சனி, 27 ஜனவரி, 2018

திராவிடம் என்பது வரலாற்றுச் சொல் ஆதாரக் குவியல்கள் -_ 1

திங்கள், 17 ஜூலை, 2017

திராவிட நாட்டுக்கு ஆரியர்கள் குடியேறித் திராவிடர்களை அடக்கிக் கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடர் நாட்டுக்கு வருவதற்கும் முன் திராவிட நாடு கலைகளிலும், நாகரிகத்திலும்  தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும், நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும், இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திராசிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

மேற்குத் திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர்களாவார்கள். அவர்களது பாஷை சமஸ்கிருதம் போன்றது, இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படித் தங்கள் பாஷையிலேயே எழுதிவைத்துக் கொண்டார்கள்.

என்று சர்  என்றி ஜான்ஸ்பட்டளர் என்கின்ற பிரசித்திபெற்ற ஆராய்ச்சியாளர், இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தில் 19-ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.    ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள்.

இது ராகேஸ் என்னும் பேராசிரியர், வேதகால இந்தியா என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

வட இந்தியாவில் இருந்து திராவிட கலை நாகரிகம் முதலியவைகள் யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன, ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் செய்ய முடியவில்லை,

இது பண்டைத் தமிழரின் வரலாறு என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது. ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிகொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி திராவிடர்களுக்கு தஸ்யூ என்றும், ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், ராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்.

இது சர் வில்லியம் வில்ஸன் ஹெனர் டாக்டர் கே.சி.எஸ்.அய். சி.அய்.ஈ. எல்-லய-டி எழுதின இந்திய மக்களின் சரித்திரம் 41-ஆவது பக்கத்தில் இருக்கிறது. பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாகச் சகல விஷயங்களையும் உட்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்றபடிக் கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே எழுதிகொள்ளப்பட்டவைகளாகும்.

இது பிரபல சரித்திராசிரியரான என்றி பெரிட்ஜ் என்பவரால் 1865-ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15-ஆம் பக்கத்தில் இருக்கிறது.

பாரத, ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ரட்சதர்கள், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தைப்) பற்றியேயாகும்.

இது ராலின்சன் சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும்  புத்தகத்தில் 153-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ இந்திரனே! அவர்களைக் கொல்லு.

என்பது ஆரியர்களின் பிரார்த்தனையாகும். இது ரிக் வேதம் 10-ஆம் அதிகாரம் சுலோகம் 22-8-இல் இருக்கிறது.

இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909-ஆம் வருஷ வால்யூம் 1 - பக்கம் 405-இல் இருக்கிறது.

தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

இது ரோமேஸ் சந்திர டட் சி.அய்.ஈ., அய்.சி.எஸ். எழுதிய புராதன இந்தியா என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் என்னும் புத்தகத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது. ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றிபெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய திராவிடரும் ஆரியரும் என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது. ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.

இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய பண்டைய இந்தியாவின் நாகரிகம் என்ற புத்தகத்தின் 139-141-ஆவது பக்கங்களில் இருக்கிறது.

தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டடிருக்கிறார்கள்.

இது சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் என்ற புத்தகத்தில் ராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் இருக்கிறது.

ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.

தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்) கொடுத்த பெயராகும்.

இது 1922-ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில் இருக்கிறது 

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு -தந்தை பெரியார்)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

நேரம் ஜூலை 17, 2017

-பெரியாரியம் வளைப்பூ பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக