வியாழன், 25 ஜனவரி, 2018

திராவிடம் என்பது வரலாற்றுச் சொல் ஆதாரக் குவியல்கள் -2


ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்.


இது டாக்டர் ராதா குமுத்முகர்ஜீ எம்.ஏ., பி.எச்.டி. எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால், ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.

இது ராதா குமுத்முகர்ஜீ எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை.

இது சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலிஷ் அகராதியின் பக்கம் 67-டி-யில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.

தமிழர்கள் ஆரியர்களை வடவர் வடநாட்டவர் என்று அழைத்தார்கள். ஏனெனில் ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய தென் இந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3-ஆது பக்கத்தில் இருக்கிறது.

ராமாயணத்தில் தென் இந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.

இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்து பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய இந்தியா அன்றும், இன்றும் என்னும் புத்தகத்தில் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.

இது ஸி.தாஸ், எம்.ஏ.,பி,எல், எழுதிய ரிக் வேதகாலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.

- இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ. அண்டு எம்.எல். ராமசாமி அய்ங்கார் எம்.ஏ. ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில், இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தில் 105-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவைகளில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதன குடிகள்.

இது “New Age Encyclopedia,  (நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா Vol. II 1925)  பக்கம் 237-இல் இருக்கிறது.

ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் பத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.

இது இ.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம் என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

பாரதத்தில் இடும்பி என்று ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால், ராட்சசி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கின்ற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பானின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும் என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கம்.

ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.

இது பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

இது பால்மாசின் அவர்செல் எழுதிய  புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நேரம் ஆகஸ்ட் 01, 2017


- பெரியாரியம் வளைப்பூ பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக