மொழிகள் வடஇந்தியாவில் உருவாக, தென்னிந்திய பகுதியில் தமிழோடு சமஸ்கிருதம் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாக, தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் தனித்து நிலைத்தது.

உண்மை நிலை இப்படியிருக்க, தமிழ்நாட்டில் உள்ளவர்களை மட்டுமே ஓரினமாகக் காட்டுவது தப்பான கருத்து. தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும் அவர்களும் தமிழினத்தவரே. ஆனால் அவர்கள் தற்போது மொழியால் மாறுபட்டிருப்பதால், தமிழர் என்ற அழைக்க முடியாத நிலையில் பொது இனப்பெயரால் திராவிடர்கள் என்று அழைக்கிறோம். தற்போது திராவிடம் என்பது ஆரிய கலாச்சாரத்திற்கு எதிரான பண்பாட்டின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. எனவே, திராவிடம் என்பது ஆரியத்திற்கு உரியது அல்ல. ஆரியத்திற்கு எதிரானது.

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ !

“திராவிடம் - தமிழ் தேசியம் குறித்த சர்ச்சைகள் தற்போது அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே?’’ என்று திருமாவிடம் ‘ஆனந்தவிகடன்’ கேட்டதற்கு,
“ஒவ்வொருவரும் அவரவர் காலத்துக்கு ஏற்பதான் அரசியல் செய்ய முடியும். 1956க்கு முன்பு நாம் பிறந்திருந்தால், தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்திருக்காது; சென்னை மாகாணம் என்றுதான் இருந்திருக்கும். ஆக, அந்த சென்னை மாகாணத்துக்கான திராவிட அரசியலைத்தான் நாம் உயர்த்திப் பிடித்திருப்போம். 

அதேபோல், இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் பிறந்திருந்தால், நானும்கூட சுதந்திரப் போராட்டப் போராளியாகத்தான் இருந்திருப்பேன்.

ஆனால், மொழிவழி மாநிலம் என்று பிரிக்கப்பட்ட பிறகு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட்ட நிலப்பரப்பில் பிறந்த நான் இன்றைய சூழலுக்கு ஏற்ப பேசிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலை அன்றைக்கே பெரியார் பேசியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பதோ அல்லது ‘பெரியார் பேசியது தவறு’ என்று விமர்சிப்பதோ புரிதல் குறைவாகவே பார்க்கிறேன்’’ என்ற பதில் அளித்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியம் பேசி பெரியாரைக் கொச்சைப்படுத்தும், பேர்வழிகளுக்கும் இத்தெளிவு வேண்டும்.

திராவிடம், திராவிடர் என்ற சொல்லை நாம் பயன்படுத்துவது ஆரிய பார்ப்பனர்கள் தாமும் தமிழர்கள் என்று சேர்ந்து தமிழர் உரிமையை, போர்த் தீவிரத்தைக் கெடுக்கக் கூடாது. இனத்தால் ஆரியர் வேறானவர் என்பதைக் காட்டவே.
மற்றபடி திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, தமிழர்களுக்காகத்தான் போராடுகிறார்களே தவிர கன்னடர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ, மலையாளிகளுக்கோ அல்ல என்பதைச் சிந்தித்துப் பேச வேண்டும். 

தமிழக மக்களும் இத்தெளிவைப் பெற வேண்டும். இது சார்ந்த யார் என்ன விளக்கம் கேட்டாலும் சொல்லத் தயாராய் உள்ளேன்.

தமிழர்க்காக, தமிழர் சிறப்பை, உரிமையை மீட்பதற்காக, தமிழர் ஆட்சியை அமைப்பதற்காக முயற்சிக்கின்றவர்கள். அவர்களின் செயல்பாடுகளின் வழி மக்களின் (தமிழர்கள்) ஆதரவைப் பெறவேண்டுமே தவிர, தமிழர்களுக்காகப் பாடுபடக்கூடிய மற்றவர்களை கொச்சைப்படுத்துவது, தமிழர்க்கு எதிரிகளாகக் காட்டுவது கூடாது. அப்படி செய்வது சுயநல அரசியலாகுமே தவிர, உண்மையான தமிழ்ப் பணியாகாது!

   #மீள்பதிவு
- 'இசை இன்பன்' முகநூல் பதிவு, 27.04.23

ஞாயிறு, 12 மார்ச், 2023

‘திராவிடர்’ வார்த்தை விளக்கம்

 

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப் பட்டேன். 

 திராவிடர் கழகம் ஏன்? 

 உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படுகிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் ‘திராவிடர்’ என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. 

இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். அவற்றிற்கு உங்களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்துகொள்ளா விட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சியையும் கெடுக்கப் பார்ப்பார்கள். இதுவே எதிரிகளின் வழக்கம். 

திராவிடம் - திராவிடர் என்பது 

திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் கி,ஙி,சி ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. 

இதுகூட ஏன்? 

இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்பட வேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்து வருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்ப தாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிரயாயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண் டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப் படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், 

ஏற்பட்ட கெடுதி 

அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச்சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை.  இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டு விட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். 

சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங் களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரி மையும் சமபங்குமுள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடு கிறார்கள். அப்படிக்கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக்கொண்டவனே யாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடி யாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், “பிராமண”னுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடு பட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத் திற்கும் ஒத்த உண்மையாகும் இது. 

திராவிடர் என்பதின் கருத்து 

இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன்.  நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்யம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். 

ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். 

கலந்துவிட்டது என்பது... 

ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்துவிட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். 

ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். 

நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும். திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்கு வதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத்தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப் போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவைகள் அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். 

உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமியனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்துவிட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? 

இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண்டவைகளும் நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். 

சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச்சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாச வேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவைகள் இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக் காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சியால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். 

மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவைகள் மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். 

இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளைஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக்கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள். அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவைகளைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டுபிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். 

(09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945